Saturday, June 11, 2011

பற்றிக் கொள்ள வேண்டியது எதனை?பார்த்து மகிழ வேண்டியது எது?

       ற்றிக் கொள்ள வேண்டியது எதனை? இறைவன் திருவடிகளை! ஏன்?அதுதான் பற்றற்றவன் தாள்கள் என்கிறார் திருவள்ளுவர். பார்த்து மகிழ வேண்டியது எது? இறைவன் திருமுகத்தை!

ஆலயத்தில் இறைவனைத் தரிசிக்கும்பொழுது முதலில் திருவடிகளைத்தான் தரிசிக்க வேண்டும். திருவடியிலிருந்து சிறிது சிறிதாக நம் முகத்தை உயர்த்தி கடைசியில் இறைவன் திருமுகத்தில் வந்து நிலைபெற வேண்டும். சில விவரமான அர்ச்சகர்கள் தீப ஆராதனை செய்யும்பொழுது திருவடிகளில் இருந்து துவங்கி சிறிது சிறிதாக முகத்திற்கு நேரே கொண்டு வருவார்கள். அதுதான் சரி!

பற்றிக்கொள்ள இரண்டு என்று சொன்னது திருவடிகளை. பார்த்து மகிழ ஆறு என்பவை எவை? முருகனின் ஆறு திருமுகங்கள்!
அது ஏன் திருவடிகள் மட்டும் இரண்டு? அடியவர்களாகிய நம் கரங்களோ சிறியவை.
அவற்றால் பற்றிக் கொள்ள எளிதாய் இருக்க வேண்டாமா? அதனால்தான் திருவடிகள் மட்டும் இரண்டு!

முருகனுக்கு மட்டுமல்ல; மற்ற தெய்வங்களுக்கும் முகங்கள் பலவானாலும் திருவடிகள் மட்டும் இரண்டேதான். பதினாறு கரங்கள் கொண்ட துர்க்கா தேவிக்கும் திருவடிகள் இரண்டுதான்.

எல்லா தெய்வங்களுமே நம்மிடம் கருணை கொண்டவை. சரணடையும் நம்மைக் காப்பது அவர்கள் கடமை. ஆகவேதான் இறைவனை சரணாகதவத்சலன் என்கிறோம்.

சரணம் என்ற சொல்லே திருவடியைக் குறிப்பதுதான். ஐயப்பன் வழிபாட்டின் மூலம் அது கோஷமாகி விட்டது.

அருணகிரிநாதரும் திருப் புகழில் சரணக் கமலாலயம் என்கிறார். திருவடியையே ஆலயமாகக் கூறிவிட்டார்.

"என்னைச் சரணடைந்து விடு; உன்னைக் காப்பது என் கடமை' என்கிறான் கீதாசார் யன் கண்ணன். "என்னை சரணடைந்த எல்லா உயிர் களையும் காப்பதை என் கொள்கையாகக் கொண்டிருக் கிறேன்' என்கிறான் இராமபிரான். (அபயம் சர்வ பூதேப்யோ ஏதத்வ்ரதம் மம.)
 
திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது சரி. எப்படிப் பற்றிக் கொள்வது? விடாமல் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்- குரங்குக் குட்டி தாயின் வயிற்றைப் பற்றிக் கொள்வதுபோல. தாய்க்குரங்கு எவ்வளவு உயரமான கிளைகளில்- எத்தனை கிளைகளில் தாவினாலும் குட்டிக்குப் பயமில்லை. தாயிடம் உள்ள பரிபூரண நம்பிக்கை! இதனை வட மொழியில் பக்திமார்க்கத்தில் "மர்க்கட நியாயம்' என்பார்கள். மணிவாசகப் பெருமானும் "சிக்கெனப் பிடித்தேன்' (விடாமல் பிடித்துக் கொள்வது) என்கிறார்.


குரங்குக் குட்டி இறுகப் பற்றிக் கொள்வதால் தாய்க்குரங்குக்கு வலிப்பதில்லை; குட்டியின் சுமையும் தெரிவதில்லை. மண்ணுக்கு மரம் பாரமா?

இறைவன் திருவடியை மலரடி என்கிறோம். இருப்பினும் அடியார்கள் இறுகப் பற்றுவதால் அது கசங்கிப் போவதில்லை. ஏனெனில் அவனும் "தாயுமானவன்'தானே! அதுதான் இறைவனது பெருங் கருணை. எனவேதான் ஜோதி வழிபாடு கண்ட வள்ளலாரும் இறைவன் கருணையைப் "பெருங் கருணை' என்றார்.

இறுகப் பற்றினோர் என்ன பயன் கண்டனர்? சிவனடியை இறுகப் பற்றிய மார்க்கண்டேயன் மரணத்தை வென்றான்; என்றும் பதினாறானான். பக்தன் பிரகலாதன் நாராயணனை இறுகப் பற்றியதால் இரண்யனிடம் இருந்து காக்கப்பட்டான்; பெற்ற மகனையே கொல்ல வந்த கொடியவன் இரணிய னும் கொல்லப்பட்டான்.

அருணகிரிநாதர் கந்தன் காலடிகளை இறுகப் பற்றி திருப்புகழ் பாடினார். "மயிலு மாடி நீயுமாடி வரவேணும்' என்றார். தாய் சக்தி தேவியின் மடியில் கட்டுண்டிருந்த பாலமுருகன் மயிலுடன் வந்து நடனமாடி பலருக்கும் காட்சி தந்தான். அந்த முருகன் கம்பத்திளையானாராக திருவண்ணாமலையில் இன்றும் அர்ச்சாரூபமாக இருந்து கொண்டிருக் கிறான்.

நெருக்கம் அதிகமானால் பக்தி பெருகும்; உள்ளம் உருகும்; ஊனும் உருகும். உருகினால் உள்ளொளி பெருகும். உள்ளொளி பெருகினால் உலப்பிலா ஆனந்தமாய் தேன் சொரியும். இது மாணிக்கவாசகரின் அனுபவம்.

"ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து
புறம் புறம் திரிந்த செல்வமே, சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே.'
-திருவாசகம்.

இரு திருவடிகளைப் பற்றிக் கொண்டால் கெட்ட நாள் என்பதில்லை- தீவினை என்பதில்லை- நவகிரகங்களின் தொல்லைதான் என்ன செய்துவிடும்? எமனும்கூட செயலற்றுப் போவான்.

கந்தவேளின் கழலினைப் பற்றினால் எமனா லும் எதுவும் செய்ய முடியாது என்கிறார்

அருணகிரிநாதர்- தனது கந்தர் அலங்காரத்தில்.
"நாளென்செயும் வினைதானென் செயும் எனைநாடி வந்த
கோளென்செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.'
(கோள்- கிரகம்; வினை- தீவினையாகிய பாவம்; கூற்று- எமன்.)

இந்தப் பாடலில் திருவடியின் ஒளியை மட்டும் காணவில்லை அருணகிரி. ஒலியையும் கேட்கிறார். கண்ணுக்கும் இன்பம்; காதுக்கும் இன்பம்.

தாள், சிலம்பு, சதங்கை, தண்டை என்று நான்கு சொற்களை அடுக்குகிறார். தாளில் அணிந்த அணிகலன்களின் ஒலி இனிய நாதம். அடுத்து சண்முகங்களையும் தோளில் கடம்ப மலர் மாலையையும் கண்டு மகிழ்கிறார். "இவ்வாறு முருகன் எனக்கு முன்னே தோன்றிவிட்டால் எமனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்கிறார். இந்தத் துணிவு முன்னோரான திருநாவுக்கரசரிட மிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. "நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்' என்று தேவாரம் பாடினர்.


திருவடி தரிசனமும் திருத்தோள்கள் தரிசனமும் முடித்தால் திருமுக தரிசனம்தானே!

சாதாரண மனிதர்களுக்கே முக அழகை வைத்துதான் அழகு என்பது முடிவு செய்யப் படுகிறது. முக அழகைத் தீர்மானிப்பவை இரண்டு. ஒன்று மூக்கு; அடுத்தது கண்கள். பெண் பார்த்துவிட்டு, "பெண் மூக்கும் முழியுமா நல்லாயிருக்கு' என்று திருப்தியாகச் சொல்வார் கள்.

மனிதரின் ஒரு முகத்திற்கே இப்படியென்றால் ஆறுமுகப் பெருமானுக்குச் சொல்லவா வேண்டும். அவன் அழகை அளவிட நாம் யார்?

முருகு என்றாலே அழகு என்று பொருள். முருகன் என்றாலே அழகன்- அதிலும் அவன் ஆறுமுக அழகன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் "முருகன் அல்லது அழகு' என்றே ஒரு நூல் எழுதியுள்ளார்.

இவ்வளவு ஏன்? சூரபத்மன் முருகனைப் பற்றிப் பேசும்போது, "அவன் சிவபாலனல்லன்; யாரோ ஒரு சிறுவன்' என்று தம்பி சிங்க முகனிடம் மறுத்துரைத்தான். பின்னர் போர்க்களத்தில் வந்து நின்றான். எதிரே பாலனாய் முருகனைக் கண்டான். கணநேரம் தன்னையே மறந்தான். தன்னையுமறியாமல் பால வடிவேலனை வணங்க கைகளிரண்டும் உயரே எழுந்தன; ஒன்றுகூடப் போயின!

அடுத்த கணம் நல்லுணர்வு மறைந்தது. கைகளை வேகமாய் உதறினான். "சீ! இந்த சிறுவனா என்னை வெல்வான்? என்ன செய்கிறேன் பார்' என்று கொக்கரித்தான். இந்த அரிய காட்சியை கந்தபுராணத்தில் கச்சியப்பர்,"ஆர்க்கும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் கண்களில் தெரியக் கண்டான்'என்று குறிப்பிடுகிறார். அதாவது சூரனுக்கு ஒரு கணநேரம் அழகு மயக்கம் வந்தது. அடுத்த கணத்தில் அது மாறி ஆணவ மயக்க நிலை கொண்டது.

எனவே, முருகன் பகைவரும் வணங்கும்

அழகன். பக்தர்களுக்கு அவன் முகம் பரவசமளிப் பதில் வியப்பென்ன?

குமரகுருபர சுவாமிகள் ஐந்து வயது வரை ஊமையாய் இருந்தவர். திருச்செந்திலாண்டவன் அருளால் ஐந்தாவது வயதில் "கந்தர்கலிவெண்பா' பாடினார். மேலும் இவர் முருகனின் குழந்தை வடிவில் ஈடுபாடு கொண்டவர். அதனால் வைத்தீஸ்வரன் கோவிலிலுள்ள முத்துக்குமார சுவாமிமீது பிள்ளைத்தமிழ் பாடினார்.

குழந்தைப் பருவத்தை பத்து பருவங்களாகப் பிரித்துக் கொண்டு, பருவத்துக்கு பத்து பாடல் வீதம் நூறு பாடல் பாடுவது "பிள்ளைத்தமிழ்' என்னும் சிற்றிலக்கியம்.

ஆறுமுகனை மட்டுமல்ல; கண்ணனையும் பாலகிருஷ்ணனாக வழிபடுவது அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ஆகவே ஒரு முகத்திலேயே அழகனான முருகனை ஆறுமுகனாய்ப் பார்த்து மகிழ்வது பேரின்பமல்லவா? அதனால்தானே அவன்மீது தேன்போல் தித்திக்கும் திருப்புகழ் பாடப் பட்டது.
வெற்றி வேல் முருகா! வீரவேல் முருகா!

No comments:

Post a Comment