Friday, June 21, 2013

இன்று போய் நாளை வா "

முதல் நாள் போரில் , ராமனை எதிர்த்த ராவணன் தேர் இழந்து , வாள் இழந்து , வில் இழந்து கவசம் இழந்து , கிரீடம் இழந்து தன்னந்தனியனாக நிற்கிறான் . ராமன் இஷ்டப்பட்டிருந்தால் , அப்பொழுதே அவனைக் கொன்று போரை முடித்திருக்கலாம் . அவனுக்கு நோக்கம் முக்கியம் . அந்த நோக்கத்தை எந்த வழியில் நிறைவேற்றுகிறான் என்பதும் முக்கியம் . யுத்தமானாலும் , அதையும் தர்ம வழியில் நடத்த வேண்டும் என்பது அவன் கொள்கை . அதனால் நிராயுதபாணியாக இருந்த ராவணனை அவன் கொல்ல விரும்பவில்லை . அதற்குப் பதில் , " இன்று போய் நாளை வா " என்று சொன்னான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் , கம்பரின் பாட்டில் , ' இன்று போய் , நாளை வா என்று மட்டும் இல்லை' இன்னொரு முக்கியமான சொல்லும் இருக்கிறது . அந்தச் சொல்லோடு சேர்த்துச் சொன்னால்தான் இந்த வாசகத்துக்குச் சரியான பொருள் கிடைக்கும் .
ராமன் " இன்று போய் நாளை வா " என்று மட்டும் சொல்லவில்லை , " போர்க்கு " என்ற சொல்லைச் சேர்த்து , " இன்று போய் போர்க்கு நாளை வா " என்கிறான் .
இதில் ராமன் ஒரு கருத்தைச் சூசகமாகக் கூறுகிறான் . " போர் புரிவதானால் நாளை வா . இல்லை , என்னைச் சரண் அடைவதென்றால் இன்றே அடை , போரை இத்தோடு நிறுத்திக்கொள்வோம் " என்கிறான் .
இது ராமனை ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு நிறுத்தாதா என்று சிலர் கேட்கலாம் . அது என்ன இக்கட்டான நிலை ! வாலி வதத்தின்போது , ஏன் ராமன் மறைந்து நின்றான் என்று லட்சுமணன் விளக்கம் கூறுகிறானே , அந்த இக்கட்டான நிலை .
லட்சுமணன் கூறுகிறான் , " நின் தம்பி முன்பு வந்து சரண் புக , உன்னைக் கொல்லுவேன் என்று ராமன் அவனுக்கு வாக்குக் கொடுத்தான் . ராமன் உன் எதிரில் வந்திருந்தால் நீயும் சரண் புகுந்திருப்பாய் . அப்பொழுது நின் தம்பிக்குக் கொடுத்த வாக்கு என்ன ஆவது " என்று .
அதே மாதிரி , இங்கே ராவணன் சரண் புகுந்தால் , ஏற்கனவே விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து கொடுத்த அரசை ராவணனுக்கு எப்படிக் கொடுப்பது ? ஆனால் இது பற்றி ராமன் கவலைப்படவில்லை . அப்படி ராவணன் சரண் அடைந்திருந்தால் , கோசலை நாட்டை அவனுக்குக் கொடுத்திருப்பான் என்று காட்ட , கம்பர் , " இன்று போய் நாளை வா " என்று சொன்னது யார் தெரியுமா ,
" கோசலை நாடுடை வள்ளல் " என்று அப்பாட்டை முடிக்கிறார்

No comments:

Post a Comment