Wednesday, September 5, 2012

அனைத்தும் சிவனுக்கு ஐந்து

சிவனை `ஐமுகச் சிவன்' என்றே கொண்டாடுகின்றன புராணங்கள், ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என்பன அவ் ஐந்து முகங்கள். நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! - என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார். நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம். கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம்-வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே. அவர் நடனம் ஆடுவது ஐந்து சபைகளில் சிதம்பரம்: தங்கசபை, மதுரை-வெள்ளி அம்பலம், திருஆலங்காடு-ரத்தினசபை, திருநெல்வேலி-தாமிரசபை, குற்றாலம்-சித்திர சபை. ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என சிவபிரானுக்கு ஐந்தொழில்கள். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்தும் பஞ்ச புராணம் எனும் சிறப்புடன் சிவ சந்நிதிகளில் ஓதப் பெறுவது. சிவனை அர்ச்சிக்க விசேஷமாக பஞ்ச வில்வம் என வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை என ஐந்து பத்திரங்கள் சிறப்புப் பெறுகின்றன. ஐந்தெழுத்து-நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும். அவ்ஐந்தெழுத்து மந்திரத்தையும் சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என ஐந்து வகையாக உச்சரித்து உருவேற்ற, உள்ளொளி பெருகும் என உரைக்கிறது திருப்புகழ். சிவராத்திரி பொழுதில், விபூதி பூசிக் கொள்ளுததல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல், ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment