Sunday, July 29, 2012

ஆடியில் அம்பாள் வழிபாடு ஏன்?

ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் கைலாயம் வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அங்கிருந்தாள். அவளது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான். சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார். அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம்பெற்றுள்ளது. தன்னுடைய வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே "ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள் ஆடி என பெயர் வந்தது ஏன்? பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம்,பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது "பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் "உத்திராடம்' என்றும் சொல்லப்படுகிறது. உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் "ஆஷாடீ' எனப்பட்டது. அதுவே தமிழில் "ஆடி' என்று மருவி விட்டதாகச் சொல்வர்.

No comments:

Post a Comment