Saturday, June 25, 2011

பொறுப்பை கடவுளிடம் விடுங்கள் ---அரவிந்தரின் அற்புத மொழிகள்

மனிதர்களை நேசியுங்கள். அவர்களுக்கு முடிந்த தொண்டுகளைச் செய்யுங்கள். ஆனால்,
யாருடைய பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் அதிக கவனம் கொள்ளுங்கள்.
* விவேகமுள்ள சிறந்த நண்பன் ஒருவன் தான். அவனே நம்மைக் காக்கும் இறைவன். ஏனென்றால் எப்போது நம்மை அடிக்க வேண்டும், நம்மை அணைக்க வேண்டும் என்பதை அவன் மட்டுமே அறிவான்.
* வெறுமனே யாருக்கும் பயன்படாமல் வாழுகின்ற வாழ்க்கை பயனற்றது. நல்ல லட்சியங்களை உருவாக்கிக் கொண்டு அதைநோக்கிப் பயணிப்பதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கி இருக்கிறது. நற்பணிகளைச் செய்வதற்காகத்தான் இறைவன் நம்மை இப்பூமிக்கு அனுப்பி இருக்கிறான்.
* உங்களைத் தூய்மையாக்கும் பொறுப்பினை கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்து விடுங்கள். அவரே அனைத்து தீமைகளையும் போக்கி, நம்மை நல்வழிப்படுத்துவார். இல்லாவிட்டால் புறவுலகில் இருக்கும் தீமை நம்மை வீழ்த்திவிடும்.
* கடவுளின் கண்களுக்கு அற்பமானவர்கள் என்று யாரும் இல்லை. அதுபோல உங்கள் கண்களுக்கும் அற்பமானவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது.
* உங்களுள் எழும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றாலும் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி
அனுபவங்களை வழங்குங்கள். அதுவே உங்களுக்குள் இருக்கும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகட்டும்.
* ஆண்டவனின் அருளாட்சியில் தீமை என்பது சிறிதும் இல்லை. நமக்கு நன்மையையோ அல்லது நன்மை தருவதற்கான முயற்சியையோ தான் கடவுள் செய்து கொண்டிருக்கிறார்.
* உத்தமச் செயல்களைச் செய்வதாக இருந்தால் உடனே செய்து விடுங்கள். ஏனென்றால், மனம் செய்வோமா வேண்டாமா என்று சலனப்படும் இயல்பு கொண்டது.
* முடிந்தால் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களைக் கைதூக்கி விடுங்கள். அவர்களது ஆற்றலை இழந்து விடும்படி செய்யும் இழிசெயலை ஒருபோதும் செய்யாதீர்கள்.
* உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். உலகம் எப்படிப்பட்டது, கடவுள் எத்தகையவர் என்று அறிய முற்படுங்கள். பயனற்ற போலி இன்பம் தரும் கற்பனைகளை விட்டொழியுங்கள்.
* பாவங்களிலே மிகவும் கொடிய பாவம், பாவிகளை வெறுப்பதாகும். ஏனெனில், அது கடவுளை வெறுப்பதற்கு நிகராகும். அவர்களும் திருந்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

No comments:

Post a Comment