Wednesday, September 5, 2012

கர்மா செய்வதால் என்ன பலன்?

கர்மாக்களை செய்வதால் இறந்தவர், பூலோகத்துக்கும் பித்ரு லோகத்துக்கும் இடையில் ஏற்படும் அனைத்து தடைகளையும் கடந்து செல்ல வேண்டிய பித்ரு லோகத்தை சென்றடைகிறார் என்கிறது சாஸ்திரம். அது மட்டுமில்லாமல் இந்த கர்மாக்களை ஈடுபாட்டுடன் சிரத்தையாக செய்யும் கர்த்தாவுக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வம்ச விருத்தி முதலிய பலன்களும் கிட்டும் என்பது மகரிஷிகளின் வாக்கு. பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கர்மா-சிராத்தம்-தர்ப்பணம் போன்றவற்றை செய்யாமல் விட்டு விட்டு, தெய்வ சந்தோஷத்துக்காகச் செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள், ஸ்தோத்ர பாராயணங்கள் போன்ற எந்த ஒரு ஆன்மீக செயலையும், எந்த ஒரு தெய்வமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்கிறது சாஸ்திரம். முன்னோர்களுக்கு செய்ய வேண்டியவைகளை செய்துவிட்டு அவர்களின் ஆசியுடன் செய்யும் பூஜைகளைத் தான் தெய்வம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறது. இதன்மூலம் தெய்வீகமான பூஜைகளைக் காட்டிலும் முன்னோர்களுக்காக செய்யும் கர்மாவே முக்கியம். ஏராளமான இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் இன்றும் கூட பெற்றோர் இறந்த பிறகு, அவர்களுக்காக முதல் 12 நாட்கள் செய்ய வேண்டிய கர்மாக்களையும் அதன்பிறகு ஒவ்வோர் மாதமும் செய்ய வேண்டிய மாஸிகங்களையும், ஓர் வருஷ முடிவில் செய்யும் ஆப்தீகத்தையும், அமாவாசை, மாதப்பிறப்பு முதலிய பித்ரு நாட்களில் செய்ய வேண்டிய பித்ரு தர்பணங்களையும் மற்றும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் சிராத்தத்தையும் சிரத்தையாக அனுஷ்டித்து வரும் குடும்பங்கள், எந்தவித குறைவும் இன்றி சந்தோஷமாக இருந்து வருவதை காணலாம். அவ்வாறில்லாமல் குதர்க்க வாதம் பேசி, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கர்மாவை- சிராத்த-தர்ப்பணங்களைச் செய்யாமல் இருப்பவர்களின் குடும்பங்களில் பிற்காலத்தில் வம்ச விருத்தியின்மை, ஒற்றுமைக்குறைவு, வியாதி, ஆரோக்கியமின்மை முதலிய கஷ்டங்கள் ஏற்படும். ஆகவே, நாம் முன்னோர்கள் செய்து வந்த வழிமுறைகளை பின்பற்றி சிரத்தையுடன் நமது சக்திக்குத் தக்கவாறு பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்டும். இது நாம் நமது குழந்தைகளுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

No comments:

Post a Comment