Thursday, July 12, 2012

ஈசனே அம்மா என்று அழைத்த "பெச்சம்மா'

கன்னட மொழியில் உள்ள வசவபுராணத்தில், சிவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்ற பெச்சம்மா கதை கூறப்பட்டுள்ளது. வீரசைவ மரபில் பிறந்த பெச்சமதேவி சிவனின் தீவிர பக்தை. அவளுக்கு குழந்தை கிடையாது. சிவனையே குழந்தையாக எண்ணி வாழ்ந்திருந்தாள். ""அட சிவனே! உன்னைப் பெற்ற தாய் ஒருத்தி இருந்திருந்தால், இப்படி பாம்பையும், புலித்தோலையும் கட்டிக் கொண்டு உன்னைத் திரிய விட்டிருப்பாளா! நீ எனக்குப் பிள்ளையாகு, உன்னைக் கண்போல் பார்த்துக் கொள்கிறேன்,'' என கண்ணீர் வடிப்பாள்.
சிவனும் ஒரு சிசுவாக மாறி, அவள் வீட்டின் முன் கிடந்து அழத் தொடங்கினார். அனாதையாய் கிடந்த பிள்ளையை, பெச்சம்மதேவி, கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். ஒருநாள் குழந்தைக்கு காய்ச்சல்... உஷ்ணம் ஏறிக்கொண்டேபோனது. வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. குழந்தை படுத்த படுக்கையானது.
பிள்ளையைக் காண வந்த பெண் ஒருத்தி, ""அடியே! நீ பெற்ற பிள்ளையாய் இருந்தால் இப்படி காய்ச்சல் வரும்படி அசட்டையாய் இருந்திருப்பாயா? பெரிய வைத்தியர்களிடம் காட்டி இருக்க வேண்டியது தானே!'' என்று ஏளனமாகப் பேசி விட்டாள். மனம் நொந்த பெச்சமதேவி தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள அரிவாளை கழுத்தருகே கொண்டு வந்தாள்.
"அம்மா அவசரப்படாதே' என்று வாய் திறந்தது குழந்தை. தன் சுயரூபத்தையும் காட்டி, அவளுக்கு முக்தி அளித்தார். ஈசனே அம்மா என்று அழைத்ததால், "பெச்சம்மா' (அன்னையருக்கெல்லாம் அன்னை)என்று பெயர் பெற்றாள்

No comments:

Post a Comment