Saturday, June 25, 2011

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? வாரியார்

சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. இது மாசி மாதம், கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது. அதிகாலையில் நீராடி திருநீறும், ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து, திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி, மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து, வலம் வந்து, அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.
* சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும். நிரம்பிய அன்புடன் "நமசிவாய' என்னும் திருஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி, சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து, சாம்பலாகும்.
* சிவவழிபாடு செய்யும் போது, தீபங்களை வரிசையாக வைத்து பெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார். எனவே, அவருக்கு தீபமேற்றுவது முக்கியம்.
* கோயிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும், கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி, விநாயகரை ஒரு முறையும், சிவபெருமானை மூன்றுமுறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும். வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ, எறிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது, சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.
* கோயிலில் பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு தூண்களில் துடைப்பது தவறாகும். வழிபாடு முடிந்தபிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசைநோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண் டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும்.கோயிலுக்கு செல்வோர் முக்கியமாகவிளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* சிவம் வேறு, அறிவு வேறு அன்று. அறிவே மெய்ப்பொருள் மற்ற எல்லாம் பொய்ப்பொருள்கள் தான். பொய் என்பதற்கு நிலையில்லாதது என்பது பொருள். நிலையாக இருப்பவர் கடவுள் மட்டுமே.மற்றவர்கள் எல்லாம் தோன்றி நின்று மொத்தமாக மாய்ந்து விடுபவர்கள்.
* மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால் இன்சொல்லை பேசி, இம்மை இன்பத்தை அடைந்து நற்கதி பெறுவோம்.
* உற்றாரும் மற்றாரும், கற்றாரை கைகூப்பி வணங்குவர். கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, கல்லாதவனை அவனது மனைவி கூட கேலிசெய்வாள்.
* வீட்டுத் தலைவர் ஒரு பாடலைப் பாட, மற்றவர்கள் அதைத் தொடர்ந்து பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுக்ரஹமும் உண்டாகும்.
* எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்ய வேண்டும். எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். எனவே உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான கடவுள் வழிபாடாகும்

No comments:

Post a Comment