Monday, September 15, 2014

கோயில் கட்டிய கோபன்னா!

உயிர்களுக்குத் தீங்கு செய்யாதே! பொறுமையாக இரு! பக்தி கொள்வதில் மனம் தளராதே!' என்று ஞான நூல்களும், மகான்களும் எவ்வளவு தான் சொன்னாலும், மனதில் பதிய மாட்டேன் என்கிறது. ஆனால்.... இந்த மூன்றும் இணைந்து ஒரு வரலாற்று நிகழ்வாகவே பதிவாகியுள்ளது. அது...
ஹைதராபாத் நகரம் ஒரு தானீஷாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நேரத்தில், பத்ராசலம் என்ற ஊரில் கோபன்னா என்பவர் தாசில்தாராக இருந்தார்.
அப்போது ஒரு ராமர் கோயில் மோசமான நிலையில் இருந்ததால், மக்களின் வரிப்பணம் ஆறுலட்சம் வராகனை வைத்து, கோயில் திருப்பணி செய்து விட்டார் கோபன்னா. மன்னர் சும்மா இருப்பாரா? கோபன்னாவை சிறையில் தள்ளி விட்டார். <உப்பும், அரிசியும் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டன. அவ்வப்போது, சாட்டையடி வேறு. இப்படியே ஆண்டுகள் கழிந்தன.
துன்பம் தாங்காத கோபன்னா, விஷம் குடித்து உயிரை விடத் தீர்மானித்தார். அதற்கு முன்னால், கோபன்னா ராமரை எண்ணித் தியானத்தில் ஆழ்ந்த நேரத்தில்....
அவரைக் கண்டு மனம் உருகிய சீதை,""சுவாமி! தங்களின் உத்தம பக்தனான கோபன்னாவை இப்படித் துயரப்
படுத்தலாமா?'' என கேட்டாள்.
ராமர், ""தேவி! இந்தக் கோபன்னா சிறிய வயதில் ஒரு கிளியைப் பிடித்து 12 ஆண்டு கூண்டில் அடைத்து வைத்திருந்தான். அதன் பலனாக அவனுக்கு இந்த தண்டனை கிடைத்தது. கவலைப்படாதே! இன்று இரவு அவன் விடுதலையாவான். மன்னர் தானீஷாவை நேரில் பார்த்து ஆறுலட்சம் வராகனைத் தருவேன். உடனே, கோபன்னாவை விடுதலை செய்வார்,'' என்றார்.
சீதை அடுத்த கேள்வியாக ""சுவாமி! கோபன்னா உங்கள் பக்தன். அவனைப் போய் முதலில் பார்க்காமல், தானீஷாவைப் பார்ப்பதாகச் சொல்கிறீர்களே ஏன்?'' என்றாள்.
ராமர், ""தேவி! தானீஷாவும் போன பிறவியில் எனது பக்தனாக இருந்தான். ஆயிரம் குடம் நீரால் அபிஷேகம் செய்வதாக வேண்டி, 999 குடம் வரை அபிஷேகம் செய்தான். பொறுமை இழந்தவனாய், கடைசி குடத்தை தான் பூஜித்த விக்ரஹம் மீது போட்டு உடைத்தான். அதனால் தரிசனம் பெறாமல் போனான். இப்போது தரிசனம் அளிக்கப் போகிறேன். பணத்தை அவனிடம் தந்தால் தானே கோபன்னாவை விடுதலை செய்வான்...'' என்றார்.
அதன்படியே, கோபன்னா விடுதலையானார்.
கோபன்னாவும் தன் பெயரை "ராமதாசர்' என மாற்றிக் கொண்டு பக்தியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்தார்.
இரக்கம், பொறுமை, ஆழ்ந்த பக்தி, எளிமை, கருணை என நற்குணங்களை இவரின் வாழ்க்கை எடுத்துச் சொல்கிறது. அவர் கட்டியது பத்ராசலம் ராமர் கோயில் இன்றும் அவர் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment