Saturday, January 17, 2015

தர்ப்பையும் அதன் மகிமையும்


உங்களுக்குத் தெரியுமா? தர்ப்பை பவித்ரம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் அதில் அடங்கியுள்ள தர்ப்பையின் (புல்லின்) எண்ணிக்கை ஒன்றாக இருக்காது. கர்மாவின் தன்மையை பொருத்து மாறும்.
தர்ப்பமும் அதன் மகிமையும்
( ”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து)
பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள். பொதுவாக க்ருஹத்தில் தர்ப்பங்கள் இருப்பதே பெரும் ஐஸ்வர்யமாகும்.
வேதத்தில் தர்ப்பம் :
தர்ப்பத்தின் மகிமை பற்றியும், அதனது அபரிமிதமான சக்தியைப் பற்றியும் வேதம் எடுத்துரைக்கின்றது. இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? இதன் விசேஷமான சக்தியைப் புரிந்து கொள்வதற்கு இது ஒன்றே போதுமே. யஜுர் வேத ப்ராஹ்மணத்தில் (அச்சித்ரம்) நேரிடையாகவே தர்ப்ப ப்ரசம்ஸையைக் காண்கின்றோம்.
பவித்ரம் :
தர்ப்பத்தினால் விதிப்படி செய்யப்பட்ட பவித்ரத்தை அணிந்துதான் ஜபம், தானம், ஹோமம், தேவ, பித்ரு மற்ற சில கார்யங்கள் செய்ய வேண்டும். யாகங்களில் மிக அவசியம். தர்ப்ப பவித்ரம் இல்லாத கார்யம் செல்லுபடியாகாது.
பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு. கர்மாவின் தன்மையைப் பொருத்து ஸங்க்யை வித்தியாசப்படும். ஜபம், தேவ பூஜைகள், ஹோமங்கள் இத்யாதி கர்மாக்களில் 2 புல் பவித்ரம் உபயோகப்படும். ச்ராத்தம், தர்ப்பணாதிகளில் 3 புல் பவித்ரம் உபயோகப்படுத்த வேண்டும். ஒரு புல் பவித்ரத்தை ப்ரேத கார்யங்களில் உபயோகப்படுத்துவர்.
பவித்ரத்தில் அடங்கியுள்ள புல்லின் எண்ணிக்கை மாறினாலும் ரூபம் (செய்யும் விதம்) மாறாது. பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் பொதுவாக எல்லாவிதமான பவித்ரமும் அமைந்திருக்கும்.
பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து கையிலிருந்து நாம் எப்போதெல்லாம் கீழே போடுகிறோமோ போடுகிற திசை நிர்ருதி மூலையாகத்தான் போடச் சொல்லியுள்ளது.
மற்ற உபயோகங்கள்
தர்ப்ப பவித்ரம் அணிவது மிகவும் ச்ரேஷ்டம் என ஏற்கெனவே பார்த்தோம். தர்ப்ப பவித்ரத்தைத் தவிர மேலும் பல இடங்களிலும் தர்ப்ப உபயோகத்தை நமக்கு சாஸ்த்ரம் விதித்துள்ளது. அவை
தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் மிகவும் விசேஷம்.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.
க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.
ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன. குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
கலச ஸ்தாபனம் போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.
உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை.
தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும்.
இப்பேற்பட்ட தர்ப்பங்களின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதே நமக்கு புண்ணியமாகும். இனி தர்மாக்களின் பவித்ரத்தை மந்த்ர பூர்வமாகப் பெற்றுக் கொள்ளும் போதும், மற்ற நேரங்களில் தர்ப்பங்களைப் பார்க்கும் போதும் தர்ப்பங்களின் முக்யத்துவத்தை நினைவில் கொள்வோமாக, நன்மையடைவோமாக.

No comments:

Post a Comment