Monday, November 30, 2015

ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது

ஒரு சமயம் பார்க்கவர் என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதைப் பார்த்து,
"நீ ஏன் இப்படி ஜடமாக இருக்கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும்,
பிச்சை எடுத்தும் ஆத்ம லாபம் தேடிக்கொள்...' என்றார்.
அதற்கு அந்தக் குழந்தை, "தந்தையே... நான் இதற்கு முன், எத்தனையோ ஜென்மாக்கள்
எடுத்தாகி விட்டது.
பூர்வ ஜென்மத்தில் பரமாத்மாவிடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை
செய்து ஞானம் பெற்றேன்.
இப்போது இந்த ஜென்மா கிடைத்துள்ளது.
இனி, நான் எதையும் கற்றுணர வேண்டும் என்பதில்லை. இந்த ஜென்மாவில்,
மேலும் ஞானத்தால் பகவானை அடைவேன். இனி, பிறவி இராது.
"பூர்வ ஜென்மங்களின் புண்ணிய வசத்தால், எனக்கு பூர்வ ஜென்மங் களில்
நிகழ்ந்தவை ஞாபகம் உள்ளது.
பல ஜென்மங்களுக்கு முன், நான் ஒரு வைசியனாக இருந்த போது,
ஒரு பசுவை கட்டிப்போட்டு, தண்ணீர் கொடாமல் இருந்து விட்டேன்.
அந்தப் பாவத்துக்காக, எனக்கு நரகலோக வாசம் ஏற்பட் டது.
நரகத்தில், என்னைப் போல் பல பாவிகளும் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
"இங்கிருந்து எப்படி விடுதலை கிடைக்கும் என்று எல்லாருமே ஏங்கி அழுது கொண்டு
இருந்தோம்.
அந்த சமயம், திடீரென்று, குளிர் காற்று வீசியது. இது எப்படி ஏற்பட்டதென்று பார்த்தேன்.
அப்போது எம தூதர்கள், ஒரு புண்ணிய புருஷனை அங்கு அழைத்து வந்தது தெரிந்தது.
அந்த புண்ணிய புருஷன் வந்ததால், இங்கு குளுமையான காற்று வீசியதாக தெரிந்து
கொண்டேன்.
அந்த எம தூதன், புண்ணிய புருஷனுடன் வரும்போது, நரகலோகத்தை காண்பித்தபடி
வந்தான்.
"நரகவாசிகள், அந்த புண்ணிய புருஷனிடம், "ஐயா... நீங்கள் போய் விடாதீர்கள்.
இங்கேயே இருங்கள்.
நீங்கள் இருப்பதால், இங்கு எங்களுக்கு குளிர்ச்சியும், சுகமும் ஏற்படுகிறது...'
என்று கூறினர்.
அவரும் அப்படியே நின்று, எம தூதர்களை பார்த்து,
"நான் பல யாக யக்ஞங்கள் செய்துள்ளேன். தான தர்மம் செய்திருக் கிறேன்.
நான் விபச்சித் என்ற அரசனாக இருந்த போது, குடிமக்களை நீதியுடன் பரிபாலனம்
செய்தேன்.
அப்படி இருக்கும்போது, என்னை ஏன் நரக லோகத்துக்கு அழைத்து வந்தீர்...'
என்று கேட்டார்.
"அதற்கு எம தூதன், "ஐயா... நீர் சொல்வதெல்லாம் உண்மை! ஆனாலும், நீர்
உம்முடைய மனைவி ஒருத்திக்கு, தவறு செய்து, துக்கப்படும்படி செய்து விட்டீர்.
ஒரே ஒரு சமயம் தான் அப்படி செய்தீர். இருந்தாலும், அது பாவம் தான்.
அதனால்தான் உமக்கு நரகலோக வாசம் இல்லாவிட்டாலும், நரகலோகத்தை
பார்க்கும்படியான சின்ன தண்டனை கிடைத்து உள்ளது.
இப்போது பார்த்தாகி விட்டது. இனி, நீர் செய்த புண்ணிய பலனை அனுபவிக்கலாம்.
அதோ விமானம் வருகிறது...' என்றான் எமதூதன்.
"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் இங்கிருப்பதால் இத்தனை பேர்களுக்கும்
சுகம் ஏற்படுகிறது.
ஆகவே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன்.
நரகமானாலும், பிறருக்கு உதவி செய்வதற்காக நான் இங்கேயே இருந்து
விடுகிறேன்...' என்றார்.
"இவர்களுக்கு ஏதாவது புண்ணியம் இருந்தால் இங்கிருந்து விடுதலை கிடைக்கும்.
புண்ணியமில்லாத போது, நரக வாசம் தான்!
நீங்கள் வந்து விமானத்தில் ஏறி, சுவர்க்கம் செல்லுங்கள்...' என்றான்
எம தூதன்.
"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் செய்த புண்ணியங்களில்
ஒரு பகுதியை இவர்களுக்கு அளிக்கிறேன்.
இவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்...' என்றார்.
அதேபோல் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானம் செய்தார்.
அந்த புண்ணிய பலன் கிடைத்ததும், பாவிகளுக்கு விடுதலை கிடைத்தது,
அந்த புண்ணியவானும் விமானம் ஏறி சுவர்க்கம் சென்றார்.
அந்தக் கூட்டத்தில், நானும் ஒருவனாக இருந்ததால் நரகத்திலிருந்து எனக்கும்
விடுதலை கிடைத்தது.
"அதன் பின், பல ஜென்மங்கள் எடுத்து, நல்ல புத்தியோடு வாழ்ந்து, பகவானை
வழிபட்டு, ஞானம் வர ஆரம்பித்தது.
பூர்வ ஜென்மத்தை நல்ல முறையில் வாழ்ந்து, ஞானத்தை வளர்த்தேன்.
ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது...' என்றது
அந்தக் குழந்தை.

No comments:

Post a Comment