Wednesday, July 11, 2012

துரியோதனனிடம் சல்லியனை அனுப்பிய கண்ணனின் யுத்த தந்திரம்!

பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வர்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர் களைக் கருவறுக்கத் துடித்தான். எல்லா அரசர்களையும் தனது பக்கத்தில் கொண்டு வர வேண்டும்; பெரும் படை பலத் தைத் திரட்டி பாண்டவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பது அவனது எண்ணம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அவன் செய்கைகளுக்குப் பக்கபலமாக கர்ணன், சகுனி, துச்சாதனன் போன்றவர்கள் இருந்தனர். தர்மம், நீதி போதித்த பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோர் துரியோதனனின் இகழ்ச்சிக்கு ஆளாயினர்.

பாண்டவர்களும் வலுவான எதிரணியை உருவாக்கினர். அதைவிட பரந்தாமனின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவர் களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

நாடற்ற பாண்டவர் விராட நாட்டில், உபப்பிலாவியம் நகரில் இருந்து கொண்டு போருக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இரு திறத்தாருக்கும் நாளுக்கு நாள் படைபலம் பெருகிக் கொண்டிருந்தது. பாண்டவர்கள் படையைவிட, துரியோதனனின் படைபலமே அதிகரித்துக் காணப்பட்டது. படை திரட்டு வதிலும் பாண்டவர்கள் நேர்மையான வழியைப் பின்பற்ற, துரியோதனனோ குறுக்கு வழியையே பின்பற்றினான்.

பாண்டவர்களில் தருமன், பீமன், அர்ச்சுனன் இம்மூவரும் பாண்டுவின் மூத்த மனைவியான குந்தியின் புத்திரர்கள். நகுலனும் சகாதேவனும் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்கள். மாத்ரி மந்தர தேசத்து அரசன் சல்லியனின் உடன் பிறந்த சகோதரி.

பாண்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசர் களுக்கு தூதர்கள் மூலம் ஓலையனுப்பி ஆதரவு கோரினர். ஆனால் அவர்கள் சல்லியனிடம் மட்டும் உதவி கேட்கவில்லை. தாய்மாமன்தானே, தங்களுக்கல்லாமல் வேறு யாருக்கு அவர் உதவி செய்யப் போகிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருந்து விட்டனர்.

மருமக்கள் உதவி கேட்காவிடினும் மாமன் உதவி செய்யாமலா இருப்பார்? துரியோதனனும் பாண்டவர்களும் படை பலத்தைப் பெருக்கு வதையறிந்த சல்லியன், தன் மருமக்களான பாண்டவர்களுக்கு உதவ பெரும் படையுடன் உபப்பிலாவியம் நோக்கி விரைந்தான்.

அலைகடல்போல் ஆர்ப்பரித்து, கண்ணுக் கெட்டிய தூரம் வரை நால்வகைப் படைகளும் அணிவகுத்து உபப்பிலாவியம் நோக்கி வீறுநடை போட்டுச் சென்றன. பெரும்படையுடன் தேவேந்திரனைப் போன்று சல்லியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன் புழுவாய்த் துடித்தான். அவனைத் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாண்டவர்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிடும்; பின் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என நினைத்து வஞ்சகத் திட்டம் தீட்டினான். தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், உபப்பிலாவியம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சல்லியனையும் அவன் படையினரையும் ஆங்காங்கே பெரும் வரவேற்பளித்து உபசரித்தான். இச்செயலில் தன்னுடைய பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தினான். படையினர் அனைவருக்கும் பருக சுத்தமான தண்ணீர், அறுசுவை உணவு, பானகங்கள், சல்லியனுக்கு சாமரம் வீச பணியாளர்கள் என அமர்க்களப்படுத்தினான்.

இத்தகைய உயரிய வரவேற்பு சல்லியனை பெருமகிழ்ச்சியடையச் செய்தது. இதற்கெல்லாம் காரணம் தனது மருமக்கள் பாண்டவர்களே என நினைத்து, அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். தனக்கும் தனது பெரும்படைகளுக்கும் சேவை செய்யும் பணியாளர்களின் தன்னலம் கருதா தன்மை கண்டு உள்ளம் பூரித்தான். மருமக்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! பாண்டவர்களுக்கு நிகர் பாண்டவர்கள்தான் என இறும்பூது எய்தினான். தனக்குப் பணிவிடை செய்த பணியாளர்களுக்குப் பரிசுகள் தரவிரும்பி, அவர்கள் எஜமானனின் உத்தரவு வாங்கிவர வேண்டினான். இந்தத் தருணத்தைத்தானே துரியோதனனும் எதிர்பார்த்தான். அவன் சல்லியன் முன்பு சென்று வணங்கி நிற்க, வியப்பும் திகைப்பும் அடைந்தான் சல்லியன்.

தனக்கு மரியாதை செய்த துரியோதனனைப் பாராட்டினான். துரியோதனனைப் பெருமை யாகப் பேசி, ""இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?'' என வினவினான்.

""மந்தர தேசத்து அதிபதியே! நீர் எனக்கும் மாமன் உறவு முறையே... உமது தயவு எனக்குத் தேவை. நீர் எங்கள் பக்கம் சேர்ந்து எனக்கு வலுசேர்த்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்!'' என்று சொன்னான் துரியோதனன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காக்க சல்லியன் துரியோதனன் பக்கம் நின்று பாண்டவர்களை எதிர்ப்பதாக வாக்களித் தான். இருப்பினும் உபப்பி லாவியம் சென்று தன் மருமக்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவர துரியோதனனிடம் அனு மதி வேண்டினான். சல்லியனிடம் வாக்குறுதி பெற்றதும் துரியோதனன் தன் சுய உருவத்தைக் காட்டினான்.

""நீர் எனக்கு வாக்கு கொடுத்துவிட்டீர்! அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்! அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர்!'' என்று துரியோதனன் கட்டளையிட்டான்.

மனதில் பெரும் பாரத்துடன் தருமனைச் சந்தித்தான் சல்லியன். தக்க நேரத்தில் பெரும் படையுடன் மாமன் தங்களுக்கு உதவ வந்திருக் கிறான் என நினைத்து பாண்டவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் - குறிப்பாக நகுலனுக்கும் சகாதேவனுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்கள் சொந்த தாய்மாமன் ஆயிற்றே!

துரியோதனனால் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கவலையுடன் தெரிவித்தான் சல்லியன். தருமபுத்திரன் மிகவும் கவலையடைந்தான். காரணம் சல்லியன் மாவீரன் மட்டுமல்ல; தர்மத்தின் வழிநடப்பவன். நேர்மையும் நீதியும் தவறாதவன். தேரோட்டுவதில் பகவான் கிருஷ்ணனுக்கு நிகரானவன். அப்பேர்ப்பட்ட சல்லியன் ஓட்டும் தேரில் நின்று கர்ணன் போர் புரிந்தால் அர்ச்சுனன் நிலை என்னாகும்?

தர்மனின் மனதைக் குறிப்பால் உணர்ந்த சல்லியன், ""தருமா! எல்லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய்! தேவேந்திரனுக்குக்கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள்ளது. ஆம்! பகவான் பரந்தாமன் பக்கபலமாயுள்ளான்! யாருக்குக் கிடைக்கும் இந்த உயர்ந்த நிலை! தரும தேவதையும் வீரத் திருமகளும் நீ இருக்கும் இடத்தில் வாசம் செய்கிறார்கள். தர்மத்தின் வழி நடக்கும் உன்னை- தர்ம தேவனால் பாதுகாக்கப் படும் உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது'' என்றான் சல்லியன்.

""மாமா! நான் கவலைப்படுவது அர்ஜுனனைக் குறித்தே! உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா?''

""தருமா! நீ வீண்பயம் கொள்ளத் தேவையில்லை. என்னால் அர்ஜுனன் உயிர் காப்பாற்றப்படும்! நான் நடத்தும் தேரில் நின்று கர்ணன் போர் புரிவானா னால் அவனது வீரத்துக்குப் பழுது ஏற்படும். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'' என மருமக்களை ஆசீர்வதித்து, துரியோதனன் இருக்குமிடம் வந்தடைந்தான் சல்லியன்.

பாரதப் போரில் கௌரவ சேனைக்கு முதலில் பீஷ்மரும், அவருக்குப் பிறகு துரோணரும், துரோணருக்குப் பின் கர்ணனும், கர்ணன் மறைவிற்குப் பிறகு சல்லியனும் தலைமை தாங்கினர்.

குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், பதினேழாம் நாள் கர்ணனும் அர்ஜுனனும் கடும் போர் புரிந்தனர். கர்ணனின் தேரை சல்லியன் நடத்தினான்.

யுத்தம் தொடங்கும் முன்பே கர்ணன் பேசிய பேச்சுக்களால் சல்லியன் கோபம் கொண்டான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

""இன்றைய யுத்தத்தில் அர்ஜுனன் என்னிட மிருந்து தப்ப முடியாது! என்னுடைய வீரத்தின் முன்பு காண்டீபன் நிற்கத் தகுதியற்றவன். அவனை இன்று எமனுக்குப் பரிசளித்தே தீருவேன்!'' என்று கர்ணன் கர்ஜனை செய்ததும், சல்லியன் கோபாவேசமானான்.

தேரோட்டியின் மகன் கர்ணன், தன் மருமகன் அர்ஜுனனைப் பழித்ததும் சல்லியன் பொறுக்க முடியாமல், ""ஏ கர்ணா! நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய்! முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட்டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது!'' என்று கோபாவேசமாகக் கூறினான்.

""சல்லியனே! எனக்கு நிகரான வில்லாளி எந்த உலகிலும் கிடையாது. தேவாசுரர்கள்கூட என்னைப் பார்த்து நடுங்குகின்றனர்'' என்று ஏளனமாகச் சொன்னான் கர்ணன்.

""கர்ணா! பேசுவது எளிது; வாய்ச் சொல்லில் வீரமில்லை. எந்த மாவீரனும் தன்னைத்தானே புகழ்வதில்லை. உன்னை நம்பி துரியோதனன் கெடப் போகிறான். ஏ கர்ணனே! பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த விற்போட்டியில் இலக்கை அடிக்க முடியாமல் தோல்வியுற்றுத் திரும் பினாய். உன்னால் முடியாததை அர்ஜுனன் செய்து காட்டினான். நீ அர்ஜுனனை எள்ளி நகையாடுகிறாய். அவன் ஆலகாலம் உண்ட லோகநாயகன் சிவனையே எதிர்த்துப் போரிட்டவன். சிவனைத் தழுவியதால் அதீத பலத்தைப் பெற்றவன். முக்கண்ணனின் கரங்க ளினால் பாசுபதாஸ்திரம் பெற்றவன். உன்னை ஓடஓட விரட்டிய சித்திரசேனன் என்ற கந்தர் வனிடமிருந்து துரியோதனனை மீட்டவன். உன்னால் காப்பாற்ற முடியாத உன் எஜமானனை அவனால் மட்டுமே அன்று காப்பாற்ற முடிந்தது. விராட நாட்டில் பசுக்கூட்டங்களை மகாவீரர்கள் பலருடன் சேர்ந்து, பெரும் படையெடுத்துச் சென்று வஞ்சகமாகக் கவர நினைத்தீர்கள். அன்று அர்ஜுனன் தனியொருவ னாக நின்று உங்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அன்று அவனுக்குத் தேரோட்டியது பால்மணம் மாறாத பாலகன் உத்தரன். ஆனால் இன்று பார்த்தனுக்குத் தேரோட்டுபவன் பார் போற்றும் பரந்தாமன்! உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும்? யுத்தம் என்பது வஞ்சகமாக சூதாட்டத்தில் பகடை வீசுவதும், குலமகளின் ஆடையை மன்றில் களைவதுமல்ல... கர்ணா! வாய்ச் சொல்லில் வீரம் வேண்டாம்! போர் புரிந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத்தை விட்டு வெளியேறு!''

சல்லியனின் பேச்சு கர்ணனை நிலைகுலையச் செய்தது. அவன் தன்னிலையிழந்து, மனம் சோர்ந்தான். அடுத்து என்ன செய்யப் போகி றோம் என்பதை மறந்தான். பரசுராமரிடம் கற்ற அஸ்திரங்களை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். நினைத்து நினைத்துப் பார்த்தான்; நினைவில் வரவில்லை. இறுதியாக சல்லியன் நடத்திய தேர்கூட ஓட மறுத்து, சக்கரம் மண்ணில் புதையுண்டது. கர்ணனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன. காண்டீபம் பொழிந்த பாணங்கள் அவன் உயிரைக் குடித்தது.

மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அடுத்து அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான். இதுவே கர்ணனுக்கும் நடந்தது. கர்ணனின் மனதை நிலைகுலையச் செய்தது சல்லியனின் பேச்சுகளே.

கர்ணனை சல்லியன் புகழ்ந்து பேசி உற்சாகப் படுத்தியிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கக் கூடுமல்லவா? சல்லியனின் இகழ்ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழக்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன்! நடப்பதெல்லாம் அவன் செயலன்றி வேறொன்றுமில்லையே!

No comments:

Post a Comment