Friday, June 14, 2013

கவலை இல்லாமல் வாழ முடியுமா?''

கவலை இல்லாமல் வாழ முடியுமா?'' என்று ஒரு நண்பர் கேட்டார்.
""நிச்சயமாக! நான் எதற்கும் கவலைப்படுவதில்லை,'' என்று சொன்னதும், என்னை ஏற இறங்க பார்த்து சிரித்தார் நண்பர்.
""ஏனென்றால், அப்போது என் கையில் எலும்பு முறிந்து கட்டுப் போட்ட நிலையில், நோயாளிகளின் வரிசையில் சில மணிநேரமாக காத்து நின்ற நேரம் அது. நண்பர் தனது மாதாந்திர உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார்.
அவர் ஒன்றும் பெரிய அளவுக்கு நோயாளி இல்லை. இருந்தாலும், உலகத்தின் ஒட்டு மொத்தக் கவலையையும் குத்தகைக்கு எடுத்தது போல, அவரது முகத்தில் சோகம் அப்பியிருந்தது. விபத்தில் சிக்கி, கட்டுப்போட்டிருந்த நானே, கவலைகளை விட்டுவிட்டவனாக, இருந்த போது அவர் ஏன் இவ்வளவு கவலையில் இருக்கிறார் என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
அவர் தொடர்ந்து பேசினார். "விபத்து எப்படி நடந்தது? எப்படி தப்பித்தீர்கள்?' இப்படி போனது பேச்சு!
நான் இலக்கியவாதி அல்லவா!
""கட்டு கட்டு கதறிடக் கட்டு என்று எலும்பு முறிவுக்கு கட்டுப்போட்டேன். "முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட' என்ற சஷ்டி கவசம் என்னைச் சுவற்றில் போய் முட்டின பிறகும் காப்பாற்றி விட்டது,'' என்று சொல்லி சிரித்தேன்.
""தலைக்கவசம் காப்பாற்றவில்லையா?'' என்று கேட்டார் அவர்.
தலைக்கவசம் தலையை மட்டும் தான் காக்கும். சஷ்டி கவசம் மனதைக் காப்பாற்றும்,'' என்றதும், அவர் எழுந்து நின்று எங்கோ பார்த்து வணங்கினார்.
முருகனை நினைத்து வணங்குகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.
பேச்சு தொடர்ந்தது.
""கையில் அடிபட்ட கஷ்டத்திலேயும், இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே! கஷ்டகாலத்திலும் எப்படி சிரிக்கிறீங்க?'' என்று திரும்பவும் கேட்டார் முகத்தில் இருந்த அதே கவலை மறையாமல்!
நான் அவரிடம்,"" கவலை வியாதிக்கு என்ன மருந்து தெரியுமா?'' என்றேன்.
""சொல்லுங்க! இந்த ஆஸ்பத்திரியிலே அதுக்கு மருந்து இருக்கா! இருந்தா அதை வாங்கிட்டுப் போறேன்,'' என்று பரபரத்தார் நண்பர்.
""அட நீங்க வேறே! கவலையைப் பத்தி கவலையே படாம இருங்க! அதுதான் மருந்து! நம்பிக்கை வெளிச்சம் இல்லாத இடத்தில் தான் இருட்டு மாதிரி கவலை இருக்கும். மனசு வேறு நல்ல செயலில் முழுசா ஈடுபட்டா, எந்தக் கவலையும் நம்மகிட்ட வந்து எட்டியே பாக்காது. வெளிச்சம் இருக்கும் வரை இருட்டு இல்லை. எல்லாத்தையும் மறந்துட்டு, நம்ம வேலைகளை கவனிக்கிற வரைக்கும் கவலை இல்லை,''.
என் பதில் கேட்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கவலை தோய்ந்திருந்த அந்த முகத்தில் சிரிப்பு பூத்து குலுங்கியது. வரிசை நகர்வதாகத் தெரியவில்லை. அதுவரைக்கும் ஏதாவது என்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தார் போலும்!
""இன்னும் சொல்லுங்க! வரிசையிலே காத்திருக்கிற வரைக்கும் பொழுது பயனுள்ளதா போகட்டும். உங்க பேச்சு மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு,'' என்றவரிடம் பேச்சைத் தொடர்ந்தேன். நான் அவரிடம் சொன்னதை இப்போது <உங்களுக்கும் சொல்கிறேன்.
கவலைக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? என்ன நடக்குமோ என்ற பயம் தான். பயம் வந்துவிட்டால், அங்கே கவலையும் சேர்ந்துகொள்ளும்.
அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகள் சமணத்திற்கு மாறினார். அக்கா திலகவதிக்குப் பொறுக்கவில்லை. அவரை சைவத்திற்கு மாற வைப்பதற்காக, சிவபெருமான், தன் பங்கிற்கு வயிற்றில் தாங்க முடியாத சூலைநோயைக் கொடுத்தார். அதைப் பொறுக்க முடியாமல் "ஆற்றேன் அடியேன்' என்று தவித்து நின்றார் அப்பர். அக்கா திலகவதி தந்த திருநீற்றைப் பூசினார். நோய் தீர்ந்தது. சிவத்தையே திரும்பவும் ஏற்றார். இதைக்கண்ட பல்லவமன்னன், அவரை படாதபாடு படுத்தினான். சமணத்திலிருந்து, சைவத்திற்கு மாறியதற்காக கொடுமைப்படுத்தினான். ஆனால், அதை அவர் திட சித்தத்துடன் ஏற்றுக்கொண்டார். அந்தக் கொடுமை "மாலை
மதியம்' போல் தனக்கு குளிர்வதாக அறிவித்தார். "என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்று சிவாலயத்துக்குள் சென்று, கல்லையும் முள்ளையும் நீக்கி உழவாரப்பணி செய்தார். வாயார தேவாரமும் பாடினார்.
மகேந்திர பல்லவன் நஞ்சு கொடுத்தும், சுண்ணாம்பு காளவாசலில் தள்ளியும் அவர் கொஞ்சமும் அச்சப்படவில்லை. சிவமே கதி என திடசித்தராக இருந்தார். பயம் இல்லாததால், அவர் கவலை கொள்ளவில்லை. சிவன் சூலை நோய் தந்தபோது, கவலை வலைக்குள் அவர் இருந்தாலும், நெஞ்சுக்குள் சிவனை நினைத்து அக்கா தந்த வெண்ணீறைப் பூசினார். அவரது கவலை தண்ணீராய் கரைந்தது.
மனிதர்கள், கவலை வலைக்குள் விழுந்து விடக்கூடாது. அது அவர்களைத் தின்னும் பெரும் முதலை. இந்த ரகசியம் தெரியாதவர்கள், எல்லா வசதிகளும் நிறைந்த இன்ப வாழ்வில் திளைத்தாலும், மனதால் துன்பத்தை வரவழைத்துக் கொண்டு துடிக்கிறார்கள்...கண்ணீர் வடிக்கிறார்கள்.
கவலையை மாற்ற ஒரே ஒரு மருந்து இருக்கிறதென்றால், அது இறை சிந்தனை மட்டுமே!
சுண்ணாம்பு அறையில் கிடந்து உடல் வெந்தாலும், நாவுக்கரசரின் மனமெல்லாம் சிவசிந்தனையில் இருந்தது. உடல்படும் வேதனையை, நோயின் தாக்கத்தை உணர்வு நரம்புகள் மூளைக்கு எடுத்துச் செல்லும். அங்கு தான் துன்பவலியை மனம் அறிந்து துவண்டு துக்கமாகி கண்ணீரை வழிந்தோடச் செய்யும்.
இந்த வலியை உணராமல், மனம் வேறு திசையில் திரும்பி சிவயோகத்தில் ஈடுபட்டதால், நாவுக்கரசருக்கு துன்பம் தெரியவில்லை. நாமார்க்கும் குடியல்லோம், நமனை (எமனை) அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை,'' என்று தேவாரத்தில், தனது அச்சமற்ற, கவலையற்ற நிலையை நமக்கும் தந்து நம்மைத் தெளிவுபடுத்துகிறார்.
கருவறையில் தோன்றியது பத்து மாதத்தில் பிறந்து விடும். ஆனால், மனதில் கருக்கொண்டவை பல்லாண்டுகள் அழிவதில்லை. மனதில், அட்டைப்பூச்சியாய் ஒட்டிக்கொண்டிருக்கும் கவலைகளைப் போக்க வழிகள் நிறைய உண்டு. நம்மிடமுள்ள தேவையற்ற மனச்சுமையை நாமே இறக்கி வைத்து விட வேண்டும். தலைச்சுமையை, இன்னொருவரிடம் கொடுத்து ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல, நியாயமான கவலைகளையும் கூட பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வறுமையில் வாழ்ந்த மகாகவி பாரதியை துன்பம் துரத்தியது. ஆனால், அவரோ "எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! எங்கள் இறைவா' என்று மகிழ்ச்சியோடு துள்ளிப்பாடினார். துன்பக்குழியில் விழாமல், அவரால் மட்டும் எப்படி கவலையை வெல்ல முடிந்தது? சோகத்தின் சுவடுகளே தெரியாமல், எப்படி இன்பமாய் வாழும் வழி தெரிந்தது? இதோ அவரே, கவலை நோய்க்கு தான் பெற்ற மருந்தை நமக்கும் அளிக்கிறார். பெற்றுக்கொள்ளுங்கள்.
""சென்றது இனி மீளாது மூடரே! நீர் எப்போதும்
சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும்
கவலை எனும் குழியில் விழுந்து குமையாதீர்!
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்!
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!
தீமை எலாம் அழிந்து போம்! திரும்பி வாரா!''
என்று உற்சாகமாய் பாடுகிறார்.
ஏதோ சொற்பொழிவு போல பேசி முடித்தேன். வந்தவர் முகத்திலும் கவலையில்லை. எனது கைக்கட்டை மருத்துவர் மீண்டும் கட்டியபோதும் வலியில்லை. ஆம்...எங்கள் மனம் தான் இறைசிந்தனைக்குள்ளும், நாவுக்கரசருக்குள்ளும், பாரதிக்குள்ளும் இயைந்து போய் விட்டதே...
இனியேது கவலை!

No comments:

Post a Comment