Saturday, May 9, 2015

பூசணி காய் உடைப்பது ஏன்?

பூசணி காய் உடைப்பது ஏன்?

தேவர்கள்  என்பது யார்? 

இந்திரலோகத்தை சேர்ந்தவர்கள்.  

விண்ணுலகவாசிகள். 

சதா சர்வ காலமும்,  சோமபானம், சுராபானம் அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பவர்கள்.  ஆடல் பாடல் என்று எந்நேரமும் கலைகட்டும்.     

ஆடல் அரங்கில் ரம்பா, ஊர்வசி, மேனகா என்னும் ஆடல் அழகிகள் வேறு நாட்டியம் ஆடுவார்கள்.  அதை பார்த்து ரசித்துவிட்டு பொழுதை போக்குவார்கள்.  

அவ்வப்போது ஹரி, சிவன், பிரம்மாவிடம் அப்பாயின்மென்ட்  வாங்காமலே ஆஜராகி தங்கள் நலனை பாதுகாத்து கொள்பவர்கள்.   

அரக்கர்கள் யார்?

மூர்க்கதணும்,  முன்யோசனை இல்லாமலும் இருப்பவர்கள்.  அடி தடி பிரியர்கள்.  இந்திரனும் தேவர்களும் தான் ரம்பா, ஊர்வசி, மேனகா டான்ஸ் பார்க்கணுமா.... நாங்களும்  கொஞ்சம் பார்க்க கூடாதா ... என்று அடிக்கடி தேவலோகத்தின் மீது படை எடுத்து செல்பவர்கள்.

அந்த வகையில்... சாரி.... அந்த வழியில் வந்த ஒருவரை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

கூச்மாண்டன்...  அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன்.   அரக்கர்களுக்கு உள்ள குல வழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி,  வைகுண்டனை சரணடைவதுதான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே..... தேவர்கள் இனமே அழிந்து விடும்  போலிருக்கிறது.  தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.  தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கு ஏற்ப,  அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.  உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார்.

வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான்.  தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.

அது சரி.... அழிவு காலம் வந்து விட்டால், அறிவுதான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேர் அறுந்த மரம் போல் விழுந்தான்.

கூச்மாண்டா.... நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.  இது உன் பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே... இனி நான் பிழைக்க போவதில்லை.  எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வரமாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான்.

சரி கேள்... என்ன வரன் வேண்டும்?

நான் மறைந்தாலும்... என் புகழ் அழியாத வரம் வேண்டும்.

இதுவரை... உன் வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாத உனக்கு அழியாத புகழை  எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலை படவில்லை.  உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம்.  இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன் பட வேண்டும்.  அதற்க்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி.... நீ பூசனிக்காயாக பிறவி எடுப்பாய்.  உன்னை வாசலில் வைத்தால் சகல தோழமும் மறையும்.

கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம் ஏவல் கூட பாதிக்காது.  அதோடு  நீ யாருக்கு தானமாக போகிறாயோ...... அதை  தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால் இன்றும் கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை  பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைப்பது இதற்கு பிறகுதான். அந்த பூசணிக்காயை உடைத்தால் சகல தோஷமும் மறைந்து விடும்.   

No comments:

Post a Comment