Thursday, September 10, 2015

கண் திருஷ்டியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!!

கண் திருஷ்டியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!!

”கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது,” என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது, ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ பல ஆண்டுகளுக்கும் ஏன் பல பிறவிகளுக்கும் கூட தொடரக் கூடியது. மனிதர்கள் அனுபவிக்கும் திருஷ்டி துன்பங்களும் அவர்களுடைய பூர்வ ஜென்ம செயல்களின் பலன்களே என்பதில் ஐயமில்லை.
கண் திருஷ்டியைக்களையும், சஹஸ்ர தீப தரிசனம் நோய்த் துன்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்களை இறை வழிபாடுகள், தீர்த்த யாத்திரைகள் போன்ற ஆன்மீக சாதனங்களால் முற்றிலும் தணிக்க முடியாது என்பது உண்மையே ஆயினும் அத்துன்பங்களின் விளைவுகளை நிச்சயமாக இறை வழிபாடுகளால் ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும், எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தேவையான மன உறுதியைப் பெற ஆன்மீக சாதனம் ஒன்றுதான் வழி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
பொறாமை சக்திகளின் வெளிப்பாடு அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையையே நாம் திருஷ்டி என்று அழைக்கிறோம். இவ்வாறு நல்ல எண்ணெங்கள், நற்சக்திகளின் விளைவுகளை விட தீய சக்திகளின், பொறாமை எண்ணங்களின் தாக்குதல் அதிகரிக்கும்போது அந்த சக்திகளின் தீவிரத்தைப் பொறுத்து விபத்துகள், உயிருக்கு ஆபத்து ஏற்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன.
எனவே எந்த அளிவிற்குப் புண்ணிய சக்தியை பெருக்கிக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு பொறாமை எண்ணங்களிலிருந்தும் அதன் விளைவாக ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் நம்மையும் நம்முடைய உடைமைகளையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். பொறாமை ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது கண்தானே. அதனால் திருஷ்டி ஏற்படும்போது அது எந்த வித காரணத்தால் ஏற்பட்டாலும் அதை கண் திருஷ்டி என்றே வகைப்படுத்துகிறோம்.
கண்களால் தூண்டப்பட்ட மனது பக்குவம் அடையாத நிலையில் இருக்கும்போது அது பொறாமை எண்ணமாக வடிவெடுத்து மற்றவர்களைத் தாக்குகிறது. இவ்வாறு ஒரு எண்ணம் பொறாமையாக மாறி மற்றவர்களுக்கு அது துன்பத்தை இழைக்கும்போது எந்த அளவிற்கு அதனால் ஏற்படும் விளைவுகள் கொடியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின் புண்ணிய சக்திகள் கரைந்து விடும் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.
கண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரம் !

மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள், மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து துன்பத்தை விளைவிக்கின்றன. எனவே பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால் திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
• மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும். • மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.
• ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.
• பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.

No comments:

Post a Comment