Monday, September 3, 2012

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா?

* தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா? தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை பெற்றவர்களே கூட அதிக நேரம் பார்க்கக்கூடாது. இது சமயத்தில் திருஷ்டி கழித்தல், திருநீறு, குங்குமம் இட்டுவிடுதல் போன்றவையும் செய்யக்கூடாது. ** அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன? ஏற்கனவே 59முறை கல்யாணம் பண்ணிக்கிட்டு 60வது வயது பூர்த்தி கல்யாணம் பண்ணிக்கிறதா நினைச்சுடாதீங்க. 60வயது பூர்த்தி கல்யாணம் என்று சொல்ல வேண்டும். தமிழ் வருடக்கணக்கின்படி நாம் பிறந்த வருடம், பிறந்த மாதம், பிறந்த நட்சத்திரம் இவை மூன்றும் இணையும் நாளை வாழ்க்கையில் இரண்டாவது முறையாகப் பார்ப்பது அறுபது வயது பூர்த்தியாகும்போது தான். தமிழ் வருடங்கள் அறுபது. இந்த அறுபது வருடங்களையும் கடந்து வந்ததில் எவ்வளவு சாதனைகள் எவ்வளவு வேதனைகள்! இவற்றையெல்லாம் கடந்து குடும்பவாழ்வு, பொதுவாழ்வு என எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருப்பதைக் கொண்டாடும் வகையில் இதை நடத்துகிறார்கள். இக்காலத்தில் உறுதுணையாக இருந்த அறுபது வருடங்களின் தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் யாகம் நடத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நமது சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நமக்காகவே வாழ்ந்து வரும் மனைவியின் கழுத்தில் தாலி கட்டி மீண்டும் புது வாழ்க்கையைத் துவங்கும் விதமாக சஷ்டியப்தபூர்த்தி என்னும் அறுபது வயது பூர்த்திகல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. * அஷ்டோத்திரம் என்பதன் பொருள் என்ன? அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை என்பது தான் சரியான சொல். "சத' என்றால் "நூறு' . "உத்திரம்' என்றால் "பிறகு' . "அஷ்ட' என்றால் "எட்டு'. நூறும், பிறகு எட்டும் சேர்ந்த நாமாவளிகளால் அர்ச்சனை செய்தல்.. அதாவது நூற்றெட்டு திருப்பெயர்களைச் சொல்ல வழிபடுதல் என்று பொருள். இதுவே அஷ்டோத்திரம் என்று சுருங்கிவிட்டது. * வானில் எல்லா நட்சத்திரங்களும் தானே இருக்கின்றன. ஒருநாளுக்கு ஒரு நட்சத்திரத்தை மட்டும் குறிப்பிடுவது ஏன்? விண்வெளி மண்டலம் முட்டை வடிவில் உள்ளது. இப்பகுதியை ராசிமண்டலம் என ஜோதிடநூல்கள் கூறுகின்றன. கிரகங்கள் இயங்கும் சுற்றுப்பாதையை 12 மண்டலங்களாக, மேஷம் முதல் மீனம் வரை ராசிகளாகப் பிரித்தார்கள். 360 பாகை கொண்ட வான்மண்டல ஒளிவடிவப் பாதையின் அருகே அமைந்துள்ளவை 27 நட்சத்திரங்கள். சரியான ராசி மண்டல பாகைக் கணக்கீட்டிற்குள் இந்த 27 நட்சத்திரங்களே உள்ளதால் கோள்களின் சுற்றும்பாதைக் கணக்குப்படி நாளொன்றுக்கு ஒரு நட்சத்திரமே அமையும். எவ்வளவு கடினமான ஆராய்ச்சித்திறன் இருந்தால், நம் முன்னோர் பூமியில் இருந்தபடியே இவற்றை எல்லாம் கண்டுபிடித்திருப்பார்கள்? நாமும் இதனை உணர்ந்து மகிழ வேண்டும் என்பதற்காக விரிவாகச் சொல்லியிருக்கிறேன். எவ்வளவோ நட்சத்திரங்கள் இருந்தாலும் கோள்கள் இயங்கும் பாதையில் ஜோதிட கணக்கிற்கு அறியும்படியாகத் தெரிபவை 27 நட்சத்திரங்களே. அதனால் தினமும் ஒரு நட்சத்திரமாகத் தான் குறிப்பிட முடியும்.

No comments:

Post a Comment