Thursday, May 26, 2011

பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம்' -அரவானின் தியாகம்தான்


 

"அரவானின் தியாகம்தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம்' என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும் நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக "களப்பலி'யான கதை சற்று வித்தியாசமானது.

பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவனான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன்.

""சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்?''என்று கேட்டார்.

ஓலைச் சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், ""சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம்'' என்றான்.

"சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர்தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன். வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது. மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன்.

அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல், ""களப்பலிக்குத் தயார்'' என்று சம்மதம் தெரிவித்தவன், அதேசமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான்.

""நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார்'' என்றான்.

கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றிவிடலாம். ஆனால், முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது?' நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார்.

பிறகு அவனிடம், ""உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம்'' என்றார்.

அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலைகாட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான்; கைகோர்த்தான். சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்குமுன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக்கொண்டு மாளிகைக்குள் சென்றான்.
இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன. அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்.

அரவானை காந்தர்வ விவாகம் செய்துகொண்ட அந்த அழகி யார்?

"அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார்' என்றும்; "கண்ணனே பெண்ணாக மாறினார்' என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான்.

முறைப்படி அவனை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத்தான் பாரதப்போர் என்று வரலாறு சொல்கிறது.

இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பௌர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறுகிறது அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோவிலை நோக்கி வருவது வழக்கம்.

பாரதப்போரில் களப்பலியான அரவான்தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்குமுன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள்தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

பௌர்ணமிக்கு முதல் நாள் கூத்தாண்டவர் சந்நிதிமுன் மணப்பெண்போல் ஒவ்வொரு திருநங்கையும் அலங்கரித்து நிற்க, அந்தக் கோவில் பூசாரி ஒவ்வொருவருக்கும் அரவான் சார்பாகத் தாலிகட்டுவார். அன்றிரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகத் திருவிழா நடைபெறும்.

மறுநாள் காலை அரவான் களப்பலியானதாக நினைத்து, முதல் நாள் கட்டிக்கொண்ட தாலியை அறுத்தெறிந்து விட்டு வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு சோகமாகக் காணப்படுவார்கள். சிலர் ஒப்பாரிப் பாட்டுப் பாடுவார்கள்.

இந்த விழாவினையொட்டி கூத்தாண்டவர் கோவிலில் தனியாக அமைந்திருக்கும் மேடையில் அழகிப் போட்டிகள் நடைபெறுவது உண்டு. இதில் அரவாணிகள் மட்டும் கலந்துகொள்வார்கள். முதல் பரிசு பெறும் அரவாணிக்கு "மிஸ் கூவாகம்' என்ற பட்டமும் வழங்குவார்கள்.

பாரதப் போருக்காகக் களப்பலியான அரவானின் தலை போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு களித்தான்.

பாண்டவர்கள் வெற்றி பெற்றதும் கண்ணபிரான் அரவானை உயிர்ப்பித்தார் என்றும் புராணம் கூறுகிறது

No comments:

Post a Comment