Monday, September 3, 2012

சாப்பிடும் முன், உணவிருக்கும் இலையை நீரால் சுற்றுகிறார்களே ஏன்?

சாப்பிடும் முன், உணவிருக்கும் இலையை நீரால் சுற்றுகிறார்களே ஏன்? இறைவன் நம் உயிராக நமக்குள்ளேயே இருக்கிறார். இப்படி ஆன்ம வடிவமாக இருக்கும் இறைவனுக்கு நாம் சாப்பிடுவதை நிவேதனம் செய்யும் முறையாக இது செய்யப்படுகிறது. இதை "பரிசேஷனம்' என்பர் ** மாதம் மும்மாரி மழை பெய்ய எந்த தேவாரப்பாடலைப் பாராயணம் செய்ய வேண்டும்? நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருப்புன்கூர் என்னும் சிவத்தலம் உள்ளது. இக்கோயிலுக்குரிய நிபந்தங்களில் முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. மழை பெய்ய12 வேலி நிலமும்(84ஏக்கர்) மழை நிற்க 12 வேலி நிலமும் காணிக்கையாக ஒரு அடியார் இக்கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார். இத்தலம் குறித்து சுந்தரர் பாடியருளிய தேவாரத்தில் இக்குறிப்பு காணப்படுகிறது. ""வையகமுற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலந்தருகோம் உய்யக்கொள்க மற்று எங்களை என்ன ஒளிகொள் வெண்முகிலாயப் பரந்து எங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்தும் பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு அருளும் செய்கைக் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே'' என்பது அத்தேவாரப் பாடல். மழை பெய்யவும் நிற்கவும் இங்கு சிறப்பு வழிபாடும் வழக்கில் இருக்கிறது. அதற்கு திருப்புன்கூர் பதிகம் முழுவதும் பாராயணம் செய்யுங்கள். குறைந்த பட்சம் இப்பாடலை மட்டுமாவது ஓதி வாருங்கள். மாதம் மும்மாரி பெய்து வளம் சுரக்கும். * கோயிலுக்கு எதிரே இருக்கும் வீட்டில் குடியிருக்கக்கூடாது என்கிறார்களே ஏன்? கோயிலுக்கு நேர் எதிர்புறம் வீடு கட்டக்கூடாது. அந்தப் பகுதியை சந்நிதித்தெரு என்று விட்டுவிட வேண்டும். தெய்வத்தின் நேர் கொண்ட பார்வையில் திருக்குளம், நந்தவனம், சந்நிதிதெரு இவற்றைத் தவிர வேறு கட்டடங்கள் இருக்கக்கூடாது * 30வருடம் வாழ்ந்தவருமில்லை. 30வருடம் கெட்டவரும் இல்லை என்று சொல்கிறார்கள். இதன் பொருள் என்ன? கஷ்டப்படுபவர்களை நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்துவதற்காக இப்படிச் சொல்வார்கள். நன்றாக வாழ்பவர்கள் கூட, 30 வருடத்திற்கு ஒருமுறை கெட்டு விடுவார்கள் என்று விபரீத அர்த்தம் செய்வது கூடாது. * திறந்தவெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே! அவை வழிபாட்டுக்குரியவை தானா? எவ்வளவு அடி உயரத்தில் வேண்டுமானாலும் சிலை வைக்கட்டும். திறந்த வெளியில் இருப்பது தான் கேள்விக்கு இடமளிக்கிறது. திருச்சி உறையூர் வெக்காளியம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் திறந்த வெளியில் உள்ளனவே என்று கேட்கிறார்கள்! அவை பழமையானவை. திறந்தவெளியில் இருப்பதற்கு அந்தந்தக் கோயிலுக்கென்றே புராண வரலாறுகள் இருக்கின்றன. எனவே, அத்தலங்களை உதாரணமாகக் கொண்டு புதிதாகத் திறந்தவெளியில் சிலை அமைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இதற்கு மேல் இப்படிச் செய்பவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். *

No comments:

Post a Comment