Wednesday, February 6, 2013

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்

ந்தப் பெரிய உலகத்தில், கோடானு கோடி ஜீவராசிகளை படைத்தான் பகவான். அவன், அப்போது படைத்த ஜீவன்கள் தான் இப்போதும் உள்ளன; அதன் பிறகு, புதிதாக ஜீவன்களைப் படைக்கவில்லையாம். முன்பு பூமியில் உண்டான, ஜீவன்கள்தான் மேலே போகிறது; கீழே வருகிறது. இப்படி சக்கரத்தில் மேலும், கீழுமாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இவைகளில் ஏதோ ஒன்றிரண்டு மட்டும் தப்பித்து, முக்தி என்ற பிறவா நிலையை அடைந்து, பகவானோடு சேர்ந்து, சுகமாக இருக்கிறது. அதாவது, பேரின்பம் பெறுகிறது என்பர். மற்ற ஜீவன்களெல்லாம் ஏதோ ஒரு சரீரத்துடன் உலகெங்கும் பரவி உள்ளது.இவ்வளவு ஜீவன்களும், தங்கள் சரீரத்தை, ஒரு நாள் விட வேண்டி வருகிறது; அதைத் தான் மரணம் என்றனர். இந்த மரணத்துக்குக் காரணம் எமன் என்றனர். அவன் தான் எமலோகத்துக்கு அதிபதி; யார், யாரை எப்போது கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடுவதும் அவன்தான். இவனிடம் வந்து சேர்ந்தவர்களை விசாரணை செய்து, அவரவர்களின் பாவ, புண்ணியத்துக்கு தகுந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதும் அவன்தான். யாராய் இருந்தாலும், முதலில் அவனிடம் ஆஜராகி, விசிட்டிங் கார்டை காண்பித்தால், அவனைப் பற்றிய விபரங்களை தன் கணக்குப்பிள்ளையான சித்ரகுப்தனிடம் கேட்டு அறிந்து, தண்டனை வழங்குகிறானாம். இந்த உலகில் எங்கெல்லாமோ உள்ள ஜீவன்களை ஒரே சமயத்தில் கணக்கு பிசகாமல், நேரம் தவறாமல் அவன் எப்படி கொண்டு போகிறான் என்று ஒரு கேள்வி!


எமனிடம் உள்ள எம தூதர்கள் அண்மாதி சித்திகள் என்று சொல்லப்பட்ட சக்தி கொண்டவர்கள். அவர்கள் ஒரே நேரத்தில் அளவற்ற உருவம் எடுக்க வல்லவர்களாம். இதுபோன்ற தூதர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனராம். அதனால், இவர்கள் பல பகுதிகளாக பிரிந்து, பல தேசங்களுக்குச் சென்று, யார், யாரை எப்போது பிடித்து வர வேண்டுமோ, அப்படி பிடித்து வந்து விடுகின்றனர்.

ஆயுள் முடிந்தவரிடம் போய், "ஐயா! இந்த நிமிடத்துடன் உன் ஆயுள் முடிந்தது; வா... போகலாம்!' என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை. இந்த எம தூதர்கள் வேறு ஏதாவது ஒரு சாதனத்தைப் பற்றிக் கொண்டு, ஆயுள் முடிந்த ஜீவன்களை மரணமடையச் செய்து, அந்த ஜீவன்களை, கட்டி இழுத்து செல்வராம்! அப்படி என்ன சாதனம் இவர்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டால், ஆகாய விமானம், ரயில், லாரி, பஸ், மோட்டார் வாகனங்கள், மழை, வெள்ளம், போன்றவைகள்தான் இவர்களுடைய சாதனம்! இப்படியாக சொர்க்கமோ, நரகமோ அவரவர் போக வேண்டிய இடங்களுக்கு சென்றதும், அங்கங்கே செய்யப்படும் மரியாதையை ஏற்று, சுகமோ, துக்கமோ அனுபவிப்பராம். பிறகு, பாவ, புண்ணியம் தீர்ந்ததும் மறுபடியும் இங்கேதான் பூலோகத்துக்கு - வருவராம். பிறகு, இருக்கவே இருக்கிறது பூலோக, சுக, துக்கம். இதில் ஒரு சவுகரியம்... புதிதாக பிறந்தவர்கள், முன் ஜென்மத்தில் யாராக இருந்தார் என்பது தெரியாமல் உள்ளது; அதுவரையில் நல்லதாகப் போயிற்று. இது தெரிந்து விட்டால், "டாய்... நீயாடா? வாடா இப்படி – வுட்டேனா பார்!' என்றெல்லாம் ஆரம்பித்து விடுவர். இப்போது, "நீ யாரோ, நான் யாரோ!' அதுவரையில் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்

No comments:

Post a Comment