Wednesday, October 3, 2012

உலகை விட பெரியது எது? கடலை விட பெரியது எது? மலையை விட பெரியது எது?''

தனது தந்தை அங்குமிங்கும் உலவுவதைக் கண்ட மகன் அருண்மொழித்தேவர் ஆச்சரியப்பட்டார். நாடாளும் ராஜாவின் ஆலோசகரான அவரது முகத்தில் இத்தகைய குழப்பத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை. ""தந்தையே! தங்கள் முகத்தில் ஏன் இந்தக் கலவரம்! வழக்கமாக, அதிகாலையே நீராடி, இறைவழிபாடு முடித்து அரண்மனைக்கு கிளம்பி விடுவீர்களே! இன்று ஏன் இன்னும் செல்லவில்லை! ஒருவேளை, பகைவர்கள் யாராவது சோழநாட்டிற்குள்....'' என்று தொடர்ந்து பேச முயன்ற மகனை சைகையால் நிறுத்தினார் தந்தை. ""அருண்மொழி! மாமன்னர் அநபாயச்சோழனை எதிர்க்க இப்பூவுலகில் திராணி யாருக்குண்டு! என் பிரச்னையை உன்னிடம் சொல்வதால் பயனில்லை. ஏனெனில், அதை உன்னால் தீர்த்து வைக்க முடியாது,''. ""தந்தையே! அப்படி முடிவு கட்டிவிட வேண்டாம். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் தானே!''. தந்தை அந்த இக்கட்டான நிலையிலும் சிரித்தார். ""அருண்மொழி! அந்த மூன்று கேள்விகள் தான் என் குழப்பத்திற்கு காரணம்! அதற்கு இரவு முழுவதும் பல நூல்களில் இருந்து பதில்களைத் தேடினேன்! கிடைக்கவில்லை!'' ""என்ன மூன்று கேள்விகள்? யார் உங்களிடம் கேட்டது?'' ""மாமன்னர் தான் கேட்டார். உலகை விட பெரியது எது? கடலை விட பெரியது எது? மலையை விட பெரியது எது?'' என்று! இவற்றுக்குப் பதில் தேடும் முயற்சியில் தோற்றுப்போனேன்! அரசரிடம் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்!'' அருண்மொழி கலகலவென சிரித்தார். ""சரியாப்போச்சு! இந்த எளிய விடைகள் தெரியாமல் தானா இந்தக் குழப்பம்! கொஞ்சம் பொறுங்கள்,' 'என்றவர் ஒரு ஓலையை எடுத்தார். மூன்று பதில்களையும் எழுதிக் கொடுத்தார். தந்தை அதைப் படித்தார். கண்கள் வியப்பில் விரிந்தன. ""ஆம்...ஆம்...இவை தான் விடைகள்!'' உணர்ச்சி வசப்பட்டு கூவினார். அரசரிடம் சென்று ஓலையை நீட்டினார். அரசர் ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். ""ஆலோசகரே! விடைகள் மிகப் பொருத்தமானவை. ஆனால், இதை எழுதியது நீர் அல்ல என்பது கையெழுத்திலிருந்து புரிகிறது! இந்த பதிலைச் எழுதியவர் யார்?'' ""என் மகன் அருண்மொழித்தேவர்''. அரசர், உடனடியாக அருண்மொழித்தேவரை தகுந்த மரியாதையுடன் பல்லக்கில் ஏற்றி வர ஏவலர்களுக்கு ஆணையிட்டார். அருண்மொழியும் வந்து சேர்ந்தார். ""தாங்களே! இந்த பதில்களைப் படியுங்கள்'' என்றார் அரசர். ""அரசே! ஒருவனுக்கு தேவைப்படும் போது, சரியான சமயத்தில் கிடைக்கிற சிறிய உதவியே உலகத்தை விட பெரியது. அடுத்து, எந்தச் செயலை எடுத்தாலும் அதை நிலையான தைரியமான மனதுடன் யார் செய்கிறானோ, அவனது மனம் மலையை விட உறுதியானது. பயன்கருதாமல் செய்யப்படும் உதவி கடலை விட பெரியது அருண்மொழித்தேவர் இதை வாசித்துவிட்டு அரசரை ஏறிட்டுப் பார்த்தார். ""அறிவிற் சிறந்தவரே! தாங்களே இனி இந்நாட்டின் அமைச்சர்,'' என ஆணையிட்டார் மன்னர். இவரே அநபாயனிடம் "உத்தமச்சோழ பல்லவர்' என்ற பட்டம் பெற்றவர். பிற்காலத்தில் ஆன்மிகத்தின் தலைமகனாக, "சேக்கிழார்' என்னும் பெயர்தாங்கி, பெரியபுராணம் என்னும் பெருங்காவியத்தைப் படைத்தார்.

No comments:

Post a Comment