Monday, June 13, 2011

கண்ணைக் கட்டிப் போட்ட சகாதேவன்

ராமன் வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடியில் தலை வைத்துத்தூங்கிக் கொண்டிருந்தான். இலக்குவன் உணவுக்காக கனிகள் கொண்டு வரப்போயிருந்தான்.

அப்போது அவ்வழியாக சயந்தன் என்பவன் வந்தான். தேவர் தலைவனான இந்திரனின் மகன் அவன்.


சீதையின் அழகைக் கண்டு மயங்கிய சயந்தன், இராமன் தூங்குகிறான் என்றதைரியத்தில், காக்கை உருவம் கொண்டு சீதையின் மார்பைக் கொத்தலானான்.சீதையின் மார்பு புண்ணாகி, அதிலிருந்து வழிந்த ரத்தம் இராமன் மேல் பட்டது.

இராமன் திடீரென்று விழித்துக் கொண்டான். உலகின் தாயாகிய சீதைக்குத்தீங்கிழைத்த காகத்தின்மீது அவனுக்குச் சினம் மூண்டது. உடனே பக்கத்தில்கிடந்த ஒரு துரும்பை எடுத்து அந்தக் காகத்தின்மேல் ஏவினான். அந்தத்துரும்பு பிரம்மாஸ்திரமாக மாறி காக வடிவில் இருந்த சயந்தனைத் துரத்தியது.

உயிருக்குப் பயந்த சயந்தன், "என்னைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொண்டே சிவன், பிரம்மா, இந்திரன் முதலியோரிடம் ஓடி முறையிட்டான். ஆனால் யாராலும் அவனுக்கு அபயம் தர இயலவில்லை.

மூவுலகும் ஓடிக் களைத்துப்போன காக வடிவிலிருந்த சயந்தன், "இனி நம்மைக் காப்பார் யாரும் இலர். நாம் அழிவது உறுதி. இந்த அஸ்திரத்தை ஏவிய இராமனிடமே அடைக் கலம் புகுவோம்' என்று முடிவு செய்தான்.

"வண்டு படுதுளவ மார்பனிடைச் செய்த பிழை

உண்டு பல என்று உளம் தளரலேல்! - தொண்டர் செயும்

பல்லாயிரம் பிழைகள் பார்த்திருந்தும் பார்க்கும் கண்

இல்லா தவன்கண் இறை'

என்ற முன்னோர் மொழி அவன் நினைவுக்கு வந்தது.

"அபயம், அபயம்' என்று இராமனிடமே ஓடினான்.

""காகுத்தனே கா! கா!

கார் வண்ணனே கா! கா!

கருணைக் கடலே கா! கா!

காக்கும் கடவுளே கா! கா!

கதி வேறில்லை கா! கா!''

என்று கதறிக் கொண்டு இராமன் திருவடி களில் விழுந்தான்.

சீதையை அபகரித்த இராவணனுக்கே அடைக்கலம் தருவேன் என்ற அருட்கடல் இவனைக்கைவிடுவானா? பிராட்டியும் அவனைக் காக்குமாறு இராமனிடம் பரிந்துரைசெய்தாள். ஆயினும் இராமபாணம் வீணாகாதே! தவறு செய்தவர்களை இராமன்பொறுப்பான்; ஆனால் ஏவிய பாணம் மீளாதே!

எனினும் அன்னலின் கருணையால் அந்த பிரம்மாஸ்திரம் காகத்தின் ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டு இராமனின் அம்புறாத் தூணிக்குத் திரும்பியது.

(அன்று முதல்தான் காகங்களுக்கெல்லாம் இரு கண்ணுக்கு ஒரே கண்மணி ஆனது. ஆம்;காகங்களின் இரண்டு கண்களும் ஒரே திசையில் பார்க்கப் பயன்படாது. ஏதாவது ஒருகண்தான் பார்க்கப் பயன்படும்.)

உயிர் தப்பிய சயந்தன் காக வடிவம் நீங்கி, இராமனைப் பலவாறு துதி செய்துவிட்டுத் தேவலோகம் சென்றான்.

காகாசுரன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன்தங்கள் இனைத்தையே அழித்துவிடாமல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும் பிராட்டியையும் வாழ்த்தின. "பொறுமையில் பிராட்டிக்குச்சமமானவர் உண்டோ? தீங்கு நினைத்தவரிடத்தும் கருணை காட்டியவர்கள் பிராட்டிபோன்றவர் யார்? இராமன் போன்றவர் யார்?' என்று பாராட்டின.

பெண்பாலரை "யார்' என்று கேட்பதற்கு வடமொழியில் "கா' என்று கூறுவதுண்டு.ஆண் பாலரை "யார்' என்று கேட்பதற்கு வடமொழி யில் "க' என்று கூறுவர்.காகங்கள் போட்ட இரைச்சலில் "காக', "காக' என்ற ஒலியே மிக்கொலித்தது.

பெருமானுக்கும் பிராட்டிக்கும் பெருமை சேர்ப்பதற்காக இன்று முதல் நம்இனத்துக்கு "காக' என்ற பெயரே நிலைக்கட்டும் என்று முடிவு செய்தன காகங்கள்.

பகவானிடம் தீங்கு நினைப்பவர்களுக்கு நமது வாழ்க்கையே பாடமாக அமையட்டும்.நாமனைவரும், "பெருமாளே கா! கா! பிராட்டியே கா! கா!' என்று குரலெழுப்புவோம்என்று அன்று முதல் குரலெழுப்பத் தொடங்கின.

""மகாபாரதப் போர் வராமல் தடுக்க வழி என்ன?'' என்று சகாதேவனைக் கேட்டான் கண்ணன்.

""நீ பாரத அமரில் யாவரையும் நீறு ஆக்கிப்

பூ பாரம் தீர்க்கப் புகுந்தாய் புயல்வண்ணா!

கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி

மா பாரம் தீர்க்க மற்றார் கொல் வல்லாரே''

என்று கூறிய சகாதேவன், ""கண்ணா! நேராகக் கையால் பிடித்து நின்னை நான் கட்டுவனேல், வராமல் காக்கலாம் மாபாரதம்'' என்று முடித்தான்.

""சகாதேவா! என்ன கூறுகிறாய்? நீ எதைச் செய்ய முடிந்தாலும், எல்லாம் வல்ல இறைவனாகிய என்னைக் கட்ட இயலுமா?'' என்றான் கண்ணன்.

""உன் உண்மை உருவத்தைக் காட்டு! நான் கட்டுகிறேனா இல்லையா பார்!'' என்றான் சகாதேவன்.

கண்ணன் ஒன்று போல பல வடிவங்களைக் காட்டினான். ஆனாலும் பெரும் ஞானியாகியசகாதேவன், தன் பக்தித் திறத்தால் மூலவரை அடையாளம் கண்டு, அவரைத் தன் மனதினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

சகாதேவன் மனதின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன், ""சகாதேவா! நீ வென்றுவிட்டாய்! நீ மனதால் கட்டிய இறுக்கம் தாங்க இயலவில்லை. என்னைவிட்டுவிடு!'' என்று கெஞ்சினான் எம்பெருமான்! இக்காட்சி மகா பாரத்தில்வில்லிபுத்தூராழ்வார் விவரித்தது.

சகாதேவன் கண்ணனைக் கட்டியதுபோல் இராமனையும் கட்டி ரசிக்க வேண்டும் என்றுபெரியாழ்வார் விரும்பினார். சகாதேவன் மனதால் கட்டுண்டான் கண்ணன். இராமனைபெரியாழ்வார் மல்லிகை மாலை கொண்டு கட்டுவித்தார்.

திருமணமான புதிது. சீதையும் இராமனும் காற்று நடுவே நுழையினும் பொறுத்துக்கொள்ள இயலாத அன்றில்கள்போல் இணை பிரியாமல் நெருங்கி காதல் களியில்ஈடுபட்டி ருந்தனர். வேடிக்கைப் பேச்சுகளும் வினோதக் கதைகளும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

""என்னிடம் இவ்வளவு நெருங்கிப் பழகுகின்றாயே! ஏதாவது காரணத்தால் நான் பிரிந்து செல்ல நேர்ந்தால் என்ன செய்வாய்?'' என்று கேட்டான் இராமன்.

""என்ன செய்வேனா? பிரியவே முடியாதபடி கட்டிப் போட்டு விடுவேன்!'' என்றாள் சீதை.

""என்னைக் கட்ட உன்னால் முடியுமா?'' என்றான் இராமன்.

""இதோ, கட்டிக் காட்டுகிறேன்'' என்று கூறிக்கொண்டே சீதை, த

ன் கூந்தலில் சுற்றி யிருந்த மல்லிகைச் சரத்தை அவிழ்த்து, அதைக் கொண்டு அருகிலிருந்த செண்பகக் கொடியில் இராமனைக் கட்டி விட்டாள்.மல்லிகைச் சரம்தானே! இராமன் எளிதில் அறுத்துவிட மாட்டானா என்று நமக்குத் தோன்றும்.

அது வெற்று மல்லிகைச் சரமா?

கண்ணனைக் கட்டிய சகாதேவன் மனதை விடப் பல மடங்கு அன்பு அம்மல்லிகைச்சரத்தில் பிணைந்துள்ளதே! மல்லிகைச் சரத்தை அறுக்கலாம். அதில் பிணைந்துள்ளகாதலன்பை இராமனால் அறுக்க இயலுமா?

"அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்

சொல்லுகேன் கேட்டருள்வாய்! துணை மலர்க்கண் மடமானே!

எவ்வியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்

மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுமோர் அடையாளம்'

என்று இராமன், சீதையைத் தேட அனுமனை அனுப்பியபோது, இச்செய்தியை அடையாளமாகக் கூறினான்.

No comments:

Post a Comment