Wednesday, December 2, 2015

புருஷா மிருகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

புருஷா மிருகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அதன் கால்கள் மட்டும்தான் புலிக்கால் போன்றிருக்கும். உடலோ மனித உரு. சிறந்த சிவபக்தை. ஆதலால், விஷ்ணு என்ற பெயர் காதில் விழுந்தாலே பாபம் என்று எண்ணியது. ஒரு முறை, பஞ்சபாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்ய நிச்சயித்தார்கள். அதற்கு புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர பீமனை அனுப்பினார் கிருஷ்ண பரமாத்மா. அதன் பலத்தைப்பற்றி எச்சரிக்கை செய்தபோது, `கேவலம், ஒரு மிருகத்தை என்னால் அடக்க முடியாதா!’ என்று கர்வத்துடன் புறப்பட்டான் பீமன். புறப்படுமுன், கண்ணன் அவனிடம் பன்னிரண்டு ருத்ராட்சமணிகளைக் கொடுத்தார். எதற்கென்று கூறவில்லை. பீமனும் காட்டுக்குப் போனான், `கோபாலா, கோவிந்தா’ என்று பாடியபடி. அங்கு சிவனைத் தியானம் செய்துகொண்டிருந்த புருஷா மிருகத்தின் காதில் இந்த `கேட்கக் கூடாத’ வார்த்தைகள் விழவும், அது ஆக்ரோஷமாக அவன்மேல் பாய்ந்தது. பீமனால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அப்போது மாதவன் கொடுத்தனுப்பிய ருத்ராட்சங்கள் ஞாபகம் வர, ஒன்றை எடுத்துத் தரையில் வைத்தான். மிருகம் உடனே தன் ஆத்திரத்தை மறந்தது. பக்தி பெருக, அதற்குப் பூசை செய்ய ஆரம்பித்துவிட்டது. இதுதான் சமயமென்று, பீமன் தப்பித்து ஓடினான். நடந்ததிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாது, மீண்டும் `கோபாலா, கோவிந்தா’ என்று பாட, புருஷா மிருகம் அவனைத் துரத்தலாயிற்று. இப்படியே இருவரும் `ஓடிப்பிடிச்சு’ விளையாடி, இறுதியில் யாகசாலைக்குள் ஒரு காலையும் வைத்து விட்டான் பீமன். ஆனால், அதற்குள் அவனுடைய ஒரு காலை மிருகம் பிடித்துவிட்டது. `இது எனக்குத்தான் சொந்தம்!’ என்று அது உரிமை கொண்டாட, தருமர் வந்தார். தன் தம்பியின் கால் என்றும் பார்க்காது, பெயருக்கேற்றபடி, புருஷா மிருகத்தின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து, `நீ பிடித்த கால் உனக்குத்தான்! எடுத்துப்போ!’ என்று தருமர் நியாயம் வழங்கினார். புருஷா மிருகம் யோசிக்க ஆரம்பித்தது. `கோபாலா’ என்று பீமன் பாடித் துதித்ததோ விஷ்ணுவின் அவதார புருஷனான கிருஷ்ணனை. ருத்ராட்சம் சிவனின் வியர்வைத் துளியிலிருந்து வந்தது என்பார்களே! அதை பீமனிடம் கொடுத்திருப்பது அந்த கிருஷ்ணன். அப்படியானால், சிவனும், விஷ்ணுவும் ஒருவர்தானே! தெளிவு பிறக்க, `உங்களுக்கு என்னால் என்ன ஆகவேண்டும்?” என்று பணிவன்புடன் கேட்டு, தன் பாலை வழங்கியது. (புருஷா மிருகத்தைப்பற்றி பகவத் கீதையின் இறுதி அத்தியாயத்தில் எழுதப்பட்டிருந்ததாம். ஆனால் சிவ பக்தர்களும், விஷ்ணு பக்தர்களும், இந்த இரு தெய்வங்களும் ஒன்றே என்று ஒப்புக்கொண்டால், நாம் சண்டை பிடிக்க முடியாதே என்று அதை நீக்கிவிட்டார்களாம். இன்றளவும், திருநெல்வேலி கோயில்களில் அதன் சிலைகள் இருக்கிறது என்று படித்திருக்கிறேன். பாலித்தீவில், நாங்கள் தங்கிய விடுதியின் நுழைவாசலிலேயே பார்த்திருக்கிறேன். பெண் வடிவில், மார்பகங்களுடன், புலிக்கால் முன்னால் தெரிய, முழங்காலை மடக்கியபடி உட்கார்ந்திருக்கும்). நீதி: பீமனது கர்வம் ஒடுக்கப்பட்டது; தன் குறுகிய பார்வையிலிருந்து மீண்டு, புருஷா மிருகம் `சிவாய நம ஓம் நாராயண ஓம்’ என்று, துதிக்க ஆரம்பித்தது. தமது அழகிலோ, பலத்தாலோ, வேறு எதனாலோ கர்வப்படுபவர்களுக்கும், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கும் இது நல்ல பாடம்.

No comments:

Post a Comment