Monday, December 7, 2015

இதுவும் கடந்து போகும்” ...

இதுவும் கடந்து போகும்” ...
................................................
ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.
தொடர்ந்து புத்தரை நோக்கி,
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்.
நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.
உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்.
மௌனமாக சிரித்த புத்தர்,
“இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்ள் அசைபோட்டது.
நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.
அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..
ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சோர்ந்துவிட மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள்..
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.
“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்.
கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் ,
அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.
வெற்றி நிச்சயம்…

No comments:

Post a Comment