Monday, September 17, 2012

வாகனம் புறப்படும் போது சக்கரத்தின் அடியில் எலுமிச்சம்பழத்தை நசுக்குவது ஏன்?

** வாகனம் புறப்படும் போது சக்கரத்தின் அடியில் எலுமிச்சம்பழத்தை நசுக்குவது ஏன்? பயணத்திற்கு உதவும் வாகனம் விபத்திற்குள்ளாகும்போது ஆபத்தில் முடிகிறது. சில உக்கிர சக்திகளால் இந்த விபரீதம் நிகழ்கிறது. எனவே, அவற்றை திருப்தி செயய எலுமிச்சம்பழத்தை நசுக்குதல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றைச் செய்கிறோம். இதனால், விபத்து நேர்ந்து விடாமல் அந்த சக்திகளே பார்த்துக் கொள்வர். * பக்திக்குப் பயம் தேவைதானா? பயபக்தி என்று சொல்வது ஏன்? பயம் இருக்கும் இடத்தில் தவறு இருக்காது. குறித்த நேரத்தில் பணிக்குச் சென்றுவிட்டால் யாரும் குறைகூற இடமிருக்காது. இப்படி பொறுப்புடன் செயல்படுவதை வேலையில் பயம் இருப்பவர்களிடத்தில் மட்டுமே காணலாம். இது பாராட்டுக்குரிய பயம். அதுபோல், இறைவனுக்கு பூஜை செய்யும் போது அதில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற சிரத்தையுடன் செய்தால் பக்தி முழுமை பெறுகிறது. இந்த சிரத்தையையும் ஒருவித பயம் என்று கூறலாம். அதாவது, நாம் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் தவறு ஏற்படாமலிருக்க, முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்வதை பயம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மனபீதியைக் குறிக்கும் பயத்துடன் இதனை ஒப்பிடக்கூடாது. எனவே, பயபக்தியுடன் வழிபடுங்கள். அஞ்சுதற்கஞ்சாமை மடமை என்பது தமிழர் மரபல்லவா? * பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் சிறப்பு என்ன? எல்லாத் தெய்வங்களின் ஒருமித்த வடிவம் பசு. இதற்கு உணவு அளித்தால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் உண்டாகும். மற்ற தீவனங்களைக் காட்டிலும் உயர்ந்தது அகத்திக்கீரை. தன் ரத்தத்தைப் பாலாக்கி நமக்கு அளிக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானதாகும். * கோயிலில் சிலர் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வழிபடுவது சரிதானா? பிரதட்சிணம் என்றால் வலம் வருதல் என்று பொருள். ஆலய பிரதட்சிணம் செய்வது போல தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ஆத்மபிரதட்சிணம். இதைச் செய்வது விசேஷம். * காலையில் நேரம் இல்லாவிட்டால் மதியவேளையில் பூஜை செய்யலாமா? இயலாத பட்சத்தில் செய்யலாம். ஆனால், காலை10.30 மணிவரை தேவகாலம் எனப்படுகிறது. இதற்குள் பூஜைகளை முடிப்பதே விசேஷம். * தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா? தாராளமாகச் செய்யலாம். செய்வது சிறப்பானதும் கூட. ஒரு வருடம் வரை இறந்தவர்களுக்குச் சில கிரியைகள் செய்யப்படுவதால் அவரும் உடனிருந்து வாழ்த்துவதாகக் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment