Thursday, November 29, 2012

தந்தை சொல்லை பிள்ளைகள் கேட்க வேண்டும்

ஒருகாலத்தில், அப்பாவைக் கண்டால் பிள்ளைகள் நடுநடுங்குவார்கள். பணிக்குச் சென்றுவிட்டு, தன் கணவர் வீடு திரும்பும் முன், அம்மா பிள்ளைகளை "அலார்ட்' செய்து விடுவாள். ""டேய்! எல்லாரும் படியுங்க! அப்பா வர்ற நேரம். அங்கே இங்கேன்னு கூச்சல் போட்டுகிட்டு திரிஞ்சா முதுகுத்தோல் பிய்ஞ்சிடும்'' என்று பயமுறுத்துவாள். பிள்ளைகளும் "கப்சிப்' ஆகி விடுவார்கள்.
"ஆனால்... இன்று...' கலியுகதர்மம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இவர் ஆபீஸ், வேலை, வெளிநாடு, உள்நாடு என சுற்றிவிட்டு ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டுக்கு வருவார். அவரைப் பார்க்கிற குழந்தை, ""அம்மா! இந்த மாமா யாரும்மா! அடுத்த தடவை வரும்போது சாக்லெட் வாங்கிட்டு வரச்சொல்லு' என்கிறது. நிலைமை தலைகீழாகி விட்டது.
வேலைக்குப் போகிறோம் என்ற பெயரில், குழந்தைகளுடன் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது. அன்றைய தினம் இதை விடக் கடுமையான வேலைகளைப் பார்த்தாலும் கூட, அப்பாவுக்கு குடும்பப்பொறுப்பு இருந்தது. ஒரு குழந்தை படிப்பில் முன்னேறவும், வாழ்க்கை என்னும் வானத்தில் சிறகடித்து பறக்கவும் இரண்டு இறக்கைகள் தேவை. ஒன்று தாய், இன்னொன்று தந்தை. ஆனால், இறக்கை இல்லாத பறவையாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள் நமது குழந்தைகள்.
தந்தையின் கடமை உணர்ச்சிக்கு ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். வங்காளத்தில் தோன்றிய அவதார புருஷர் ஸ்ரீசைதன்யர். இவரைப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது தந்தை மிஸ்ராவின் விருப்பம். சைதன்யருக்கோ படிப்பில் ஆர்வமில்லை. இதனால், பிள்ளையை திட்டிக்கொண்டே இருப்பார். ஒருநாள், கனவில் ஒரு மகான் தோன்றினார்.
""மிஸ்ரா, குழந்தையைத் திட்டாதே. அவன் ஒரு மகானாகப் போகிறவன். கல்வி அவனுக்குத் தேவையில்லை,'' என்றார்.
அதற்கு பதிலளித்த மிஸ்ரா,""சுவாமி! நீங்கள் பெரிய மகானாக இருக்கலாம், என் பிள்ளையும் பிற்காலத்தில் மகானாக மாறலாம். ஆனால், இன்று தந்தை என்ற நிலையில், என் கடமையைச் செய்தாக வேண்டும். அவன் படிக்க வேண்டும்,'' என பதிலளித்தார். மிஸ்ராவின் கடமை உணர்ச்சியை அந்த மகான் பாராட்டினார். அத்துடன் கனவு கலைந்து விட்டது. பிற்காலத்தில், தந்தையின் கடமையுணர்வால், மக்காக இருந்த ஸ்ரீசைதன்யரும் படித்து ஆசிரியர் பணியில் இணைந்தார். சிறுவயதில் தான் செய்த தவறுகளை மனதில் வைத்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அனைவரும் பாராட்டும்படியான நிலையைப் பெற்றார். மகானாகவும் மாறினார்.
தந்தை சொல்லை பிள்ளைகள் கேட்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் பெற்றவர்களுக்கும் கவனம் வேண்டும். சரிதானே!

No comments:

Post a Comment