Thursday, December 17, 2015

மன்மதனின் காமத்தை பேரின்பமாக்கும் வித்தையின் இரகசியம்

மன்மதனின் காமத்தை பேரின்பமாக்கும் வித்தையின் இரகசியம்
காமம் என்பது மனிதன் பேரின்பம் பெறுவதற்கான திறவுகோல். இதன் அடிப்படையிலேயே ரதி மன்மதன் சாதனை ஸ்ரீ வித்தையில் உள்ளது. இதன் அடிப்படையினை புரிந்துகொண்ட சாதகன் காமத்தினை விலக்காமல் உயர்ந்த யோக சக்தியாக்கி கொள்ளமுடியும். இதற்கு உடல், மனம், பிராணன் ஆகியவற்றை பற்றிய சூக்ஷ்ம புரிதல் அவசியம். இங்கு இதன் சுருக்க இரகசியங்களை விளக்குகிறேன்! இந்த அடிப்படையிலேயே சித்தர்களது ஸ்ரீ வித்தை இரகசியங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சிவத்திலிருந்து பிரிந்து வந்த மூலசக்தி பிரகிருதி எனப்படும். இந்த மூலசக்தி அண்டத்திலும் பிண்டத்திலும் பிராணனாக வியாபித்திருக்கிறது. இந்த பிராணன் இயங்கும் தன்மையுடைய சக்தியாகும். ஆணின் மனித உடலில் மூலசக்தி சிவமான விந்து எனப்படும் ஸப்த தாதில் உறைந்துள்ளது. இந்த விந்துவே அண்டத்தில் சிவம் எனப்படும் பிந்துவின் பிண்ட வடிவமாகும். பிரஞ்சத்தின் மூலவடிவம் மூலப்பிரக்ருதியும் சிவமும் இணைந்த வடிவமாகும். ஆனால் மாயா சக்தியின் ஆற்றலால் சிவமும் சக்தியும் பிரிந்த நிலையிலேயே அண்டமும் பிண்டமும் காணப்படுகிறது. இந்த இணைப்பே யோக சாதனை, ஞான சாதனை, முக்தி, பேரின்பம் என அழைக்கப்படுகிறது. ஆக அண்டத்திற்கு மூலமான சிவம் ஆணின் மனித உடலில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்து ஆகவும், பிராணன் ஆகவும் இருக்கிறது. இதனை ஆன்மா என்ற உணர்வுடன் இணைக்கத்தெரிந்தால் முக்தி கிடைக்கும் என்பதே இதன் அடிப்படை. இதுவே மூல சக்தி நிலை எனப்படுவது.
காமசக்தி பௌதீகமாக மனித இனத்தை விருத்தி செய்வதற்கும், மனததளத்தில் பெண்ணுடன் காதல் எனும் இன்ப உணர்வினை பெறுவதற்கும், அடிப்படை ஆக்க சக்தி – கிரியா சக்தி பெறவும் உதவுகிறது. அண்டத்தில் எல்லா காரியமும் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருக்கும் கிரியா சக்தி பிண்டத்தில் காம சக்தியாக இயங்குகிறது.
காமத்தினை தனது பெண் துணையுடனோ அல்லது தனியாகவோ பிராணனுடன் இணைத்து ஆன்மாவில் சேர்க்கத் தெரிந்தால் அதுவே முக்தி! பேரின்பம்.
ஆணில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்துவே சக்திக்கான மூலமாகும். ஆணின் விந்து என்பது சப்தாதுக்கள் ஒன்றின்பின் ஒன்றாகிய சாரமாகும். இதனை அளவுக்கு அதிகமாக வீணாக்கும்போது அது மனிதனது நோய் எதிர்ப்பு சக்திதொகுதியிலிருந்தும் நாளமில்லா சுரப்பி தொகுதியிலிருந்து தனது செலவீனத்தை ஈடு செய்து கொள்கிறது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் பாதிக்கும் நிலை ஏற்படும்.
விந்தினை வீணாக்காமல் சேமிப்பதே முதல் படியாகும். தனது சந்ததியினை உருவாக்குவது தவிர்ந்து விந்தினை வீணாக்குவது பெரும் மதிப்புமிக்க செல்வத்தை வீணாக்குவது என்று ஆயுள்வேத சித்த மருத்துவ நூற்கள் கூறுகின்றன. இப்படி நீண்டகாலத்திற்கு வீணாக்கப்படும் விந்து சக்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இல்லாதாக்குவதுடன் மனம் உணர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை பொதுவாக காரணமின்றி பெண்களை வெறுப்புணர்வுடன் பார்த்தல், வக்கிரமான மனநிலை, பயம், பதட்டம் என்பவற்றை உருவாக்கும். மேலும் ஆன்மீக சாதனையில் முன்னேறி செல்லும்போது உருவாகும் அமிர்தம் எனப்படும் தெய்வீக கிரணங்களை உடல் ஏற்க முடியாத நிலை ஏற்படும். இதனாலேயே யோக சாதனையில் விந்து கட்டுப்பாடு முக்கியமான ஒன்றாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக விந்தினை பலவந்தமாக இயற்கைக்கு மீறி அடக்குதலும் வீணாக்குவதால் ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது ஆரம்ப நிலையில், விந்தினை உயர்ந்த தெய்வீக சக்தியாக மாற்றும் உத்தி தெரியாமல் அதீதமாக அடக்குவதும், வீணாக்குவது இயற்கைக்கு மாறானா ஒன்று. அதாவது நெல்லினை விதைத்து தக்க பருவத்தில் அறுவடை செய்து, மீண்டும் விதைக்கு நெல்லினை சேமிப்பதுடன், குத்தி அரிசியை சோறாக்கி கறியுடன் சுவையாக உண்பத்னை உதாரணமாக கொள்ளவும்.
காமம் இயற்கையானதும், அனைவருக்கும் தேவையானதும், ஆரோக்கியமான ஒன்றுமாகும். இதனை வெறுமனே மேலோட்டமாக விந்து நீங்கி உடல் சார்ந்த இன்பமாக அனுபவிப்பதை விட உயர்ந்த பேரின்பமாக விந்தினை நீக்காமல் எப்படி அனுபவிப்பது என்பதனை அறிவதே இந்த யோகத்தின் இலக்காகும்.
சேமித்த விந்தினை பிராணனுடன் இணைத்தல் இரண்டாவது படியாகும். உடலுறவின் உச்சகட்டத்தில், விந்து நீக்கம் நடைபெறுவதற்கு முன்னர் விதைப்பையில் இருக்கும் விந்திலிருந்து பிராண சக்தி விரிவடைந்து உடலின் மேல் சக்தி மையங்களுக்கு, நரம்புகளுக்கு பரவத்தொடங்கும். இதுவே இன்ப உண்டர்ச்சியினை ஏற்படுத்துவது. இந்த சக்தி நிறைவு மேல் சக்கரங்களில் நிறைவதற்கு முன்னர் விந்தானது குறியினூடாக வெளியேறி ஆணிற்கு உயர்ந்த பேரின்ப உணர்ச்சியினை இல்லாமல் செய்துவிடுகிறது. இதனையே வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைத்தல் என்று சித்தர்கள் குறிப்பிட்டார்கள். இந்த நிலையினால் மனிதன் சாதாரண உடல் சார் இன்பத்துடன் தனது காமத்தினை முடித்துக்கொள்கிறான்.
இதுவே மூலப்ரக்ருதி எனப்படும் மாயையின் விளையாட்டு. ஆணின் உடலில் பேரின்பத்தினை பெறகூடிய அமைப்பினையும் வைத்து, அது வீணாகுவதற்குரிய ஓட்டையினையும் வைத்திருக்கிறது. இப்படி வீணாக்காமல் இருக்க அவன் மேலே சக்தி செல்லும் பாதைகளை திறக்கவேண்டும். அத்துடன் இயற்கையாக வீணாகும் பாதையான குறியினூடாக வீணாகாமல் காப்பாற்றுவதற்கு பெண்ணின் துணை தேவைப்படுகிறது. இங்கு வியப்பான விடயம் என்னவென்றால் இயற்கையாக ஆணினின் சக்தியை மாயைக்கு உட்பட்டு வீணாகும் பெண்ணே ஆண் முன்னேறுவதற்கும் காரணமாக இருக்கிறாள் என்பதே. இதுவே ஆவது பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதன் விளக்கம்.
பெண்ணின் துணை கொண்டு அல்லது தனியாகவோ ஓரு ஆண் விந்துடன் தனது பெண் சக்தியான பிராண சக்தியை இணைத்து தனது நாடிகள் எனப்படும் சூக்ஷ்ம சக்தி ஓட்டப்பாதைகள் மூலம் விந்தினை மேலெழும்பி சக்கரங்கள் எனக்கூறப்படும் ஆறு ஆதாரங்களில் சேமித்து வைக்கலாம். இந்த சக்தி சேமிப்பு முக்தி என்ற இறுதி நிலை அடைவதற்கு முன்னரான உலக,ஆன்மீக, சூக்ஷ்ம உலக வாழ்க்கையில் இன்பமாக வாழ்வதற்குரிய ஆற்றல், இன்பம் ஆகியவற்றை தரும்.
மூன்றாவதாக நிலை; இப்படி சேமிக்கப்படும் விந்து – பிராண சக்திகளில் ஆண் (சிவம்) பெண் (சக்தி) சக்திகளை எப்போதும் சமமாக வைத்திருக்கும் உத்திகளை கற்றல். இதனை தனியே பயிற்சிக்கும் ஆண் தியான சாதனையின் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் பெண் சக்திகளை சுழற்சிப்படுத்துவதன் மூலமும், தம்பதியினர் ஒருவர் ஒருவரிடையே பரிமாற்றி சுழற்சிப்படுத்துவதன் மூலமும் சாதிக்கலாம். இப்படி ஒரு ஆணும் பெண்ணும் தமது சக்திகளை பரிமாற்றி வளர்த்தெடுத்தால் அது உடற்கவர்ச்சி சார்ந்த காமமாக இருக்காமல் உயர்ந்த காதலாகவும், அன்பாகவும் மாறி, ஒருவருக்கு ஒருவன் மானசீகமாகவும், ஆன்மார்த்தமாகவும், உதவும் ஆன்ம விழிப்பினையும் பேரின்பத்தையும் தரும். இதுவே சிவசக்தி ஐக்கிய ரூபிணி என்ற நிலை. இந்த நிலை அடைந்தால் குடும்பம், அன்பு, வாழ்க்கையின் நோக்கம் என்பன மிக ஆழமான சமநிலையினை அடையும். இந்த ஆண் பெண் காம மையங்களின் சமநிலையே ஆண் பெண்களுக்கிடையிலான உண்மை சமநிலை, ஆண் பெண்ணை போட்டியும் துன்பமும் தருபவளாகவும், தனது வலிமையினை இழக்க செய்பவளாகவும் கருதாமலும், பெண் ஆணை ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தனது உடல் மீது வன்முறை புரிபவனாகவும் இல்லாமல் ஆண் பெண்ணிற்கு பேரின்பம் தருபவனாகவும், பெண் ஆணிற்கு பேரின்பம் தருபவளாகவும் மாறும் நிலையினை இந்த் யோகம் தரும்.
பொதுவாக காமத்துடன் யோகம் சொல்லித்தருகிறோம் என்றவுடன் அனைவரும் ஏதோ மூன்றாம்தர நீலப்படம் பார்க்கப்போகிறோம் என்ற உண்டர்வுடனும், தமது காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் மணிக்கணக்கில் உடலுறவு செய்யலாம் என்ற எண்ணத்துடனும் வருகிறார்கள். ஆனால் இதன் உண்மை அர்த்தம் வேறாக இருக்கிறது. இயற்கை காமத்தை வெறும் உடல் இன்பத்துடன் பூர்த்தி செய்து உயர்ந்த சூக்ஷ்ம பேரின்பத்தை பெறவிடாமல் தடுக்கிறது. இதிலிருந்து விடுபட்டு சிவமாகிய விந்தினை பிராணனாகிய சக்தியுடன் இணைத்து மூலசக்தியான சிவசக்தி ஐக்கிய ரூபத்தை அடைவதே இந்த யோகத்தின் குறிக்கோள். இந்த பாதையில் காமத்தினை கையாளுவது என்பது ஒரு சிறு படி மாத்திரமே. இதனை ஒரு பெரிய விடயமாக மன எழுச்சியுடன் பார்த்து அடையவேண்டியத்தை அடையாமல் போய்விடக்கூடாது என்பது ஒளி நிலையடைந்த சித்தர்களின் ரிஷிகளின் விருப்பம்.
அடிப்படையில் ஒருவனுடைய விந்து, பிராணன், ஆன்ம சக்திகள் ஒருங்கிணைந்தால் அவன் ஒருவித சமநிலையில் இருப்பான். இந்த சமநிலை அவனுக்கு இன்பத்தினையும், தான் முழுமையாக இருப்பதான மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
எப்போதும் ஆழமான காதலற்ற உடலுறவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஸ்தூல, சூக்ஷ்ம, காரண ஸரீரங்களில் ஒருவித சமநிலை இன்மையினை தோற்றுவித்து அவர்களின் ஆன்ம, உள, பிராண வளர்ச்சிகளை குழப்பி பாதித்துவிடும். பெண் எப்போதும் தனது காதலனிடம் சிறுபிள்ளைத்தனமான அன்பினை எதிர்பார்ப்பவள், ஆனால் பொதுவாக ஆண் ஒருவித இயந்திர தனமாக கையாள்பவனாக இருப்பான். இருவரும் உயர் நிலை அடைவது என்பது பெண்ணின் முழுமையான பங்களிப்பு இன்றி நடைபெறாது. பெண்ணிடம் நாதம் (ஆணின் விந்துவிற்கு நிகரான) சக்தி அதீதமாக காணப்படுகிறது. அதனை அவள் பிராணனுடன் கலந்து உயர்ந்த சக்தியாக்கி தருவானேயானால் மட்டுமே ஆணின் ஆன்ம, மன வளர்ச்சி அதீதமான முன்னேற்றத்தை அடையும். இத்தகைய பெண்ணின் அன்பே ஆண்பெறக்கூடிய உயர்ந்த உறவாகும்.
இப்படி கூறியவுடன் பெண் ஒருத்தி இருந்தால்தான் இதனை செய்யமுடியும் என்று மனது மயங்கி வருத்தப்படாதீர்கள். ஆரம்பகால சாதனைக்கு பெண்ணில்லாமல் தனித்து இருந்து விந்தினை வெளியேறாமல் செய்யும் பயிற்சிகளை செய்வது மிக உசிதமானது. ஏனென்னில் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் பெண்களை பார்க்கும் போதும், நினைக்கும்போதும் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டு விந்தினை இழக்கும் படியே மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஆணை விட சக்தி வாய்ந்தவள், உறுதியற்ற ஆணிடம் சக்தியினை உறிஞ்சி எடுத்துவிடுவாள். மேலும் ஆணே தன்னை பயிற்சிப்படுத்தி கொள்ள வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே சக்தியை மேலே செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. மேற்கூறிய முறையில் சக்தியினை மேலேற்ற தெரிந்த ஆணுடன் உறவு கொள்ளும்போது இயல்பாகவே உள்ளுணர்வு மூலம் முயற்சி இன்றி பெண் தனது சக்தியை மேலேற்றும் தன்மையினை பெறுகின்றாள். எனினும் இந்த யோகத்தை பழகும் பெண்ணும் அடிப்படை விதிகளை, சக்தி மேலேற்றும் முறையினை தெரிந்து இருத்தல் வேண்டும். ஆகவே ஆண் பெண்ணாக ஆன்ம உயர்வு பெற முனையும் தம்பதியினர் கருத்தொருமித்து இந்த யோகத்தினை பயில வேண்டும்

2 comments: