Friday, June 12, 2015

பெரியபுராணத்தில் அமங்கலமான சொற்களே கிடையாது.

பெரியபுராணத்தில் அமங்கலமான சொற்களே கிடையாது.
முத்த நாதன் மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்லுமிடத்து, ‘தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய’ என்பார்.
அதிசூரன் ஏனாதிநாத நாயனாரோடு போரிட்டு வஞ்சனையால் அவரைக் கொன்றபோது, ’முன்நின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்’ என்பார்.
அப்பூதியடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு வாழையிலை அரியச் சென்றபோது அரவு தீண்டி உயிரிழக்கிறான். தம் வீட்டிற்கு எழுந்தருளிய அப்பரடிகளின் திருவமுதிற்குத் தடையாகுமே என்று கருதிய அப்பூதி தம்பதியினர் அவனை ஓர் பாயில் சுருட்டி மறைத்து வைத்து விடுகின்றனர். பின் அப்பரடிகள் திருவமுதுக்குத் தயாரானபோது மூத்த திருநாவுக்கரசு எங்கே எனக் கேட்க அவன் இறந்தான் என்று கூறாது,’ இப்போது இங்கு அவன் உதவான்’ என்றார் அப்பூதியடிகள் என்பார் சேக்கிழார்.
பின்பு அப்பரடிகளின் வற்புறுத்தலின் பேரில் அப்பூதியடிகள் தம் ‘மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார்’ என்பார்.
சேக்கிழார்க்கு சிக்கல் தந்த இடங்களும் உண்டு.
அடியார்களோடு சிவபிரான் பேசியதாக வரும் இடங்களில் எல்லாம் முன்னுணர்வோடு தான் வார்த்தைகளை அடுக்கியிருக்கிறார்.
தடுத்தாட்கொண்ட புராணத்தில் ஈசன் பேசியதாக சேக்கிழார் கூறுபவை அனைத்தும் இறைவனுக்குப் பொருந்தியதாகவே இருக்கக் காண்கிறோம்.
சுந்தரரின் கல்யாணத்தில் இறைவன் வயோதிகக் கோலம் கொண்டு தடுத்தாட்கொள்ள வருகின்றான். இருவரிடையே இருக்கும் வழக்கினை முடித்த பின்பு மணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி நாவலூரன் தம்மடிமை என்று கூறுகின்றான்.
இதைக் கேட்ட அனைவரும் அந்தணன் அந்தணனுக்கு அடிமையாவது உண்டோ என்று கூறிச் சிரித்தனர். சுந்தரர் “நன்றால் மறையோன் மொழி” என நக்கலாகச் சிரிக்கிறார்.
உடனே கிழவேதியருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது. சுந்தரரைப் பார்த்து “ இக்காரியத்தை இன்று நீ சிரித்தது என் ஏடா” என்கிறார்.
வேதியரின் கோபத்தைக் கண்ட சுந்தரர் சிரிப்பை நிறுத்திவிடுகிறார்,
“மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி,
நேசம்முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி”
என்கிறார் சேக்கிழார்.
பின்பு சுந்தரர் இறைவனை நோக்கி,
“ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்”
எனக் கடிந்து கொள்கிறார்.
உடனே வேதியர் “பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக” என்கிறார்.
இந்த வார்த்தை அப்படியே இறைவனுக்குப் பொருந்துவதாக இருக்கிறது.
“என்னை யார் என்று உனக்குத் தெரியவில்லை.”
“நீ இன்று, எத்தனை சொன்னால் யாதும் மற்றவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை”
“பேச்சு தேவையில்லை. எனக்குப் பணி செய்யப் புறப்படு”
“ஆகில் நின்று, வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டும்”
என்கிறார் சேக்கிழார்.
இதுதான் சைவர்களுக்கு சேக்கிழார் தரும் ‘மெசேஜ்’. “பேச்சினால் ஆவதென் பேதைகாள்” என்பார் ஞான சம்பந்தர். இன்று நம்மிடம் பேச்சுத்தான் அதிகம். செயலில் ஒன்றும் இல்லை.
இங்கு இறைவன் கூறுவதெல்லாம் அவன் இயல்புக்குப் பொருத்தமாகவே உள்ளதைக் காணலாம்.
சுந்தரர் ஓலையைக் கிழித்த பிறகு வேதியர் முறையிடுகிறார். பக்கத்திலுள்ளவர்கள் இருவரையும் விலக்கி வேதியரின் ஊர் எது என்று கேட்க, “ எனக்கு பக்கத்து ஊர்தான், வெண்ணெய் நல்லூர். அது கிடக்கட்டும். இவன் ஓலையை கிழித்ததிலிருந்தே எனக்கு அடிமை என்பதை நிரூபித்து விட்டான், பார்த்தீர்களா..!” என்று பிடி விடாமல் வாதிட்டார்.
சுந்தரர் இவரின் விடாப்பிடியைக் கண்டு “பழைய மன்றாடி போலும் இவன்” என்கிறார்.
இறைவன் உண்மையிலேயே பழைய மன்றாடிதானே...?
சித்தவடமடத்தில் சுந்தரர் படுத்திருந்தபோது இறைவன் வழக்கம் போல் கிழவேதியராக வந்து சுந்தரரின் தலைமீது தன் திருவடி படும்படி படுத்துக் கொள்கிறான். சுந்தரர் வேறு பக்கம் படுத்தபோதும் இறைவன் விடவில்லை. சுந்தரர் அவரை நோக்கி,
” அருமறையோய் உன்னடி என் சென்னியில் வைத்தனை” என்கிறார்.
வேதியரான சிவபிரான் “ திசையறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்” என்கிறார்-- நெல்லைசொக்கர்

No comments:

Post a Comment