Thursday, September 6, 2012

இந்து தர்மம் எடுத்துரைப்பவை எல்லாம் நல்ல வழிகாட்டல்களே

எந்த மதமும் தனிநபர் சொத்தல்ல. வானளாவப் புகழ்வதும் வசை பாடுதலும்; நம்பிக்கையும் தூற்றலும் மனம் சார்ந்த தனி சுதந்திரம். ஆனால் ஒழுக்கம் என்பது யாவருக்கும் பொதுவானது. "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்' என்கிறார் வள்ளுவர். ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பாகும்; அதன் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும். எனவே எங்கும் எதிலும் ஒழுக்கம் முன்னிலை வகிக்க வேண்டும். இந்து மதம் எந்த சமய வித்தகரையும் வைத்து தொடங்கப்படவில்லை. நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைப் பற்றிய விதியினை எப்படி படைக்கவில்லையோ, அப்படித் தான் வேதத்தையும் எவரும் படைக்கவில்லை. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல; வெளிப்படுத்தப்பட்ட வையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை. (அபௌருஷேயம்). காலத்திற்குட்பட்டு கடந்து போகும் விதிகளைப் போலில்லாமல், வேத உண்மைகள் யாவும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தவை. அவற்றுக்கு என்றுமுள்ள தன்மையும் (நித்யம்) மதிப்பும் உண்டு. "வேதம்' என்ற சொல்லுக்கு "அறிவு' அல்லது "ஞானம்' என்பது பொருள். வேதங்கள் நான்கு. இவற்றுள் முதலாவது வேதமான ரிக் வேதம் முக்கியமானது. ஏனென்றால் அதன் மந்திரப் பாடல்கள் பலவற்றை மற்றைய வேதங்களுக்கு அது தந்துள்ளது. அதுதான் தொன்மையான தொகுப்பு. ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டது. மந்திரங்கள், பிரம்மாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என்பவையே அவை. மந்திரங்கள் என்பது தெய்வங்களுக் கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள். இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப் படும் பிரார்த்தனைகள் அவை. பிரம்மாணங்கள் என்பவை யாகங்கள் செய்வதற்கு அனுஷ்டிக்கப் பட வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறுவது. வேதத்தின் இறுதிப் பகுதிகளான உபநிடதங்கள் (வேதாந்தம்) தத்துவ ஆராய்ச்சிகள் ஆகும். மந்திரங்கள், பிராம்மணங்கள், ஆரண்யங் கள், உபநிடதங்கள் என்று பிரிக்கப் பெற்ற வேத மானது- பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் எனும் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளுக்கும் பொருந்துமாறு உள்ளது. வேதத்தில் அடங்கியுள்ளவற்றை வேறு ஒரு வகையாகவும் பிரிக்கலாம். கர்ம காண்டங்கள் அல்லது மத ஆச்சாரங் கள் பற்றியவை. உபாசனைக் காண்டம் அல்லது தியானத் திற்குரியவை. ஞான காண்டம் அல்லது அறிவு தரும் பகுதி. மந்திரங்களும் பிரம்மாணங்களும் கர்ம காண்டத்தைச் சேர்ந்தவை. ஆரண்யங்கள் உபாசனை காண்டத்தைச் சேர்ந்தவை. உபநிடதங்கள் ஞான காண்டத்தைச் சேர்ந்தவை. சமயக் கொள்கைகள், வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறும் நூல்கள் ஆகமங்கள் ஆகும். இந்து மதத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், சாக்தம், வைணவம் ஆகியவை ஆகமங் களை அடிப்படையாக அமைத்துக் கொண்டவை. வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், தரிசன இலக்கியம், பாமர இலக்கியம், சடங்கின் வகைகள், வேதகால வேள்விகள், ஆகம வினைமுறைகள், மதச் சடங்குகளோடு கூடிய இறை வழிபாடு, திருவிழாக்கள், மதச் சின்னங்கள், பண்பும் நடத்தையும், கருமம் என்னும் கொள்கைகள், மறுபிறவி பற்றிய கோட்பாடுகள், அறப் பண்புகள், தன்னலமற்ற சேவை மார்க்கம், பக்தி யோகம், ஞான யோகம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், வேதாந்தம், அத்வைதம், விசிட்டாத் வைதம், துவைதம், வைணவத்தின் கோட்பாடு கள், சைவக் கோட்பாடுகள், தத்துவ சிந்தனையின் சிறப்பு, தந்திரங்கள், காணாபத்திய நெறி, கௌமார நெறி, சௌர நெறி, குண்டலி எனும் அனுபூதி நெறி, இன்னும் இவை சார்ந்த உட்பிரிவுகள் என நீண்டதொரு செய்திகளை உள்ளடக்கியதுதான் இந்து மதம். ஈச, கேன, கட, பிரசன்ன, முண்டக, மாண்டூக்ய, ஸ்வேதாஸ்வர, மைத்ரீய, சுபால, ஜாபால, பைங்கல, கைவல்ய, வஜ்ரசூசிக, கௌஷீதக, தைத்ரீய, ஐதரேய, சாந்தோக்ய, பிரஹத் என பதினெட்டு உபநிடதங்கள் உள்ளன. இதிலுள்ள தத்துவங்களைக் கற்றாலே மனிதன் என்பவன் தெய்வமாகலாம். கடல் போன்றது இந்து மதம். அதிலிருந்து சில எளிய விதிகளைக் காண்போம். ● விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளல் கூடாது. கருமம் சார்ந்தவை செய்யும்போது மட்டும் நீரில் குழைத்துப் பூசிக்கொள்ள வேண்டும். ● புண்ணிய தீர்த்தங்களில் சென்று நின்றவுடன் காலை நனைப்பது கூடாது. முதலில் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டபின் காலைக் கழுவலாம். ● மயானம் சார்ந்த சடங்குகளுக்குச் சென்று வந்தபின் வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சோப்பு, ஷாம்பு போன்ற வாசனைப் பொருட்களை உபயோகிக்க கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், தலையில் சிறிது தண்ணீரைத் தெளித்தபின் போகலாம். ஆண்கள் தான் பிறந்த நட்சத்திர நாளில் மருந்து உட்கொள்ளல், தாம்பத்தியம், திருமணம், பயணம் புறப்படுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதுத் துணி உடுத்துதல், பெரியவர் களுக்கு திதி கொடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. தலைக்கு எண்ணெய் தேய்த் துக் குளித்தபின் வெளியூர் பயணம் செய்வது கூடாது. ● பெண்கள் தலையில் எண்ணெயை வைத்துக் கொண்டு யாரையும் வழியனுப்பக் கூடாது. கணவன் வெளியூர் சென்றபின் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தவிர்க்கப்பட வேண்டும். ● தெய்வ காரியங்களுக்கு கணவன் முதலில் செல்ல வேண்டும். இறப்பு, தீட்டு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு மனைவி முதலில் செல்வது நல்லது. ● உரல், அம்மி, உலக்கை, வாயிற்படி, முறம் ஆகியவற்றின்மீது உட்காரக்கூடாது. ● சாப்பாடு, உப்பு, நெய் ஆகியவற்றை கண்டிப்பாக கையால் பரிமாறக்கூடாது. கரண் டியை உபயோகப்படுத்த வேண்டும். சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீர் அருந்துதல் கூடாது. ● கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தான- தர்மம், விரதம் கடைப்பிடித்தால், கணவனின் ஆயுளில் ஒருநாள் குறையும். ● குரு, ஜோதிடர், நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி ஆகியோருக்கு ஆபத்து காலத்தில் உதவ வேண்டும்; புண்ணியம் பெருகும். காணாதிபத்திய நெறி யானை முகக் கணபதியே இந்துக் கடவுளர் களுள் பொதுமக்களால் மிகவும் விரும்பப் படுபவர். அவருடைய திருவுருவச் சிலைகளை கோவில்கள் மட்டுமின்றி ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும், புனிதமான மரங்களுக் கடியிலும், சந்திகளிலும், வீடுகளிலும், சந்து பொந்துகளிலும், ஆட்கள் உட்புக முடியாத சின்னஞ்சிறு இடங்களிலும்கூட காணலாம். தடைகளை அமைப்பவரும் அவரே; அவற்றை நீக்குபவரும் அவரே. அவர் விக்னேஸ்வரர்; விக்கினராஜர்; விநாயகர்! அவர் அருளைத் தேடி நிற்பவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பவர். கணேசர் ஒரே உட்பொருளாகவும், இறைத் தன்மையின் மிக உயர்ந்த தத்துவமாகவும் கொள்ளப்பட்டார். "சாரதா திலகம்' எனும் நூலில் கணேச வழிபாட்டின் நோக்கமும் உட்பொருளும் கீழுள்ளவாறு எடுத்துக் கூறப் பட்டுள்ளது. "பதம் ஸ்துதீநாம் அபதம் ஸ்ருதீநாம் லீலாவதராம் பரம் அஷ்ட மூர்த்தேஹ் நாகாத்மகோ வா புருஷாத்மகோ வெத்யபெத்யம் ஆத்யம் பஜ விக்னராஜம்.' "எல்லாவற்றிலும் உயர்வானவனான விக்னராஜனை வேண்டுதல் செய்யுங்கள். ஆனால் அவனை வேதங்களாற்கூட அடைய இயலாது. அவன் எட்டு வடிவங்களோடு (நிலம், நீர், நெருப்பு, காற்று, விண், சூரியன், சந்திரன், எஜமானன்) கூடிய சிவனுடைய விளையாட்டு அவதாரம். அவன் வடிவத்தைப் பற்றி அது யானை வடிவமென்றோ மனித வடிவமென்றோ கூற இயலாது. அவன் ஆதியானவன். யானைமுகக் கடவுளை நான் பிரார்த்திக் கிறேன். அவன் வேதாந்தங்களில் புகழப்படும் புருஷன்; இதயத்தில் வீற்றிருக்கும் ஆனந்த மயமான பொருளான ஆன்மா. மக்களை சூழ்ந்துள்ள பேரிருளான அறியாமை அவன் மகத்துவத்தால் விலகியோடும்' என்கிறது அந்த துதி. இந்து தர்மம் எடுத்துரைப்பவை எல்லாம் நல்ல வழிகாட்டல்களே. அதனோடு இணைந்து ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.

No comments:

Post a Comment