Friday, June 26, 2015

தர்ம ஸாஸ்திரம் கூறும் ,தகாத செயல்கள் சில ...

தர்ம ஸாஸ்திரம் கூறும் ,தகாத செயல்கள் சில .....
"ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்ட2த்யகர்ம க்ருத்"
இவ்வுலகில் பிறந்த அனைவரும், ஒவ்வொரு க்ஷணமும்.
ஏதாவது ஒன்றை செய்து கொண்டேதானிருப்பார்கள்.
ஒருவரும் ஒரு க்ஷணகாலம் கூட, எந்தஒரு செயலையும்.
செய்யாமல் இருப்பதில்லை என்கிறது சாஸ்திரம்.
செய்யும் செயலை நம் மனதிற்கு தோன்றியவாறு
செய்யக்கூடாது, எந்தச்செயல் நமக்கு நன்மையைத் தரும்?
எது தீமையைத்தரும்? என்று. செய்ய வேண்டிய,
செய்யக்கூடாத செயல்களை தீர்மானிகும் விஷயத்தில்,
மனித புத்தியை விட,பகவானின் மூச்சுக்காற்றாக விளங்கும்,
வேத சாஸ்திரங்கள் மூலம் தீர்மானிப்பது சிறந்தது.
இதைதான் பகவத்கீதையில் ." தஸ்மாத் ஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யாகார்ய வ்யவஸ்திதௌ அர்ஜுனா!"
செய்யவேண்டியவைகளை,செய்யக்கூடாதவைகளை தேர்ந்தெடுப்பதில், சாஸ்திரம்தான் ப்ரமாணம்
என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர் ..
நாம் அன்றாடம் செய்யும் குளித்தல், ஆடை உடுத்திக் கொள்ளுதல், சாப்பிடுதல், தூங்குதல், (பூஜை ஜபம் பாராயணம் ஹோமம் என) ஆன்மீகத்தில் ஈடுபடுதல், நமது கடமைகளைச் செய்தல்,
என எந்த ஒரு செயலையும் செய்யாதே என, சாஸ்திரங்கள்
நம்மை தடுக்கவில்லை, மாறாக இவற்றை நெறிப்படுத்தி, வரைமுறைபடுத்தி, சில கட்டுப்பாடுகளுடன்,
இவைகளை மேலும் சிறப்பாகச்செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஆகவே சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவைகளை, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக நாம் செய்யும் சின்னஞ்சிறிய தவறுகளை தவிர்க்க முயலவேண்டும்,
அதற்காகவே ஆங்காங்கே சிலர் செய்து வரும் சிறிய தவறுகளை நேரில் பார்த்து, சாஸ்திரங்களில் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட செயல்களை மட்டும் சேகரித்து, தவறுகளை கூடியவரை தவிர்த்து, செய்யும் செயலை, ஸரியாகச்செய்து, முழுமையான பலனை அடைந்து ஸுகமாய் வாழ இறைவன் அனுக்ரஹிக்கட்டும்.
செய்ய வேண்டிய தர்மத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
அதற்கு முன்பாக, செய்யக்கூடாதவை களான செயல்களைத்
தவிர்க்க முயல வேண்டும், வேத சாஸ்த்ர புராணங்களிலும்,
நமது கலாசாரம்,பண்பாடு இவைகளிலும் நம்பிக்கையுடைய
ஆன்மீக மக்களுக்காக ஆபஸ்தம்பர், கௌதமர், ஆச்வலாயனர் போன்ற மஹரிஷிகளால் எழுதப்பட்ட தர்ம சாஸ்திர புஸ்தகங்களிலும்,மற்றும் ஆசார(ஒழுக்க)முள்ளவர்களின் நடத்தையையும், நன்கு ஆராய்ந்து,தர்மங்களை ஒன்று திரட்டி,
நாம் செய்யக்கூடாத சிற்சில தவறுகள்,சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாஹரணமாக...
1)ஸ்னானம் செய்வதற்கு (குளிப்பதற்க்கு) முன்பாக,
நெற்றியில் சந்தனமோ ,விபூதியோ,திருமண்
முதலியவற்றை இட்டுக் கொள்ளக் கூடாது.
2)ஈரமான (உலராத) உடையை உடுத்திக் கொண்டு,
பூஜை, அர்ச்சனை, போன்ற தெய்வ வழிபாட்டைச்
செய்யக்கூடாது.
3)விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது, விளக்கின் எண்ணையிலுள்ள தூசியை, கை விரலால் எடுக்கக்கூடாது.
(இது தரித்ரத்தைத் தரும்)
4)மணியடிக்கும் ஓசையில்லாமல் எந்த பூஜையையும்
செய்யக் கூடாது.
5)தலைப்பு (நுணி) இல்லாத உடைகளையும் ,
கரைகள்(பார்டர்) இல்லாத உடையையும் , மற்றும்
நெருப்பு பட்ட துணிகளையும் உடுத்திக் கொள்ளக்கூடாது.
6)ஆண்கள் தெய்வங்களை வழிபடும் பொழுது,
தையல் உள்ள (தைத்த) சட்டையை அணியக்கூடாது.
7)எந்த இடத்திலும், எப்பொழுதும் வடக்கு திசையில்,
தலையை வைத்து தெற்குதிசையில் கால்களை நீட்டி
படுத்துக் கொள்ளக்கூடாது.
8)பூசணிக்காயை (கூமாண்டத்தை)பெண்கள் உடைக்கக் கூடாது. (ஆண்கள் தான் உடைக்கவேணும்)
9)செடி நடுவது , மரங்கள் நடுவது, வபனம் (ஷேவ்) செய்து கொள்வது, வயலில் விதை தெளிப்பது, ஆகியவற்றை இரவு நேரத்தில் செய்யக்கூடாது.
10)யாக வேதியில், ஹோம குண்டத்தில் பரப்பப்பட்ட,
ஹோமங்களில் உபயோகித்த தர்பங்களை, மறுபடியும்
உபயோகிக்கக் கூடாது.
11) ஒரே தமிழ் மாதத்தில், இரண்டு அமாவாஸையோ
,இரண்டு பௌர்ணமியோ வந்தால் (சித்திரை ,வைகாசி தவிர )
அந்த மாதத்தில் சுப(மங்கள) காரியங்களை நடத்தக்கூடாது
(இது அதிக மாஸம் எனப்படும்).
12)தெய்வ ஸன்னிதியில் ஏற்றப்படும் தீபத்தை,
(திருவிளக்கை) தரையில் வைக்கக் கூடாது
(தட்டு அல்லது இலைகளின் மீது வைக்கலாம்)
13)தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும் போது,
அபிஷேகம் செய்த பாலையும், அபிஷேகம் செய்த சந்தன ஜலத்தையும் (ஒரே பாத்திரத்தில்) ஒன்றாக சேர்க்கக் கூடாது.
(தனித்தனியாக பிடித்து வைக்க வேண்டும்).
14)இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைபட்ட,
தேங்காயை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
(இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய்
மூடிகளைத் தான் நிவேதனம் செய்ய வேண்டும்).
15) தெய்வத்திற்கு விளக்கேற்றும்போது, ஒரு எண்ணையை மற்ற எண்ணை அல்லது நெய்யுடன் கலந்து, விளக்கேற்றக் கூடாது. (நல்லெண்ணை, நெய் முதலியவற்றால் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்)
16) ஸ்வாமி அபிஷேகத்திற்காக கிணறு, மற்றும், குழாயிலிருந்து எடுத்து வரும் ஜலத்தை, இடது கையால் எடுத்து வரக்கூடாது.
(வலது கையால் எடுத்துவரலாம்).
17) ஒரு தெய்வத்தின் படத்துக்கோ, விக்ரஹத்துக்கோ
போடப்பட்ட மாலையை, மற்ற தெய்வத்தின் படத்துக்கோ விக்ரஹத்துக்கோ போடக்கூடாது.
18) சூடு செய்த(காய்ச்சிய) பாலால், தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யக்கூடாது.
19) புழுங்கல் அரிசியால் ஸமைக்கப்பட்டவைகளை,
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
20)நிவேதனம் செய்யும் போது,வெத்தலையுடன் சேர்த்து
வைக்கப்படும் பாக்கை, பாக்கெட்டுடன் வைத்து நிவேதனம் செய்யக்கூடாது (பாக்கு பாக்கெட்டைப் பிரித்து வெத்தலையுடன் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்)
21)எக்காரணத்தைக் கொண்டும், ஆலயங்களிலோ,
பூஜையறைகளிலோ, தெற்கு திசை நோக்கி, தீபம் ஏற்றி வைக்கக்கூடாது.
22) பிளாஸ்டிக்காலான பூக்களை, தெய்வ விக்ரஹங்களின் மீது,
சாத்தக் கூடாது.
23) பூஜை அறையில்,அலங்காரமாக அமைக்கப்படும்,
எலக்ட்ரிக் (ஸீரியல்) விளக்குகளை, தெய்வ விக்ரஹம்
அல்லது படத்தின் மீது பட்டுக் கொண்டிருக்குமாறு
அமைக்கக் கூடாது.
24) திருமணமானவர்கள், பஞ்சகச்சம் மற்றும் மடிசார் கட்டிக் கொள்ளாமல், எந்த ஒரு பூஜையையும் தானும் செய்யக்கூடாது, மற்றவருக்குச் செய்து வைக்கவும் கூடாது.
25) ப்ளாஸ்டிக் ஆஸனத்தின் மீது, அமர்ந்து கொண்டு,
எந்த ஒரு மந்திரத்தையும் ஜபம் செய்வதோ,
ஹோமம் செய்வதோ கூடாது.
26)நாம் வஸிக்கும் கட்டடத்தில் (அபார்ட் மெண்டில்)
ஏதாவது ஒரு பகுதியில், இறந்தவர் உடல் இருக்கும் போது,
தன் வீட்டில் பூஜை, பாராயணம், ஜபம், ஹோமம், முதலிய
எந்த ஒரு தெய்வ காரியங்களையும் செய்யக்கூடாது.
(அந்த உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு செய்யலாம்).
27) வேப்பெண்ணையாலும் வேப்பெண்ணை கலந்த எண்ணையாலும் ஆலயங்களிலோ வீட்டிலோ ஸ்வாமிக்கு தீபம் ஏற்றக்கூடாது.
28)இறைவனுக்கு என்று செய்யப்படும் பிரசாதங்களை ,முகர்ந்து பார்க்க கூடாது ...

No comments:

Post a Comment