Monday, September 15, 2014

ஆடி18 ஆடி பதினெட்டு... பதினெட்டாம் பெருக்கு-----ஆடிபெருக்கு

ஆடி பதினெட்டு... பதினெட்டாம் பெருக்கு என்றெல்லாம் நதிக்கரைகளில் விசேஷமாகக்
கொண்டாடுவார்கள். அது என்ன 18?
18 என்ற எண் "ஜயத்தை'.... அதாவது வெற்றியைக் குறிக்கும். அதை முன்னிட்டே காவிரிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள். ""காவிரி இன்றேல், தமிழகத்திற்கு அருளாதாரமும் இல்லை... பொருளாதாரமும் இல்லை...'' என்பார் வாரியார் சுவாமி.
அனைவரையும் வாழ வைக்கும் அந்தக்காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவே,
"ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா?
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள்.
அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி
என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். ஆற்றங்கரையை அடைய மூன்று மணி நேரமாகும்.
அங்கே தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும்....
பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள்.
அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.
இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. அ@தŒமயத்தில் சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.
தெருவெங்கும் அகல் விளக்குகள் மிதந்து வருவதைப் போல இருக்கும் இந்தக் காட்சி.
சிறுவர்கள் இவ்வாறு குதூகலிக்க, வாலிபர்களோ.... கரையில் இருக்கும் மரங்களின் மீதேறி ஆற்று வெள்ளத்தில் குதித்துக் கும்மாளமிடுவார்கள்.
ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து உண்பார்கள்.
அனைவரையும் வாழ வைக்கும் காவிரித் தாயை வழிபட்டு நன்றி செலுத்துதல், குடும்ப ஒற்றுமை, ஊர் ஒற்றுமை, குதூகலமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவுவதற்கு ஆடிப்பெருக்கு விழா தூண்டுகோலாக இருக்கிறது. இனியேனும், தண்ணீருக்கு மரியாதை கொடுப்போம். ஆறுகளைச் சுத்தமாக்குவோம். ஆடிப்பெருக்கன்று பழைய களை கட்டட்டும்!

No comments:

Post a Comment