Sunday, October 25, 2015

கண்ணன் செயல்கள் - சூழ்ச்சிகளா? தர்மமா?

கண்ணன் செயல்கள் - சூழ்ச்சிகளா? தர்மமா?

"
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் கண்ணன் தீட்டிய திட்டம், நெத்தியடி திட்டம் என்ற பாராட்டைப் பெறும்?
1) ‪#‎பீஷ்மர்‬ 2) ‪#‎துரோணர்‬ 3) கர்ணன் 4) ஜயத்ரதன் 5) துரியோதனன் 6) ‪#‎விதுரர்‬ ‪#‎மகாபாரதம்‬ .
********************************************************************************************
மகாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்? ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் கண்ணனின் ‘வேலை’ இருந்திருக்கிறது. கண்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.
அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் கண்ணன் தீட்டிய திட்டம்பிளான் தான் ‘சிறப்பு வாய்ந்ததாக ’ என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது ’ என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் – இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான். இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்? அவரை வீழ்த்தக் கண்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?
கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு முன்னிகழ்ச்சி.
யார் இந்த விதுரர்?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் ஒன்றவிட்ட சகோதரன் என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும்.
மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது பாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது. அவர் மகாவீரர்கூட. அவருடைய வில் அவர் கையில் இருக்கும்வரை அவரை யாரும் வீழ்த்த முடியாது என்பதும் பிரசித்தமான விஷயம்.
இந்த விதுரருடைய பூர்வாசிரமக் கதை என்ன?
மாண்டவ்யர் என்பவர் ஒரு பெரிய ரிஷி. ஒரு நாள், சில திருடர்கள் அவர் முன் அரண்மனையிலிருந்து களவாடிய பொருள்களைப் போட்டுவிட்டு அவருடைய ஆசிரமத்தில் ஒளிந்துகொண்டனர். அரசருடைய ஆட்கள் அங்கு வந்து அவர் சமாதியில் பேசாமல் இருப்பதைப் பார்த்து அவர் பாசாங்கு செய்வதாக நினைத்து அவரையும் மற்ற திருடர்களையும், களவு சாமான்களுடன் அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள்.
அரசனுக்குத் தகவல் சொன்னார்கள். அரசனும் தீர விசாரிக்காமலேயே யாவரையும் கழுமரத்தில் ஏற்றச் சொல்லிவிட்டான். எல்லாத் திருடர்களும் இறந்தனர். ஆனால் மாண்டவ்யரோ தன் யோக பலத்தினால் உயிருடன் இருந்தார். அரசன் இதைக் கேள்விப்பட்டு உடனே அவரை விடுவிக்கச் சொன்னான். காவலாளர்களால் அவரை கழுமரத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை.
அதனால் தலைக்கு மேலேயும் ஆசனத்துக்கு கீழேயும் இருந்த பகுதியை வெட்டி எடுத்தனர். அதனாலேயே அவருக்கு ஆணி மாண்டவ்யர் என்று பெயர் வந்தது.
மாண்டவ்யர் அரசனிடம் கோபப்படாமல் நேரே எமதர்ம ராஜனிடன் சென்று, “எனக்கேன் இப்படி ஒரு தண்டனை? நான் என்ன பாபம் செய்தேன்?” என்று கேட்டார். எமன் சொன்னார், “ரிஷியே, நீர் சின்ன வயதில் ஈக்களைக் கொன்று ஒரு குச்சியில் கோத்து விளையாடுவீர்.
நீர் செய்த ஜீவ இம்சைக்குத்தான் இந்த தண்டனை” என்றார்.
ரிஷிக்கு மகா கோபம் வந்துவிட்டது. “தர்மராஜரே, நீர் தருமத்தின் காவலர். உமக்குத் தெரியாதா? தண்டனை கொடுக்கும் முன் குற்றவாளியின் வயது, அவனுடைய அறிவுத்திறன் அறிந்து குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்பது நியதி.
நான் செய்தது அறியாப் பருவத்தில். என் குற்றத்திற்கு நீர் அளித்தது பெரிய தண்டனை. நீர் தருமத்திலிருந்து தவறிவிட்டீர். இதோ நான் உமக்கு ஒரு சாபமிடுகிறேன். நீர் பூலோகத்தில் மானிடனாகப் பிறந்து நான் பட்ட அவமானத்தைவிட நூறு மடங்கு அவமானத்தை அடைவீர்” என்று சாபமிட்டார்.
அந்த சாபத்தின் பாதிப்பு தான், எமதர்மராஜர் விதுரராகப் பிறந்தது.
இப்போது, மறுபடியும் கதைக்கு வருவோம்.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் கண்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ‘பலவீனம் ’. பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம். கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.
மனு சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா?
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள். அதற்கான தண்டனை – யுத்தத்தில் மரணம்.
விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்?
விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும்.
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை-தர்மராஜர் – சமநிலை சரியாக வராதே?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் – பீஷ்மர், துரோணர் – போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா?
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை. மகாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது. எப்படி தடுப்பது?
கண்ணனின் ‘பெருந்திட்டம் ’ :::: கிருஷ்ணர், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், அதாவது சாதரணமான மனித உளவியலை நன்கு பயன்படுத்தி செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, கிருஷணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான்.
அவன் வருகிறான் என்று தெரிந்து திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார். சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, கிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.
கிருஷ்ணரோ, “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன் இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார்.
விதுரருக்கு மகா சந்தோஷம். தன் பிரியமான கண்ணன் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது – விதுரருக்கும் கிருஷ்ணருக்கும். மறுநாள், அரச சபையில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக தாடினான். துரியோதனன் ஒரு ஊசி குத்தும் நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் ‘யுத்தம் நிச்சயம்’ என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன், கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். “சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.
கண்ணன் சொன்னார், “என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
கண்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கண்ணன் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு. அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கண்ணனைத் தன் வீட்டில் உபசரணைசெய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக்கொண்டுவந்தது.
என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். (மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்துவிட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம் சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.
“எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கிகொண்டிருக்கிறது. என்னை அவமானப்படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார். யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை.
கண்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா?
அவரை வெல்ல, பாண்டவர்கள் கட்சியில் யாராவது இருக்கிறார்களா? பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்குமா?
இதுதான் கண்ணனுடைய பெருந்திட்டம்!! கடைசியில் அந்த திட்டத்தில் வெற்றியும் பெற்றார்

ஒரு நிகழ்ச்சியை தனிப்படுத்திப் பார்த்து தர்ம அதர்மங்களை நிர்ணயிக்க முடியாது.

1. பீஷ்மர் வதம்.
-------------------------


சிகண்டியுடன் அனைவருமே போரிடுகின்றனர். பீஷ்மரைத் தவிர. சிகண்டி பீஷ்மரைக் கொல்வேன் எனச் சபதமிட்டு இருக்கும் ஒருவன். அப்படி இருக்க அவனுடன் போரிட இயலாது என்பது பீஷ்மரின் தர்மம் என்றால், அவர் நிராயுதபாணியாக மரணிப்பதே தர்மமாகும் அல்லவா?

சந்திரவம்சத்தின் இரண்டாவது ஆள், புதன். அவர் ஆண்தன்மையும், பெண்தன்மையும் கலந்தவர்.

அடுத்து வைவஸ்வத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன். ஆக சந்திர குலத்தின் ஆதியே முழுஆண் / முழுப்பெண் வமிசமல்ல. அப்படி இருக்க சிகண்டியுடன் போரிடமாட்டேன் எனப் பீஷ்மர் எப்படிச் சொல்ல இயலும்?

கண்ணன் என்ன செய்திருக்கலாம்? அர்ச்சுனனை, பீஷ்மரைக் காக்க யாரும் வராதபடிக்கு பீஷ்மர் சிகண்டியைத் தனிப்படுத்தச் சொல்லியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், பீஷ்மரின் அங்கங்கள் சிகண்டியின் வாளால் துண்டிக்கப்பட்டு அவர் முண்டமாகக் கிடத்தப்பட்டிருக்கலாம்.

சிகண்டியின் எதிரே ஆயுதங்களைத் துறக்கும் பீஷ்மர், அதன் பிறகு ஆயுதம் ஏந்தும் உரிமையைத் தர்மப்படி இழக்கிறார். போரில் ஆணாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகண்டியை எதிர்த்துப் போராடததால், அவன் அறைகூவலை ஏற்காததால், அவர் வேறு எவருடனும் போரிடக் கூடாது.

இப்படிப்பட்டக் கேவலமெல்லாம் பீஷ்மருக்கு சேரவிடாமல், அர்ச்சுனன் அம்புகள் அவரை அம்புப்படுக்கையில் படுக்க வைத்தது, அவருக்கு கிருஷ்ணன் அளித்த மரியாதை ஆகும். அதை அர்ச்சுனனின் வீரம் என்று சொல்ல இயலாதுதான். ஆனால் அதர்மம் எனச் சொல்லக்கூடாது.

குருஷேத்திர யுத்தத்தை விட மிகப் பெரிய யுத்தம் பீஷ்மரின் மனதில் நடந்தது என்பதே உண்மை.

பீஷ்மரை பொறுத்தவரை அவர் அஸ்தினாபுரத்து அரசன் உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் . அந்த ஒரே காரணத்தினால் அவர் துரியோதனனுக்காக போரிட்டார்.

பீஷ்மரின் மரண இரகசியம் ஒன்றும் அவ்வளவு இரகசியமல்ல. சிகண்டிக்குத் தெரிந்ததுதான். கண்ணனுக்குத் தெரிந்ததுதான்.  சிகண்டி போருக்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் துரோணர் அசுவத்தாமன், கிருபர், சல்லியன், துச்சாதனன், துரியோதனன், பகதத்தன், கிருதவர்மன், பூரிசிரவசு, விகர்ணன், சுசர்மன இப்படி துரியோதனின் படையில் இருந்த எவரும் அர்ச்சுனன் பீஷ்மரை நெருங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். தர்மனைச் சிறைபிடிக்க அர்ச்சுனனை விலக்கியது போல் பீஷ்மரின் மரணமான சிகண்டியையும், துரோணரின் மரணமான த்விட்டத்வீமனையும் குறிவைத்து யுத்தம் நடத்த ஆரம்பித்திருக்கலாம். அதனை துரியோதனன் செய்யவில்லை.

தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.

கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.

9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக   நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை,  நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார்.  அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுயவாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..

இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது.  தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.

துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார். போரில் மட்டும்தான் தர்மன் எதிரி, பாசறையில் பேரன்தான். அவனுக்கு எதையும் செய்யும் உரிமை பீஷ்மருக்கு உண்டு.

ஆனால் சிகண்டி அர்ச்சுனன் தேரில் உடன் வரவேண்டும் என பீஷ்மர் சொல்லவில்லை. அது கிருஷ்ணனின் திட்டம். சிகண்டியை அஸ்வத்தாமனோ, துரோணரோ, கிருபரோ சல்லியனோ மடக்கி விடாமல் இருக்க செய்த திட்டம் அது.

பீஷ்மரின் தெளிவுதான் அவரை விஷ்ணு சகஸ்ர நாமம் எழுத வைத்தது.

பீஷ்மர் கிருஷ்ணனை மரியாதையான இறப்பைக் கொடு எனக் கேட்டார். அந்த இறப்பினைக் கிருஷ்ணன் அளித்தார்.

இது பீஷ்மர் விரும்பிய மரணம் என்பதால் இதை அதர்மத்தில் சேர்க்கவே இயலாது.


துரோண வதம்
------------------------
--

துரோணர் ஒரு அந்தணர். அந்த அந்தணர் தன் புத்திரப்பாசத்தினால் தன் நெறி மாறுகிறார். பாஞ்சால மன்னனிடம் அவமானப்பட்ட பிராம்மணர் தன் நெறிமறந்து அஸ்தினாபுரத்திற்கு அடிமையாகிறார். தன் நெறியை கோபத்தினால் விட்டார். அதற்குக் காரணம் அவரது புத்திரபாசம்.

அந்தணரான அவர், அரசனுக்கு அடிமையானார். துருபதனை வெல்ல வேண்டும் என்றால் அவரே போரிட்டிருக்கலாம். அப்போது அவர் போரிடவில்லை. அப்போது ஆயுதம் ஏந்தாதது என்ன தர்மம்? தன் ஷத்ரிய மாணவர்களைக் கொண்டு துருபதனை வென்று பாதி நாட்டைப் பறித்து அவனை அவமானப்படுத்தினார். அதற்காக தன்னையே விற்று விட்டார். அன்று தன் பாசத்துக்காக துருபதனுக்கெதிராக வில் உயர்த்தி இருந்தால் அவர் இவ்வளவு பெரிய சங்கடத்தில் மாட்டி இருக்க மாட்டார். ஆனால் தன் மானத்துக்காக ஏந்தாத அஸ்திரங்களை எதற்காக ஏந்தினார்? தன் மகனுக்காகச் செய்யாத போரை பின்னர் தன் மகனுக்காகவே செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

அவருடைய மரணத்தையும் கண்ணனே திட்டமிடுகிறான்.

அந்த நொடியில் எது தர்மம் என யோசிப்பவன் சாதாரண மனிதன். ஆனால் கண்ணன் அப்படியல்ல. அவன் எது தர்மம் என விளக்கப் பிறந்தவன்.

பிள்ளைப் பாசத்தினால் பிராம்மணத்துவம் விட்டார் துரோணர். இது அவர் பரசுராமருக்குச் செய்யும் துரோகமல்லவா? பரசுராமர் தன்னுடைய ஆயுதங்களை துரோணருக்குத் தானமளித்தார். அந்த ஆயுதங்களை ஷத்ரியர்களைக் காக்க அவர் உபயோகிக்கலாமா?

பிள்ளைப் பாசத்தினாலேயே துரோணரின் பாவங்கள் தொடங்குகின்றன. தொடர்கின்றன. அந்தப் பிள்ளைப் பாசமே அவருக்கு எமனாய் அமைவதுதானே தர்மம்? அதைத்தான் கண்ணன் செய்கிறான்.

துரோணர் எந்த ஒரு மன்னனிடம் சென்றும் பிச்சை கேட்டு தன் மகனை வளர்த்திருக்கலாம். துருபதனிடம் சென்று நட்பைக் காட்டிதான் பசு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தானமாக அளிக்க வேண்டிய கல்வியைத்  தன்மானம் காக்க விற்றார். இவருக்கு முன் கல்வியை யாரும் விற்றதாக நான் அறிந்ததில்லை. அஸ்வத்தாமனை அரசகுமாரர்களுக்கு இணையாக வளர்க்க ஆசைப்பட்டார்.

பிள்ளைக்காக துருபதனைப் பகைத்து, தன் பிராம்மணத்துவத்தை விட்டு, அடிமையாகி, அதர்மத்தின் பக்கம் நின்றவர்... அதர்மங்கள் தன் கண்ணெதிரே நடந்தபோது கையாலாகதவராக நின்றவர்.

அதுதான் கண்ணனின் தர்மம். பிள்ளைக்காகச் செய்தவர் பிள்ளையின் பெயர் சொல்லியே மாய்க்கப்பட்டார்.

கீதையை ஆழமாகப் படித்து உணர்ந்து கொண்டபின் யுத்த அதர்மங்களை ஆராய்ந்தால் அதில் கண்ணனின் தர்மங்கள் புரியும்.

மற்ற எந்த வகை மரணமும், தர்மத்தை நிலை நாட்டி இருக்காது.


கர்ண வதம்
-------------------
-

கர்ணனின் கவச குண்டலப் பாதுகாப்பால் கர்ணன் தன்னுடைய எல்லாப் போரையுமே வென்றிருக்க வேண்டும். ஆனால் வென்றானா என்பது முதல் கேள்வி. கந்தர்வர்களுடன் தோற்றான், துருபதனிடம் தோற்றான், அர்ச்சுனனிடம் தோற்றான். இதெல்லாம் கவசம் அவன் உடலில் இருந்த காலத்தில்தான்.

ஆக வெற்றி தோல்வி கவசத்தில் இல்லை. குருஷேத்திரப் போருக்கும் அதற்கு முன் நடந்த போர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் குருஷேத்திரப் போர், நீண்ட யுத்தம். மரணிக்கும் வரைப் போராடும் யுத்தமாகும்.

கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தி இருக்கலாம். உலகின் மிக உயர்ந்த மூன்று அஸ்திரங்கள் பிரம்மாஸ்திரம் - நாராயணாஸ்திரம் - பாசுபதாஸ்திரம். அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல வேண்டும் என வெறியுடன் இருந்திருந்தால் பாசுபதாஸ்திரம் உபயோகித்துச் சாய்த்திருக்கலாம். அபிமன்யூ இறந்தவுடனே பாசுபதாஸ்திரம் உபயோகித்திருக்கலாம். ஆனால் அவன் கண்ணனிடம் அவன் தன்னை முற்றிலும் ஒப்படைத்திருந்தான். கண்ணன் சொன்னதை மட்டுமே செய்தான். அதனால் கண்ணனின் தர்மமே அவன் தர்மம் ஆகியது.

கண்ணனே, கர்ணனுக்கான மரணத் திட்டத்தை வகுக்கிறான்.

கர்ணன் செய்த தவறுகள் அத்தனையும் அவன் வீழ்ச்சியில் பங்கெடுக்கின்றன. அதுதான் தர்மம்.

பரசுராமரின் சாபம், பிராம்மண சாபம், பூமாதேவியின் சாபம் இவை அனைத்தும் பலிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை கண்ணன் தலையில் அல்லவா உள்ளது. அவையெல்லாம் உண்டாக்கினான்.

பீஷ்மருக்கு ஞானம் வழங்கி அவர் ஆசையை  நிறைவேற்றினான். துரோணருக்கு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல பிள்ளைப்பாசத்தால் சாகவைத்தான்.

கர்ணனுக்கு?

கர்ணன் என்ன செய்ய ஆசைப்பட்டான்? அர்ச்சுனனை விடத் தான் சிறந்த வில்லாளி என நிரூபிக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதனால்தான் தன் திறமை முழுக்க வெளிப்படும் வரை அவன் சக்தி ஆயுதத்தை உபயோகிக்கவில்லை.  ஆனால் கண்ணன் கடோத்கஜன் மூலம் அதை பறித்துவிட்டார்.

கர்ணனின் ஆசையை நிறைவேற்றவே அவன் ஆயுதம் ஏந்தாக் காலத்தில் அவனைக் கொல்ல உத்தரவிட்டார். அர்ச்சுனனை பாசுபதாஸ்திரம் உபயோகி எனச் சொல்லி இருந்தால் கர்ணனால் என்ன செய்திருக்க முடியும்? கர்ணன் மிகப் பெரிய வில்லாளி என இன்று பேச எதாவது உங்களிடம் மிச்சமிருக்குமா?

பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் அது அதர்மம். ஆனால் இப்படித்தான் சாகவேண்டும் என்பதைத் தர்மம்தான் தீர்மானிக்கிறது.

ஐந்து வீடுகள் கொடுக்க விரும்பாமல்தான் இத்தனைப் பெரிய வீரர்களைப் பலியிட்டான் என துரியோதனனின் மேல் கோபமே வரவில்லை அல்லவா?

கர்ணனுக்கு மாவீரன் என்ற பட்டத்தைக் கண்ணனே அளித்திருக்கிறான். அவன் அதற்காகத்தான் போரிட்டான். அதை அளிக்க இதை விட உன்னதமான வழி இல்லை.


பூரிசிரவசு
----------
--------

தன் உதவிக்கு வருபவர்களைக் காப்பது ஒரு போர்வீரனின் கடமை.  சாத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்தவன். பூரிசிரவசு மயங்கிக் கிடக்கும் சாத்யகியை கொல்லப் போகிறான். அவனைக் காப்பது அர்ச்சுனனின் கடமை ஆகிறது. அதனால் அம்பை விடுகிறான் அர்ச்சுனன். இது நேரடியாகவே தர்மம்தான். எத்தனையோ முறை துரியோதனன், கர்ணன், துரோணர் போன்றோரே மற்றவர்களினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

பகதத்தன் சிகையை அவிழ்த்தது
-------------------------------------------------------


இதுவும் நேரடி யுத்த தர்மமே.. இது தர்மமில்லையெனில் ஒருவனின் ஆயுதத்தை அழித்தவுடன் அவனைக் கொல்லவே இயலாது. அப்புறம் எல்லோரையும் மல்யுத்தம் புரிந்துக் கழுத்தை நெறித்துதான்  கொல்ல வேண்டும். அர்ச்சுனனின் நாணைக் கர்ணன் எத்தனையோ முறை அறுத்தாலும் அடுத்த அம்பு தொடுப்பதற்குள் நாணேற்றி அம்பு விடுவான் அர்ச்சுனன். சாரதி, கொடி, இரதம், குதிரை, யானை இப்படி அனைத்தும் போரில் நொறுக்கப்படும். பகதத்தன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட போது அவன் முடி அவன் கண்ணை ஒரு வினாடி மூடுவது யுத்த நியதியின் பாற்பட்டதே ஆகும். 

பீமன் துரியோதனின் தொடையுடைத்தது
--------------------------------------------------------------------


இதை கண்ணன் வாயிலாக வியாசரே விளக்கி இருக்கிறார். எப்பொழுது துரியோதனன் போர்களத்தை விட்டு அகன்றானோ அப்போதே அவன் தோற்றுவிட்டான். அதற்கு மேல் நடந்தது அறத்தின் வேலை மட்டுமே. ஒரு பெண்ணை இராஜசபையில் துகிலுரித்து தன் மடியில் அமரச் சொன்னதிற்கு தண்டனை.

தன்னுடைய அனைத்து உறுப்புகளையும் வைரம்பாய்ச்சி இரும்பாக்கிக் கொள்ள முடிந்த துரியனால் தன் தொடையை வைரம் பாய்ச்சிக் கொள்ள இயலாததான் காரணம் அதுதான்.


இதற்கு முன்னரான நிகழ்வைக் கூர்ந்து கவனியுங்கள்.

துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.

அவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான்.

நடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.

பீமன் - துரியோதனனுடன் மல்யுத்தம் செய்திருக்கலாம். அதில் தொடையை முறித்திருக்கலாம். அது பீமனின் வெற்றியாக இருந்திருக்கும். ஆனால் அது தர்மத்தின் வெற்றியாக இருந்திருக்குமா?

கண்ணன் பீமனைப் பார்த்து துரியோதனனைப் பார்த்து மல்யுத்ததிற்கு அழை எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. துரியோதனின் பலமான கதையுத்ததிற்கு பீமன் அழைக்கிறான்.

துரியோதனின் பலம் கதையுத்தம். அதிலும் அவனின் பலவீனமானத் தொடைகள் வெளிப்படாதது அதில்தான். அதனால்தான் அவன் அந்த யுத்தத்திற்கு உடன்படுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தர்மத்தின் மீதான கடமை மற்றும் உரிமை உண்டு.

ஒவ்வொரு முறை தர்மத்தின் மீதான கடமையை மீறும்பொழுதும் தர்மத்தின் மீதான உரிமையை இழக்கிறான்.

துரியோதனன் தர்மத்தின் மீது தன் உரிமையை இழந்துவிடுகிறான்.

பீமனைத் தட்டிக் கேட்கும் உரிமையை அனைவருமே இழந்து நிற்கிறார்கள். பலராமன், கிருபர், த்ருதராஷ்டிரன், காந்தாரி, வியாசர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் உட்பட யாருக்குமே உரிமையில்லை.

பீமனா -- அர்ச்சுனனா --- தர்மமா?

தர்மம்தான் மகாபாரத யுத்தத்தின் போக்கையும், அதன் ஒவ்வொரு விளைவுக்கும் காரணமாக அமைகிறது.

தர்மத்தின் இந்த ஆளுமையை ஏற்றுக் கொண்டதால் பாண்டவர்கள் உயர்கிறார்கள்.

கண்ணன் மட்டுமே இந்த தர்ம சூட்சமத்தை அறிந்தவர்.

மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றது பாண்டவர்களோ அல்லது வேறு யாருமோ அல்ல.

தர்மம் வென்றது. தர்மம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

பாண்டவர்கள் எல்லாவற்றையும் அவர்களின் சுயதர்மப்படி செய்து வென்றிருந்தால் தர்மத்தைப் பற்றி யோசிக்காமல் அவர்களின் புகழை மட்டுமே பாடிக் கொண்டிருப்போம்.

எது தர்மம் என்ற கேள்வியே பிறந்திருக்காது. தர்மத்தின் சூட்சுமம் புரிந்திருக்காது. தெளிவுகள் கிடைக்காது.

அதனால்...

அனைத்து வீரம் பலம் சாகசம் இவை எல்லாவற்றையும் விட

தர்மமே உயர்ந்தது என அறிவோமாக. என்னுடைய தர்மம் எனப் பார்க்காமல் பொதுதர்மத்தை அறிந்து செய்வோமாக. அதர்மங்கள் தங்கள் வலையில்  நம்மை வீழ்த்தாமல் பார்த்துக் கொள்வோமாக
- See more at: http://mahabharatham.arasan.info/2014/09/are--deeds-of-Krishnaconspiracy-or-virtue.html#sthash.149y3y18.dpuf

1 comment:

  1. மிகவும் நன்றாக எழுதப்பட்ட விளக்கவுரை. நன்றி.

    ReplyDelete