Monday, January 20, 2014

கிருஷ்ணர் ராதைக்கு சொன்ன கதை.


கிருஷ்ணர் ராதைக்கு சொன்ன கதை.
நன்றி-குமுதம் பக்தி.

கார்க்க முனிவர்தான் நந்தனின் குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.
கிருஷ்ணன் என்றால் கருப்பு நிறம் உடையவன் என்று பொருள். ஆனால் இந்தப் புராணத்தில் கிருஷ்ணன் என்றால் மிக உயர்ந்த மோட்சம் அளிப்பவன் என்று பொருள் தரப்படுகிறது. பலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு.
ஒருநாள் நந்தன், கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றான். அங்கிருந்த பெண்ணிடம் கிருஷ்ணனை ஒப்படைத்து விட்டுக் காட்டுக்குப் போனான். அவள்தான் ராதை.

இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கிருஷ்ணன் தன் மாய லீலையால் அவளிடமிருந்து மறைந்து தவிக்க வைத்துக் கண்ணாமூச்சியாடினான். இதனால் ராதை துன்பப்பட்டாள்.

"கண்ணா, கண்ணா!' என்று ஏங்கித் தவித்தாள். ராதையை பிருந்தாவனம் வரச் சொல்லி, அங்கும் அவளுடன் ஓடியாடி பாடி மகிழ வைத்தான். அவன் நிழல் மட்டும் வீட்டில் இருந்தது. கிருஷ்ணாவதாரத்தில் ஒரே சமயத்தில் அவன் எங்கும் நிறைந்திருப்பான் என்பதே அவனது மகிமை. ராதையுடன் பரமாத்மாவாக விளையாடியவன் கிருஷ்ணன்.

ஒருசமயம் பார்வதி, ராதா கிருஷ்ணனை முன்னிட்டு தவம் செய்து கொண்டிருந்தாள். தினசரி பூனைக்கு அருகில் இருந்த சித்திரா என்னும் நதியில் பூக்கும் தாமரை மலர்களை பறித்துப் பயன்படுத்தி வந்தாள். அந்த மலர்கள் அவளுடைய பூனைக்காகவே மலர்வை அவற்றை வேறு யாராவது பறித்தால் அரக்கர்கள் ஆவார்கள் என்ற சாபம் உண்டு.

கிருஷ்ணனுக்கு விஷப்பால் ஊட்டி கொல்ல முயன்றவள் பூதகி என்னும் அரக்கி. இவள் முற்பிறவியில் அசுரமன்னன் மகாபலிக்கு மகளாகப் பிறந்தவள். அப்போது அவள் பெயர் ரத்னமாலா. மகாவிஷ்ணு வாமனராக வந்தபோது அவருக்குப் பாலூட்ட எண்ணியவள்.

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட அரக்கனான திருணாவர்த்தன், முற்பிறவியில் மன்னன். சகஸ்ராக்ஷன் என்னும் பெயருடைய அவன் பாண்டிய குலத்தவன்.
யசோதை கிருஷ்ணனனை கயிறு கொண்டு கட்டியதால் அந்த அடையாளம் காரணமாக தாமோதரன் என்று பெயர். ஆனால் இந்தப் புராணத்தில் கிருஷ்ணனே நீண்ட துணியால் தன்னைப் பிணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கோகுலத்துச் சிறுவர்கள் கோபர்கள். சிறுமிகள் கோபியர்கள். ஒருசமயம் இக்கோபர்கள் ஒரு ஆலமரத்தின் கீழ் சண்டிகா தேவியை பூஜை செய்து விட்டு அப்படியே படுத்து உறங்கி விட்டார்கள். அந்த இரவில் தேவ தச்சனான விசுவகர்மா, பிருந்தாவனத்தில் வீடுகளை நிர்மாணம் செய்தானாம்.

அதில் ஒவ்வொரு கோபர் பெயரையும் எழுதி வைத்தான். கோபர்கள் உறங்கி இடமே பிருந்தாவனம். காலையில் கண் விழித்த கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள் தங்கள் பெயருள்ள வீட்டில் குடி புகுந்தனர்.

பிருந்தாவனம் என்ற பெயருக்க வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. ஸ்வயம்புவ மனுவின் குலத்தோன்றல் மன்னன் கேதாரன். அவன் மனைவி பிருந்தை. இவளை விருந்தை என்று அழைப்பர். அவளது பெயராலேயே பிருந்தாவனம் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

பிரம்ம வைவர்த்த புராணம் வேறு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ராதையின் பல பெயர்களுள் ஒன்று, பிருந்தை. கண்ணனும் ராதையும் ஓடியாடி விளையாடிக் களித்த இடம் என்பதால் இவ்விடம் பிருந்தாவனம் என்று பெயர் பெற்றது என்கிறது.
ஒரு சமயம் கிருஷ்ணரும் அவர் தோழர்களும் அந்தணர்களிடம் சென்று உணவு கேட்க, அவர்கள் உணவிடவில்லை.

கிருஷ்ணரின் ஆணைப்படி அவன் தோழர்களான கோபர்கள் அந்த வேதியர்களின் மனைவியரிடம் கேட்க, அவர்கள் கிருஷ்ணர் இருக்குமிடத்திற்கே வந்து உணவை படைத்தார்கள். பசி தீர்ந்தது. அவர்கள் கிருஷ்ணனிடம் அவன் தரிசனத்திலேயே சதா இருக்கும் வரத்தை வேண்டினர். விண்ணிலிருந்து ஒரு விமானம் வர அப்பெண்கள் அதிலேறி கோலாகலம் சென்று ஆனந்தமாக இருந்தார்கள். அவர்களின் நிழல்களே வேதியர்களின் குடில்களுக்குச் சென்றன. கிருஷ்ணனின் அருள் இது.

காளியன் எனும் கொடிய விஷப்பாம்பு, தன் மனைவியுடன் பெரிய மடு ஒன்றில் வசித்து வந்தது. அதனால் அந்த மடுவின் நீர் விஷமாகியது. அதை அருந்திய ஆடு, மாடுகள் இறந்து போயின. காளியனைக் கொல்ல கிருஷ்ணன் மடுவில் குதித்தான். காளியன், கிருஷ்ணனை விழுங்கினான். அடுத்த கணம் காளியனின் உடலில் தாங்கமுடியாத எரிச்சல் ஏற்பட்டது. பயந்துபோன அவன், கிருஷ்ணனை வெளியே துப்பினான்.

கிருஷ்ணன், காளியனின் படத்தின் மீது ஏறி நர்த்தனம் புரிந்தான். பளு தாங்காமல் காளியன் ரத்தமும், விஷமுமாகக் கக்கி மயங்கிப் போனான். காளியனின் மனைவி சுரசை கிருஷ்ணனை பிரார்த்தித்தாள். அச்சமயம் வானிலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் ஏறி சுரசை கோலோகம் சென்றாள். அவள் நிழலைக் காளியன் பெற்று மடுவை விட்டு நீங்கி ரமணகம் என்னும் இடத்தை அடைந்து வாழலானான்.
கந்தமான பர்வதத்தில் துர்வாச மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அச்மயம் சஹசிகன் என்பவன் திலோத்தமையுடன் அப்பகுதிக்கு வந்தான். முனிவரின் தவத்தை சிறிதும் மதியாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டார்கள். முனிவரின் தவம் பங்கப்பட்டது.

துர்வாச மகரிஷிக்குக் கோபம் வரக் கேட்கவா வேண்டும்? சஹசிகன் மறுபிறவியில் கழுதையாகப் பிறந்து கிருஷ்ணனால் கொல்லப்படுவான் என்று சபித்தார். திலோத்தமையை பாணாசுரனின் மகளாகப் பிறந்து கிருஷ்ணனின் பேரன் அனிருத்ரனை மணப்பாய் என்று சபித்தார். தவம் பங்கப்பட்டு திரிந்து கொண்டிருந்த துர்வாசர், அவுரவ முனிவர் மகள் கந்தவியைக் கண்டு அவளை மணக்க ஆசைப்பட்டார்.

அவுரவ முனிவரோ அவள் சண்டைக்காரி என்று கூறினார். துர்வாசரோ அவளுடைய நூறு திட்டுக்களை மன்னிப்பதாகக் கூறி மணந்தார். அவுரவ முனிவர் கவலையுடன் மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்.

ஒருமுறை கந்தவி நூறு முறைக்கு மேல் திட்டிவிட துர்வாசர் அவனை சாம்பலாகும்படி திட்டினார். அவள் சாம்பலாகி விடவே துர்வாசம் மனம் கலங்கிப் போனார்.

கிருஷ்ணன், துர்வாசரை சிறு பையன் வடிவில் வந்து சமாதானப்படுத்தினார். தன் மகளின் முடிவைக் கேட்டு மனம் கலங்கிப் போன அவுரவ முனிவர் உடனே துர்வாசர் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என்று சாபமிட்டார்.
மன்னன் அம்பரீஷனிடம் கோபம் கொண்டார் துர்வாசர். அவனைக் கொல்ல எண்ணி ஒரு வீரனை வாளுடன் தோற்றுவித்தார். அம்பரீஷன், திருமாலை வேண்டினான். சுதர்ஸன சக்கரம் தோன்றி வீரனின் கழுத்தை வெட்டிக் கொன்றதுடன் நில்லாமல், துர்வாசரையும் துரத்தியது.

அவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சரணடைந்தும் பலன் ஏதுமில்லை.
மறுபடியும் அம்பரீஷனையே சரணடைந்தார் துர்வாசர். சக்கரமும் சாந்தம் அடைந்தது. அதுமுதல் துர்வாசர், விஷ்ணு பக்தர்களிடம் கோபம் கொண்டு சபிப்பதைத் தவிர்த்தார்.

கிருஷ்ணன் நிறைய ராசலீலைகள் புரிந்தவன். கோபியர்களின் ஆடைகளைக் கவர்ந்து கதம்ப மரத்தின் மீதமர்ந்து வேடிக்கை காட்டியவன். ராதை நீரிலேயே இருந்து தியானித்துக் கிருஷ்ணன் புகழ்பாடி, உடைகளைத் திரும்பக் கொடுக்க வைத்தாள்.

கிருஷ்ணன், ராதையுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தான். கடைசியில் மலய மமலையை அடைந்தார்கள். பரந்த ஆலமரத்தின் அடியில் கேதகிப் புதர்கள் அருகில் அமர்ந்தார்கள். கிருஷ்ணன் பல கதைகளை ராதைக்குக் கூறலானான்.
அச்சமயம் அஷ்ட வக்ரமுனிவர் அங்கே வந்தார். அவரைப் பார்த்ததும் ராதை சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள். கிருஷ்ணன் அவள் சிரிப்பைத் தடுத்தான். அம்முனிவரின் கதையைக் கூறலானான்.

முற்பிறப்பில் தேவலன் என்ற அந்தணனாகப் பிறந்தார், அஷ்ட வக்ரமுனிவர். மனைவியுடன் வாழ்ந்த அவர் வேறு எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்வதில்லை என்று உறுதி பூண்டார். ஆனால் தேவலோக ரம்பை அவரைக் கண்டாள். தன்னை மணந்து கொள்ளுாறு வேண்டினாள். அவரோ மறுத்தார்.

அதனால் அம்முனிவர் உடல் வக்ரமாகும் படியும், அவர் அதுவரை பெற்ற புண்ணியங்கள் அனைத்தும் இழந்து விடுவார் என்றும் சாபமிட்டாள். அதைக் கேட்ட அம்முனிவர் தீக்குளிக்க முற்பட்டார். அச்சமயம் கிருஷ்ணன் தோன்றி, தடுத்ததுடன் அவருக்கு அஷ்ட வக்ரன் என்ற பெயரையும் சூட்டினார்.
அஷ்ட வக்கிரர் நெடுங்காலம் தவம் இயற்றினார். இங்கு கிருஷ்ணனையும் - ராதையையும் கண்டதும் அவருடைய சாபம் நீங்கியது. அவர்களை வணங்கித் துதித்தார்.





No comments:

Post a Comment