Monday, September 3, 2012

உலகில் எல்லா பொருட்களிலும், குணங்களிலும் நன்மையும், தீமையும் கலந்திருக்கிறது

மனிதனின் குணங்கள் நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். தாமதமாக வீட்டுப்பாடம் எழுதும் மகனை "மசமசன்னு எழுதாதே! வேகமா எழுது!' என்று அம்மா கண்டிப்பாள். ஒருவர் தாமதம் காரணமாக ரயிலை விட்டுவிட்டார். அந்த ரயில் அன்று விபத்துக்குள்ளாகி பலர் இறந்து விட்டனர். ஆக, தாமதத்தில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. கவுதமர் என்ற முனிவரின் மகன் சிரகாரி. சரியான சோம்பேறி. என்ன சொன்னாலும் தாமதமாகத் தான் செய்வான். ஒரு சமயம், கவுதமருக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. சிரகாரியை அழைத்து, ""டேய்! உன் தாயை வெட்டிக் கொன்று விடு,' 'என்று உத்தரவு போட்டார். ஜமதக்னியின் உத்தரவை மீற முடியாத பரசுராமனின் நிலைக்கு ஆளானான் சிரகாரி. "தாயைக் கொல்வது பாவம், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதும் உண்மை! என்ன செய்யலாம்?' என குழம்பிப்போன அவன், சிந்திக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில் இந்திரன் துறவி வேடத்தில் அங்கு வந்தான். ""பெண்கள் தெய்வங்கள். அவர்கள் மீது காரணமில்லாமல் சந்தேகப்படக்கூடாது. சந்தேகத்தால், ஒரு பெண்ணின் உயிர் போகிறதென்றால் அதை விட அந்த வம்சத்திற்கு கொடிய பாவம் ஏதுமில்லை,'' என்று கவுதமரின் காதில் விழும்படியாக பேசிக்கொண்டே அவ்விடத்தைக் கடந்தான். கவுதமரின் மனம் மாறியது. அவர் அவசர அவசரமாக ஓடிவந்தார். மகனிடம் ""சிரகாரி! உன் தாயைக் கொன்று விட்டாயா?'' என மனம் படபடக்க கேட்டார். ""இல்லை அப்பா! அவளைக் கொன்றால் பாவம் ஏற்படுமா? உங்கள் கட்டளையை மீறினால் பாவம் ஏற்படுமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். விடை கிடைத்ததும் அதற்கேற்ப செய்யலாம் எனத் தாமதித்தேன்,'' என்றான். அவனது சுபாவமான தாமத குணம் அன்னையின் உயிரைக் காப்பாற்றியது. உலகில் எல்லா பொருட்களிலும், குணங்களிலும் நன்மையும், தீமையும் கலந்திருக்கிறது. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment