Sunday, September 23, 2012

திருப்புகழ் வரலாறு

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரிநாதர் வரலாறு திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு. என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார். அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார். சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ். கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது. சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்” பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே. ஆறுபடைவீடுகள் கதிர்காமம் மற்றும் அநேக தலங்களிற் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைப் பாடியுள்ளார். உலகமெலாம் உய்வுபெறும் பொருட்டு ஞானப்பெருவெளியில் அருவரதம் தாண்டவஞ்செய்யும் நடனசபாபதிகளிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். தண்டையும் அழகிய வெண்டையும், கிண்கிணியும், சதங்கையும் இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்கச் சிவபிரானது திருமுன் அன்பான இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து நின்ற அன்புபோல, அடியேனும் அத்திரு நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடையுமாறு கடப்பமலர்மாலையும் அழகிய மணிமகுடங்களும் தாமரைமலர் போன்ற சிவந்த திருக்கரங்களும் ஒளிவீசும் வேலாயுதமும், கருணைபுரிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திரகிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனது கண்கள் குளிரத்தோன்றி அருள்புரியாயோ என அருணகிரியார் வேண்ட அவருக்குக் கந்தவேளின் திரு நடன தரினம் கிடைத்தது. திருச்செந்தூர், திருத்தணிகை, பிரான்மலை, சிதம்பரம் முதலிய திருத்தலங்களில் முருகன் திருநடனக் கோலத்தில் தோன்றி மகிழ்வித்தார். நம்மிடத்தில் என்னென்ன குறைகள் உளவோ அவற்றையெல்லாம் உணர்ந்து இறைவனிடம் முறையிட்டால் அக்குறைகளை இறைவன் நீக்கி அருள் புரிவான். பல்வேறு குறைகளை ஆன்மாக்கள் எப்படி முறையிட வேண்டுமோ, பற்பல விண்ணப்பவடிவில் நம்பொருட்டு அருணைமுனிவர் பற்பல பாடல்களைப் பாடியருளினார். அயனார் நமது தலையில் எழுதும் எழுத்து அறுமுகனார் திருவடிபட்டவுடன் அழிந்துபோகும். இறைவனுடைய திருவடி சென்னியிற் சூட்டப்பெறுவதே பெறுகளுட் சிறந்த பேறு ஆகும். திருநாவுக்கரசர் விண்ணப்பஞ் செய்யவே சிவபெருமான் மாலும் அயனும் காணாத மலரடியை “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர் தம் சென்னிமிசை சூட்டினார். அதேபோல் முருகவேலிடம் அருணகிரிநாதர் “என் சென்னிமிசை திருவடி சூட்டியருளும்” என வேண்ட அளவற்ற மாதவத்தின் பயனாக அவருக்கு அத்திருவடிப் பேறுகிடைத்தது. முருகன் திருவடி வேதாகமங்களுக்கும் எட்டாததன்றோ? அருணையடிகளின் பெருமை அளவிடற் கரியது. பிரபுட தேவமன்னன் கண்டு இன்புற, முருகன் ஆடிவந்த அழகை “அதலசேடனாராட என்னும் திருப்புகழைப் பாட முருகன் கருணை கொண்டு காட்சியளித்தார். முருகன் அஷ்டமாசித்திகளை அருளிச் செய்ததைத் திருவகுப்பிற் பாடுகிறார். திருவிடைக் கழியில் உள்ள குராமரத்தடியில் முருகன் உலாவிய அழகைப் பாடுவார். கந்தபுராணம், சிவபுராணம், இராமாயணம், பாரதம், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பற்றிய பல செய்திகளைத் திருப்புகழிற் பாடியுள்ளார். சித்ரகவியால் நான் உன்னைப் பாட வேண்டுமென விண்ணப்பிக்கவே திருஎழுகூற்றிருக்கை என்கிற தேர் வடிவில் அமைந்த சித்ரகவி பிறக்கிறது. வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருவகுப்பு, திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி ஆகியன ஒப்பற்ற மகா மந்திரங்கள். எத்தனையோ ஆயிரங்கோடி அலங்காரங்களுண்டு கந்தனுக்கு. ஆனால் கந்தரலங்காரமே அலங்காரம். சொற்சுவையும் பொருட்சுவையும் இட்டளைந்த தேன் பாகாய் இருக்கும் வண்ணம் கட்டளைக் கலித்துறையாக கவிவிருந்து வைத்தார். உயிர்களுக்குப் பற்றுக் கோடாக விளங்கும் கந்தனோடு ஒன்றுபடுவது தான் கந்தரனுபூதி. கூடு விட்டுக் கூடுபாய்ந்து கிளிரூபத்திலிருந்து “கந்தரனுபூதி பாடப்பட்டது. சிறிய பாடல்கள் ஒவ்வொன்றும் அனுபூதியில் விளைந்த அருள்முத்து. ஆன்மீகப் பாரிஜாதம். கந்தனின் அருள் முகத்தை மாந்திக் களித்த அருணகிரி, நாம் நீந்திக் களிக்கத் தந்தநீர்நிலை நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந்துருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற்புனை மாலையே அருணகிரிசூட்டிய அனுபூதிமாலை பரஞானத்தின் உச்சம். இவ்வாறு நமக்கெல்லாம் மந்திரம் சொன்ன அருணகிரிக்கு அறுமுகப்பரமன் ஒரு மந்திரம் உபதேசித்தான். “சும்மா இரு சொல்லற” செயலற்று, பேச்சற்று, இருத்தல் கையும் வாயும் அடங்க மனம் தானே அடங்கும். மனமற்றநிலை சும்மா இருக்கும் நிலை.நான், தான் என்ற வேறுபாடு நீங்கி மோனநிலைபெற்றல் சான்று ஆரும் அற்ற தனிவெளியில் முருகனோடு இன்புறலாம். “சிந்தையை யடக்கியே சும்மா இருக்கின்றதிறம் அரிது என்கிறார் தாயுமானவர். ஆகவே மௌனமென்பதும் “சும்மாஇரு” என்பதும் சுட்டிறந்த முதல்வனையுணரும் ஞானநிட்டை என்பது தெளிவு. ஆகவே முருகப் பெருமானின் திருத்தல மகிமைகளைப் பாடிய தேன் தமிழ், சங்கத்தமிழ், அருணதளபாதபத்மம் அனுதினமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரனின் திருப்புகழை ஒரு நாளைக்கு ஒரு திருப்புகழாயினம் மறவாது பாடவேண்டும். முருகன் திருப்புகழை அன்போடு அனுதினம் பாடினல் ஆறுமுகம் தோன்றம் அவன் ஏறுமயில் தோன்றும் எழில் தோன்றும். “ஞானம் பெறலாம், நலம்பெறலாம், எந்நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம், மோனவீடு ஏறலாம், யானைக்கிளையான் திருப்புகழைக் கூறினார்க்காமே இக்கூற்று” பக்தியோடு படிப்போருக்கு இவையாவும் நிச்சயம் கிடைக்கும். “கருமேனி தாங்காமல் திருமேனி தாங்கி வந்தவள்ளலைப போற்றித் திருப்புகழ் அமிர்தத்தினைப் பருகி விதியையும் வென்றிடுவோம். மும்மலங்களினின்றும், அகந்தையினின்றும் நம்மனத்தைக் கட்டுப்படுத்தி செயலையும் பேச்சையும் குறைத்து கந்தப்பெருமானைச் சிந்தையிலிருத்தப் பழகிக்கொண்டால் கந்தப்பெருமானே நமக்குக் குருவாக இருப்பான். அந்தக் குருபரனின் திருவருளும் நமக்குக் கிட்டும். அருணகிரிநாதர் அருவியெனப்பொழிந்த ஆறுமுகன் திருப்புகழை, சந்தம் முந்தும் செந்தமிழில் கந்தனைப்போற்றிய பேரின்பச் சுவையை அருள முதத்தினை ஓதி உணர்ந்து, மகிழ்ந்து, துதித்து உமைபாலன் திருவருள் பெறுவோமாக. திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ?? கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று. அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான். மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன். சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர். தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

No comments:

Post a Comment