Monday, September 3, 2012

இன்று என் உதவி உனக்கு தேவை தானே!''

வாசவதத்தை என்ற நடனமாது மதுரா நகரில் வசித்தாள். அழகுதேவதையான அவளது ஆட்டத்தை மட்டுமல்ல, அவளையும் ரசித்தார்கள் செல்வந்தர்கள். ஒருமுறை உபகுப்தர் என்ற புத்தத்துறவி அவள் வீட்டு முன் வந்து நின்று, ""பிச்சையிடுங்கள் தாயே!'' என கூவினார். பிச்சை கேட்டாலும் கூட, அந்தக் குரல் இனிமையாகவும் கனிவாகவும் இருக்கவே, பணிப்பெண்களை அனுப்பாமல் வாசவதத்தையே வெளியே வந்தாள். பிச்சை பாத்திரத்தை நீட்டினார் துறவி. அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த வாசவத்ததை, " துறவியாக இருந்தாலும், எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆகா...இந்த ஆணழகன் வாழ்க்கை முழுக்க என்னோடு இருந்தால்....' அவர் மேல் கண்டதும் காதல் கொண்டாள். ""துறவியே! உள்ளே வாருங்கள். இனி இந்த மாளிகை, இங்கிருக்கும் சொத்து, சுகம்...ஏன்...நான் கூட உங்களுக்கே சொந்தம். இனி பிச்சை எடுக்கத் தேவையில்லை. சொகுசாக இங்கேயே வாழலாம்,''...அவள் அழைத்தாள். ""அம்மா! இப்போதைக்கு என் துணை உனக்கு தேவையில்லை. உனக்கு எப்போது என் துணை தேவைப்படுகிறதோ, அப்போது நானே உன்னைத் தேடி வருவேன்,''. அவர் நகர்ந்து விட்டார். ஆண்டுகள் உருண்டோடின. வாசவதத்தையின் அழகு மங்கியதால் தேடி வருவோர் குறைந்தனர். சொத்து சுகம் போயிற்று. <நோய் வாட்டியது. ஒரு கட்டத்தில், உடலில் சீழ்வடிய யமுனை ஆற்றங்கரையில் பிச்சைக்காரியாய், கவனிப்பாரின்றி கிடந்தாள். ஒருநாள் "அம்மா' என்ற குரல் கேட்டது. துறவி ஒருவர் அவளருகே வந்தார். ""ஐயா! தாங்கள் யார்? தங்களுக்கு என்ன வேண்டும்?'' வாசவதத்தை ஈன ஸ்வரத்தில் கேட்டாள். ""எனக்கு ஒன்றும் தேவையில்லை. இப்போது என் உதவி தான் உனக்கு தேவை,''. இந்த வார்த்தைகள் எப்போதே கேட்டது போலிருக்கவே, அவளது கண்கள் வியப்பால் விரிந்தன. ""நீங்களா!'' ""ஆம்! அன்றொரு நாள் உன் மாளிகைக்கு பிச்சை கேட்டு வந்த அதே உபகுப்தன் தான். இன்று என் உதவி உனக்கு தேவை தானே!'' என்றவர், அவளது உடலில் வழிந்த சீழை துடைக்க ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment