Friday, January 31, 2014

ஆளுக்கொரு அறிவுரை


ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன், அவரைக் கேலிசெய்தான்.
பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று, நடந்ததைச் சொன்னார்.
ராமகிருஷ்ணர் அவரிடம், ""நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்,'' என்றார்.
மற்றொரு முறை, மற்றொரு சீடரான விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி படகில் அவருடன் வந்தான். அவன், விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான். விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப் போனார். அவன் அப்படியே ஒடுங்கி விட்டான்.
இந்த சம்பவத்தை பெருமையாக குருவிடம் வந்து சொன்னார் விவேகானந்தர். உடனே, ராமகிருஷ்ணர் அவரைக் கடிந்து கொண்டார்.
''துறவிகளுக்கு பொறுமை வேண்டும். துறவு ஏற்ற நீ இப்படி செய்யலாமா?'' என்றார்.
அவர் சென்ற பிறகு மற்ற சீடர்கள், ""குருவே! நீங்கள் ஆளுக்கொரு அறிவுரையாக மாற்றி மாற்றி சொன்னது ஏன்? புரிந்து கொள்ள முடியவில்லையே,'' என்றனர்.
""பிரும்மானந்தர் அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னேன். விவேகானந்தர் உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு மேலும் உணர்ச்சியை ஊட்டி கோபக்காரனாக்கக்கூடாது. அவரவர், குணத்திற்கேற்பவே புத்திமதி சொல்ல வேண்டும். புரிகிறதா?'' என்றார்.
சீடர்கள் அவரது அறிவுத்திறன் குறித்து வியந்தனர்.

No comments:

Post a Comment