Saturday, February 4, 2012

செலவில்லாத யாகம்

யாகம் செய்யும் போது, குண்டத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் "ஹவிஸ்' (யாககுண்டத்தில் போடும் பொருள்) சேர்க்கப்படும். பெருமாளுக்குரிய ஹவிஸை மூன்று கபாலங்களில் (பாத்திரம்) வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை சமர்ப்பிக்கும் போதும், திரிவிக்ரம வடிவத்தை (உலகத்தை மூன்றடிகளால் அளந்த வடிவம்) வணங்கி சேர்ப்பது மரபு.
ஆண்டாளும், திருப்பாவையின் முப்பது பாடல்களை பத்து பத்தாக மூன்று பகுதியாகப் பிரித்தாள். முதல் பத்தில் 3வது பாடலில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி' என்று பாடினாள். 11ல் இருந்து இருபதுக்குள் 17வது பாடலில் "அம்பர மூடறுத்து ஓங்கி <உலகளந்த உம்பர் கோமானை' என புகழ்ந்தாள். அடுத்த பத்தில், 24வது பாடலில்"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி' என தியானம் செய்தாள். ஆக, திருப்பாவையில் மூன்று இடங்களில் திரிவிக்ரம அவதாரத்தைப் போற்றியதால் திருப்பாவை பாடினாலே யாகம் செய்ததற்கு ஒப்பாகிறது. மார்கழி மாதத்தில், தினமும் ஒரு பாடல் வீதம் பாடுங்கள். ஆண்டாளைத் தியானியுங்கள். ஒரு காசு செலவில்லாமல், யாகம் செய்த பலனைப் பெற்று விடுவீர்கள். பெருமாளிடம் சரணடையும் ஆத்ம சமர்ப்பணம் என்ற மகாயாகத்தை, திருப்பாவை மூலம் ஆண்டாள் நடத்திக் காட்டியிருக்கிறாள். அவளோடு இணைந்து நாமும் யாகம் செய்வோமே!  

No comments:

Post a Comment