Thursday, February 11, 2016

இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்

நம்முடைய "இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்:
1. நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்.
மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.
பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு
போட்டு பந்த கால் நட வேண்டும்.
சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும்.
பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி
தடவ வேண்டும்.
மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.
2. பொன்னுருக்குதல்:
திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம்
ஆகும்,போற்றி பாதுகாக்க பட வேண்டியது ஆகும்.
நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக
வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய பொற்கொல்லரிடம் புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.
3. கலப்பரப்பு:
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து)
மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகி விட்டதற்கான
அடையாள நிகழ்ச்சி. கலம் என்பது பாத்திரம் ஆகும்.
பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தெங்காய், பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்.
4. காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது.
மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது.
திருஷ்டி மற்றும் அசுர சக்திகளால்
இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு .
காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான
அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.
5. முளைப்பாலிகை:
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை
சாந்தி செய்வது .
முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும்
என்பதற்கான அடையாளச்சடங்கு .
கள்ளங் கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் .
எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப் படுகின்றது.
6. தாரை வார்த்தல்:
தாரை என்றால் நீர் என பொருள் .
நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக் கூடியது .
இப்படி தெய்வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் .
திருமணச் சடங்குகளில் மிக முக்கியமானது தாரை
வார்த்தல்.
தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மணமகள்
கழுத்தில் தாலி கட்டும் உரிமையை
அடைகின்றான்” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “என மணமகளின் பெற்றோர் ,
தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு
– மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம்
என்பதற்கான உறுதிமொழி.
எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக் கொள்ளும் விதமாக அடியில் இருக்க,
அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை,மணமகனின் கை , மணப்பெண்ணின் கை ,
மணப் பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை.
இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும்.
உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப் பூர்வமான சடங்கு
தாரை வார்த்தல் என்ப்படும்.
7. தாலி கட்டுவது:
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.
மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.
மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள
சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள்
மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய் விடுவார்.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது.
தெய்வீக குணம், தூய்மையான குணம்,மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம்,ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க
வேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியப் படுகிறது.
8. ஹோமம் வளர்த்தல்:
வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும்.
ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும்.
ஹோமத்தில் இடப்படும் பொருட்கள்
சுற்றுப்புறத்தை சுத்தப் படுத்துகிறது.
ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான்
சாஸ்திரப்படி சரியாகும்.
9. கும்பம் வைத்தல்:
கும்பம் இறைவனது திரு உடம்பின்
அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம்.
இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் கும்ப வஸ்திரம் உடம்பின் தோல் நூல் நாட நரம்புகள் குடம் தசை தண்ணீர் இரத்தம் நவ ரத்தினங்கள் எலும்பு
தேங்காய் தலை மாவிலை தலைமயிர் தருப்பை குடுமி
மந்திரம் உயிர் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
10. அம்மி மிதித்தல்:
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செய்வதற்கு பயன்படும், பொருட்களை
அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும்.
அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.
திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன்
எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.
11. அருந்ததி பார்த்தல்:
அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.
ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி
வீசுகிறார்கள்.
இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம்.
ஏழு நட்சத்திரங்களில், ஆறாவது நட்சத்திரமாக இருப்பவர் வசிஷ்டர் ஆவார்.
இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.
ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும்
வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும்
பார்க்கலாம்.
மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,
ஊர்வசி, மேனகை இவர்களிடம்
சபல பட்டவர்கள்.
அதேபோல் அவர்களுடைய
மனைவிகளும், இந்திரனனின் மேல் சபலப் பட்டவர்கள்.
ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.
12. ஏற்றி இறக்குதல்:
மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு, நிறை
நாழி, சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு, தேங்காய், பழம், குங்குமச்சிமிழ், மஞ்சள்
பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும் சடங்கு .
மேலும் அருவ நிலையிலிருந்து
மணமக்களை ஆசிர்வதிக்கும்
தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ,
முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப் படுவதும் உண்டு.
13. அடை பொரி:
பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும், பல உருவத்தைக் காட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண
நிகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஷங்களை நீக்க வல்லது .
இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.
14. நிறை நாழி:
நித்தமும் குத்து விளக்கு என்று
சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.
15. ஒலுசை:
ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர்.
மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி .
சிறப்பான இல்லற வாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது .
ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்.
16. மணமகள் பொங்கலிடுதல்:
முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள்
அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன்
முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும்.
மணமகள் வீட்டுப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாள் என்பதைக்
வெளிப் படுத்துவது.
புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.
இதுதான் மணப்பெண்ணின்
முதல் சமையல்.
இன்று போல் என்றும் வாழ்க்கை பால் போல் பொங்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.
17. பிள்ளை மாற்றுவது:
எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும்
நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல் வடிவ
உபதேசம்.
பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல
முறையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது.
திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு
“மங்கலமென்ப மனைமாட்சிம்ற்று அதன் நஙலம் நன்மக்கட்பேறு” –
திருவள்ளுவரின் வாக்காகும்.
நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு.
18. மறுவீடு:
மண மகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு
மகிழ்ந்து – உறவை வலுப் படுத்துவது .
ஒரு பெண்ணிற்கு பிறந்த வீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின்
இருபக்கங்கள் போன்றது .
மகளை வாழ்க்கையின் மறு பக்கத்தை காணச் செய்வதே மறு வீடு ஆகும்.
19. கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்:
நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது
மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் .
வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி
செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வோரு சடங்குகளும் அர்த்தம் உடையவை.
"அர்த்தமுள்ள இந்து மதமேதான்".

No comments:

Post a Comment