Monday, December 30, 2013

தெய்வானை திருக்கல்யாணம் பங்குனியில் நடத்துவது ஏன்?

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு, தனது மகள் தெய்வானையைத் திருமணம் செய்து தர முன் வந்தான் தேவர்களின் தலைவனான இந்திரன். இந்த நிகழ்ச்சி "கந்தசஷ்டி' திருவிழாவாக, ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. அங்கு, சம்ஹாரத்திற்கு மறுநாளே, தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆனால், திருப்பரங்குன்றத்தில் பங்குனி சுவாதி நட்சத்திரத்தில் திருமணம் நடக்கிறது.
ஸ்கந்தபுராணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியவர் வியாசர். தமிழில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதியுள்ளார். இந்த புராணத்தில் ஒரு காட்சி...
சூரசம்ஹாரம் முடிந்ததும், இந்திரன், முருகனிடம், வெற்றிப்பரிசாக, தன் மகள் தெய்வானையை மணம் முடித்து கொடுக்க விரும்புவதாகக் கூறுகிறான். முருகனும் அதை ஏற்று, "நாளையே திருமணம் நடக்கட்டும்' என்கிறார்.
ஆனால், "திருப்பரங்குன்றத்தில் திருமணத்தை நடத்தலாமே' என்கிறான் இந்திரன். உடனே படைகளுடன் முருகன் கிளம்புகிறார். தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்த இந்திரன், திருப்பரங்குன்றத்தில் ஒரு அழகிய நகரையும், திருமணப் பந்தல் உள்ளிட்டவற்றையும் நிர்மாணிக்க கட்டளையிடுகிறான். விஸ்வகர்மாவும் அந்தப்பணியைச் செய்கிறார்.
முருகன் சொன்னபடி மறுநாளே திருமணம் என்ற வகையில் திருச்செந்தூரில் திருமணம் நடக்கிறது. ஒரு நகரை நிர்மாணித்து, அங்கே நடத்த கால அவகாசம் வேண்டும். அந்த அடிப்படையில், திருப்பரங்குன்றத்தில் பங்குனி மாதம் திருமணம் நடத்தப்படுகிறது. புராணத்தில், இரு மாறுபட்ட தகவல் இருப்பதால் ஏற்பட்ட மாற்றமே இது.
மதுரையில், மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா, ஒரு காலத்தில் மாசி மாதம் தான் நடத்தப்பட்டது. ஆனால், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சோழவந்தான் அருகிலுள்ள தேனூரில் சித்திரை மாதமே நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியை மதுரைக்கு மாற்றியவர் திருமலை நாயக்கர். மீனாட்சி திருவிழாவையும், அழகர் திருவிழாவையும் இணைத்து, சித்திரையில் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்தார். இதுபோன்ற மாற்றங்கள், பாண்டிய மன்னர்களால் திருப்பரங்குன்றத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

No comments:

Post a Comment