Monday, September 8, 2014

ராமனிடம் லட்சுமணனுக்கு ஏற்பட்ட சந்தேகம்!


ராமனிடம் லட்சுமணனுக்கு ஏற்பட்ட சந்தேகம்!

வேடர் குலத்தில் பிறந்தவள் சபரி. மூதாட்டியான அவள் மதங்க மாமுனிவரின் ஆசிரமத்துக்கு அருகில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தாள்.

மதங்க மாமுனிவரிடம் உபதேசம் பெற்ற அந்த மாது இராமனிடம் மானசீக பக்தி கொண்டவள். இராமனைக் கண்ணால் காண வேண்டும்; அவன் திருவடியைத் தலையில் பூண வேண்டும்; அவனுக்கு விருந்தளித்துப் பேண வேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தாள்.

மதங்க மாமுனிவர் தவம் முடித்து மோட்சம் புகும்போது, தன்னுடன் வருமாறு சபரியையும் அழைத்தார்.

""இராம தரிசனத்தைவிட வீட்டுலகம் சிறந்ததா? என்றைக் காவது ஒருநாள் இராமன் இவ்வழியே வருவான். அவனை வணங்கி விருந்திடுதல் வேண்டும் என்பதே என் ஆசை. ஆதலால் மோட்சம் வேண்டாம்'' என்று மறுத்து விட்டாள் சபரி.

இராமன் இன்று வருவான் இன்று வருவான் என்று ஒவ்வொரு நாளும் பாதையைப் பெருக்கி, முள், கல் நீக்கித் தண்ணீர் தெளித்து மெத்தெனச் செய்து வைப்பாள்.

அன்றாடம் கிடைக்கும் கனிகளைக் கொணர்ந்து, அவை சுவையுள்ளனவா என்று அறிவதற்காக அதனைக் கடித்துப் பார்ப்பாள். சுவையுடையவற்றை சேமித்து வைப்பாள். சுவையில்லாதவற்றைத் தான் உண்பாள்.

அவள் இராமனை எதிர்பார்த்தது வீணாகவில்லை. ஒருநாள் இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிக் கொண்டு அவ்வழியே வந்தனர்.

அவர்களைக் கண்ட சபரி செய்வதறியாமல் பரவச நிலை அடைந்தாள். குடிசைக்குள் அவர்களை அமரச் செய்து உபசரித்தாள். பின்னர், தான் எச்சில் படுத்திச் சுவை கண்டு வைத்திருந்த பழங்களைக் கொண்டு வந்து அவர் கள் எதிரே வைத்தாள். அப்பழங்கள் நாட்பட்டன. ஆதலால் சில காய்ந் திருந்தன. சில அழுகியிருந்தன. சில சுவை மாறிப் புளிப்பேறியிருந்தன.

தின்பதற்கு இயலாத அப்பழங் களை இராமன் அன்புடன் ஏற்றுக் கொண்டான். ""தாயே! எனக்கு நல்ல பசி! பால் நினைந்து ஊட்டும் தாய்போல, காலம் கண்டு பெறற்கரிய சுவையுடைய கனிகளை அளித்தாய்!'' என்று முகமன் கூறி, அப்பழங்கள் முழுதையும் தான் ஒருவனே உண்டு விட்டான். அருகிலிருந்த இலக்கு வனுக்கு ஏதும் தரவில்லை.

உண்டு முடித்த பிறகு, அவள் விரும்பியபடியே மோட்சத்தைத் தந்தான். அந்தரத் தெய்வ விமானம் தோன்றி அவளை ஏற்றிச் சென்றது.

பின்னர் இராமன் தன் தம்பியுடன் பயணத்தைத் தொடர்ந்தான். அப் போது இலக்குவன் இராமனை நோக்கி, ""அண்ணா! எப்பொருளா யினும் உண்பதற்குக் கிடைப்பின், முதலில் எனக்குத் தந்துவிட்டே பின்னர் நீங்கள் உண்பீர்கள்! இன்று சபரி அன்னை தந்த பழங்கள் அனைத் தையும் எனக்குத் தராமல் தாங்களே உண்டுவிட்டீர்கள். உங்கள் செயல் வழக்கத்துக்கு மாறாக உள்ளதே?'' என்றான்.

""நான் உனக்குத் தந்திருப்பின் எச்சில் கனி என்று முகம் சுளித்திருப் பாய்! அழுகல் கனி என்று அருவருத் திருப்பாய்.

நமக்குத் தர வேண்டும் என்று வெகு நாட்களாகச் சேர்த்து வைத்திருந்து, அந்தத் தாய் தந்ததை நாம் அவ மதித்தால் அந்த பக்தியுள்ளம் என்ன பாடுபடும்! அன்பில் உருவான அவள் உள்ளம் புண்படலாமா? அதனால் தான் அவ்வாறு செய்தேன்'' என்றான் இராமன்

 

No comments:

Post a Comment