Monday, July 28, 2014

மஹா விஷ்ணுவை தரிசித்த துருவன்

மஹா விஷ்ணுவை தரிசித்த துருவன்

பக்தியில் சிறந்த பக்தி எது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த சிறுவன் துருவனைப் பற்றி தெரிந்துகொள்வோம். இறைவன் மீது கொண்ட பக்தியினால் தன்னுடைய சொந்த காரணத்திற்காக பகவான் விஷ்ணுவை மானிடப் பிறவியில் தரிசிக்க முடியும் என்பதை உலகிற்கு புரிய வைத்தவன். வெற்றியின் இரகசியம் நம்பிக்கைதான் என்பதை உணர்ந்த துருவன், வானில் துருவ நட்சத்திரமாக தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டான். இக் கதையை விஷ்ணு புராணத்தில் இருந்து வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மனு சக்கரவர்த்தியின் பேரனும், உத்தானபாதனின் மகனுமான துருவன், அவனுடைய தந்தை போருக்கு சென்று வெற்றியோடு திரும்பி வருகிறார் என கேள்விப்பட்டு, அவருக்கு வாழ்த்து சொல்ல தாயை அழைக்கிறான். ஆனால் அவனது தாயான சூநிதியோ நான் மகாராணியாக இருந்தபோதும் உன் சிற்றன்னைக்குத்தான் முதல் உரிமையை உன்னுடைய தந்தை வழங்கி இருக்கிறார். ஆகவே நீயும் செல்லாதே என்கிறாள்.

அவனோ தந்தையைப் பார்ப்பது என் கடமை என சொல்லி செல்கின்றான். அவனுடைய தந்தையின் மடியில் அமர்ந்திருந்த துருவனைக் கண்ட அவனுடைய சிற்றன்னையோ, என் மகனுக்குத்தான் முதல் உரிமை உனக்கு முதலுரிமை வேண்டுமானால் நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும் எனக்கூறி, அவனை கீழே தள்ளி அவமானப்படுத்தி விடுகிறாள். நீ வணங்கும் மகா விஷ்ணுவிடம் அடுத்த முறையாவது என் வயிற்றில் பிறக்க வேண்டும் என கேள் என்கிறாள். சிற்றன்னையின் கொடும் செயலுக்கு விடையளிக்க யாரும் இல்லாததால், தன் தாயிடம் இதுபற்றி கேட்டான். அவன் தாயான சூநிதி, பகவான் விஷ்ணுவின் மகிமையை உணர்ந்தவள் என்பதால், துருவனிடம் “மகனே இந்த காரியங்களுக்கு பகவான் விஷ்ணு ஒருவரே பதிலளிக்க வல்லவர். நீ நினைத்தால் அவருடைய மடியிலேயே அமரலாம்” என்கிறாள்.

தன் தாயின் வார்த்தைகள் மனதில் பதியவே துருவன் பகவான் மகா விஷ்ணுவை நேரில் பார்க்கும் ஆவல் மேலோங்க, தன் தந்தை, தாய், அரச போகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, பகவானைத் தேடி புறப்பட்டான். அப்படி புறப்பட்ட துருவனின் பயணத்தில் அவன் அணிந்திருந்த அணிகலன்களைத் வழித்திருடர்கள் அபகரிக்க விளைகின்றனர். மகா விஷ்ணு தனக்கு காட்சியளிக்க வேண்டும் என நினைப்பதனால், துருவனை தன் மகனாகக் கருதிய லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து நேரில் அவனுக்கு காட்சி அளித்து, அவனைக் காப்பாற்றுகிறார்.

லட்சுமி தேவி துருவனிடம்: உன்னுடைய சிறு வயதில் நீ விரதங்கள் மேற்கொண்டு பகவானை தரிசிக்க இயலாது என அவனுக்கு அறிவுரை கூறுகின்றாள். ஆனால் அவனுடைய உயரிய குறிக்கோள் மகா விஷ்ணு மட்டும்தான் என புரிந்துகொண்ட லட்சுமி தேவி வைராக்கியத்திற்கு இது சமயமல்ல என சொல்லியும், அவனோ: தாயே என்னை மன்னியுங்கள். நான் என் விஷ்ணுவைத் தரிசிக்க என்ன இன்னல் வந்தாலும், அதற்கு தடையாக உள்ள அனைத்து காரியங்களையும் மேற்கொண்டு அவரை தரிசிப்பேன் என கூறுகின்றான். அரண்மனையில் துருவனுடைய தாய் சூநிதி மகனைக் காணாமல் கணவன் உத்தானபாதனிடம் சென்று மன்றாடுகிறாள். ராஜாவாகிய நீங்கள் என்னுடைய மகனை கண்டுபிடித்து தாருங்கள் என தன்னுடைய கணவனிடம் முறையிடுகிறாள். ராஜாவாகிய உத்தானபாதன் ஒரு படையை அனுப்பித் தேடச் சொல்வதாக சொல்கின்றார். அங்கே அவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த துருவனின் தாத்தா மனு சக்கரவர்த்திக்கு கோபம் வருகிறது. உத்தானபாதனிடம், உன் மகன் காணாமல் போனால் நீதான் சென்று தேட வேண்டும். உன் கண்கள் ஆசையின் காரணமாக குருடாகி விட்டது. உலக இச்சையின் மறு உருவங்கள் உன் மனதை ஆட்கொண்டதால், நீ உன் மகனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்புகிறார்.

தகப்பனார் உத்தானபாதன் தன்னைத் தேடி காட்டிற்கு வருவதைக் கண்டான் துருவன். தகப்பனின் அன்பால் தன் பயணம் தடைபடும் என உணர்ந்தவன், தந்தையைக் காணாமல் ஒளிந்துகொண்டு பகவானை மட்டும் மனதில் இருத்தியவனாய் முன்னேறிச் சென்றான். வழியில் தென்பட்டவர்கள் தன்னைத் திரும்பிச்செல் எனக் கூறிய வார்த்தைகளை கேட்காமல், பகவான் ஒன்றே குறிக்கோளாக எண்ணி திடமான மன உறுதியுடன், தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் சென்றான். வழியில் நாரதர் அவனின் ஆன்ம தாகம் தீர்க்க வழி சொல்வதாகக் கூறி, அவனை ‘திரும்பிச்சென்று விடு’ என்றபோதும், தன் மனதிலுள்ள திடமான குறிக்கோளை எடுத்துரைத்து, விஷ்ணுவைக் காண வழி சொல்லுமாறு மன்றாடி கேட்கிறான்.

துருவனின் உறுதியான மனதைத் தெரிந்துகொண்டார் நாரதர். “பகவான் விஷ்ணுவைக் காண வேண்டுமானால் அநேக இன்னல்களை சந்திக்க வேண்டும். நீயோ சிறுவன் உன்னால் முடியுமா?” என வினவினார். துருவன் சிறுவனாக இருந்தபோதும் தன் தந்தையும், சிற்றன்னையும் அவனிடம் நடந்துகொண்ட விதம், அவன் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டபடியால், நாரதர் கேட்ட கேள்விக்கு “என்ன இன்னல்கள் வந்தபோதும், நான் பகவான் விஷ்ணுவைத் தரிசிப்பதற்காக எதையும் தாங்கிக்கொள்வேன்” என உறுதியாகக் கூறினான். இறைவனைக் காண நம் கண்முன் உள்ள நம் தேவைகளே தடையாக இருப்பதை உணர்ந்த நாரதர், “முதலில் உன் உணவை விட்டுவிடு” என்றார். துருவனின் மனம் விஷ்ணுவைக் காண கொண்டுள்ள ஆவலில் நாரதர் கூறியபடியே செய்கின்றான். பின்னர் “தண்ணீர் குடிப்பதையும் விட்டுவிடு” என கூறினார். அதற்கும் சிறிதும் அஞ்சாமல்,

தன்னிடம் உள்ள தண்ணீரைத் தரையில் ஊற்றிவிட்டு பகவானின் நாமத்தை உச்சரித்து கடும் தவம் புரிகிறான். உணவையும், தண்ணீரையும் மறந்து பகவான் விஷ்ணுவையே தியானிக்கையில், அந்த பரம்பொருள் துருவனின் இருதயத்திற்குள் வந்ததை உணர்ந்து சந்தோஷம் மேலோங்க நாரதரிடம், “எனக்குள் இறைவன் இருப்பதை உணர்கிறேன்! ஆனால் அவர் என் முன்பு ஏன் பிரத்தியட்சமாக காட்சி கொடுக்கவில்லை?” என வருத்தம் நிறைந்த குரலில் தன் ஆதங்கத்தை எடுத்து உரைக்கிறான். துருவனின் ஜீவாத்மாவில் அந்த பரமாத்மா உறைவிடம் கொண்டபின், துருவனுக்குள் முழு சிருஷ்டியும் அடங்கி விட்டது. இதை உணர்ந்த நாரதர், “உன் மூச்சை ஓம் என்ற சத்துவத்துடன் உள் இழுத்து அப்படியே நிறுத்திவிடு” என்றுரைத்தார். தன் உடலை வென்ற பாலகன் தற்போது நாரதரின் சொற்படி தன் உயிரையும் துறக்க விரதம் பூண்டு, நாரதர் கூறிய வண்ணம் மூச்சை நிறுத்திக் கொண்டான். அந்த கணத்தில் சிருஷ்டி முழுவதும் இயங்காமல் ஸ்தம்பித்து விட்டது. இப்போது துருவனின் ஆசையை நிறைவேற்ற தேவர்கள் அனைவரும் ஏகமனதாக பகவான் விஷ்ணுவிடம் விண்ணப்பித்தனர். பகவானும் துருவனின் உயிரைக் காப்பாற்ற மற்றும் அண்ட சராசரத்தையும் காப்பாற்ற காட்சி கொடுக்கிறார்! அவனுக்கு அறிவுரையும் கூறுகிறார். நீ என்னைக் கண்டதும் உன்னுடைய கடமை முடிவுறவில்லை. இந்த பிறவியில் நீ பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உன்னுடைய கடமையைச் செய். எந்த பிள்ளையும் பெற்றோரின் மடியில் இருந்து இறங்கக்கூடாது. மேலும் என்னைப் பார்க்க இப்படி பசியாக இருந்து தவம் இருக்கக் கூடாது. நீ இந்த கடமைகளை சிறப்பாக நிறைவேற்றிய பின்னர் உன்னை இத்தரணியில் அனைவரும் மறக்காமல் இருப்பதற்காக நீ வானுலகில் துருவ நட்சத்திரமாக ஒளி வீசிக் கொண்டிருப்பாய் என இறை ஆசி வழங்குகின்றார். இந்த பூவுலகத்தில் நீ ஒரே இறைவனின் கொள்கையைப் பின்பற்றி எனக்கு சேவை செய்வாய். இவ்வாறு தர்மம், கர்மம், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி தெளிவாக அவனுக்கு விளக்கிக் கூறுகின்றார்.

லட்சுமி தேவியும் அவனுக்கு காட்சி தருகின்றார். அப்பொழுது துருவன்: தாயே தாங்கள் முன்பே பகவான் விஷ்ணுவைத் தரிசிக்கும்படி செய்திருக்கலாம். ஏன் காலதாமதம் செய்தீர்கள்? என கேட்டான்.நான் உதவி செய்திருந்தால் இன்று நீ அடைந்த முழுமையை அடைந்திருக்க முடியாது. நீ விஷ்ணுவுக்கு சிறந்த பக்தனாகி விட்டாய். அவரை அடைவதற்கு யாராவது உதவி செய்தால் மகத்துவம் அவர்களைச் சார்ந்திருக்கும். நீ சிரத்தையுடன் மேற்கொண்ட தவத்தின் வலிமையால் அவரை அடைவதற்கான வழியைத் தெரிந்துகொண்டாய் எனக்கூறி துருவனுக்கு லட்சுமி தேவி ஆசி வழங்குகிறார். இறுதியாக நாரதரும் அவனுக்கு காட்சி அளிக்கிறார். துருவன் அவரை தன் மானசீக குருவாக ஏற்று தவம் புரிந்து வெற்றி பெற்றதற்கு, வழி சொன்னதற்கு நன்றி உரைக்கின்றான். நாரதரும், விஷ்ணுவும், லட்சுமி தேவியும் துருவனை காட்டில் இருந்து அவனுடைய தந்தையின் அரண்மனை வரைக்கும் கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர்.

அரண்மனையில், துருவனின் தந்தையோ அவனின் சிற்றன்னையை வெறுத்து, அவனுக்காக மகா விஷ்ணுவிடம் தன் தவறை நினைத்து, வருந்தி வேண்டிக்கொண்டிருக்கிறார். துருவன் முதலாவதாக தன் சிற்றன்னையைக் கண்டு, அவள் செய்த உபகாரத்திற்கு நன்றி செலுத்த செல்கின்றான். அவனது சிற்றன்னையோ அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவனோ, உங்களால்தான் மகா விஷ்ணுவைச் சந்திக்க நேர்ந்தது என கூறி மகிழ்ச்சி அடைகிறான். தந்தையிடம் சிற்றன்னையினால்தான் நான் மகா விஷ்ணுவின் மடியில் அமர்ந்தேன் என வாதாடி மன்னிக்கும்படி வேண்டுகின்றான். பகவான் விஷ்ணு இந்த பூமியில் அவனுக்கு விதித்த கடமைகளை நிறைவேற்றி சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கின்றான்.

இக்கதை மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையிலும் மகா விஷ்ணுவானவர் நமக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கின்றார். அதை நாம் புரிந்துகொண்டு செயல்பட்டால் அவரிடம் வந்து சேரலாம். இதைச் சிறு வயதிலேயே உணர்ந்து கொண்ட சிறுவனாகிய துருவன் எத்தனை இன்னல் வந்தாலும், தன்னுடைய தவத்தினால் அவருடைய நாமத்தை அனுதினமும் சொல்லி, அவருக்கு நன்றி செலுத்தி, அவன் ஸ்ரீமந் நாராயணர் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாட்டை நமக்கு உணர வைத்தான். சிறு வயதில் பெற்றோர்களுக்குரிய கடமையைச் செய்ய வேண்டும்! குருவிடம் பக்தி கொண்டு இறைவனை அடைய வேண்டும். இறைவன் படைத்த அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டோம் அல்லவா!

இரவினில் துருவ நட்சத்திரம் ஒளி வீசி திசையை நமக்கு காண்பிப்பது போல, இவ்வுலகிலுள்ள மக்கள் கடவுளை அடைவதற்கு நாமும் துருவனைப்போல பிறருக்கு வழிகாட்டும் ஜோதியாக பிரகாசிப்போம்.

No comments:

Post a Comment