Saturday, January 29, 2011

கோமாதா நமது குலமாதா

கோமாதா நமது குலமாதா
சைவ வழிபாட்டில் முக்கிய இடம்பெறுவது பசு வழிபாடாகும். ஏனைய மிருகங்களுக்கு இல்லாத சிறப்பு இப்பசுவிற்கு உண்டு. சைவ சமயத்தின் தாற்பரியமாக திகழ்வது பசுவாகும். பசுவானது தெய்வாம்சம் மிக்கதாக போற்றி வழிபடப்படுகின்றது. இன்றைய சூழலில் இத்தகைய பசுக்கள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றனவா? இவற்றிற்கு என்ன நடக்கின்றன என்பன சிந்திக்கவேண்டிய விடயமாகின்றது. இத்தகைய சிந்தனைப் புலத்திலே சைவப்புலவர் சு.செல்லத்துரையால் எழுதப்பட்ட கோமாதா எனும் நூலில் இடம்பெறும் பாடலானது மேலும் ஆழமான சிந்தனைக்கு தூண்டுகின்றது. இன்றைய சம கால நடப்பியலைக் காட்ட விளைகின்றது. அவருடைய பாடல்களிலே,

"கோபூசை செய்தென்றும் கோயில் தோறும்

கும்பிட்டு வாழ்ந்த மக்கள் கோலம்மாறிக்

கோவினையே கொல்களத்தில் வெட்டிவீழ்த்திக்

கொத்துறொட்டி ஆக்கியுண்ணல் கொடுமையன்றோ

தாமாகத் தாவரநல் லுணவையுண்டு

தமதுழைப்பும் தகுபயனும் தந்துவாழும்

கோமாதா குலத்தினையே கொன்று தின்னும்

கொடுமையினைப் போக்கிடவே திரண்டு வாரீர்'
எனக் குறிப்பிடுகின்றார்.
இவருடைய இவ் அறைகூவலானது சமகால யாழ்ப்பாணச் சூழல் எத்திசை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. இது வேதனைக்குரிய விடயமாகும். இதற்குச் சான்றுகளாக இன்று அதிகரித்துச் செல்லும் மாட்டிறைச்சி கடைகளையும் கொத்துரொட்டிக் கடைகளையும் குறிப்பிடலாம். நாவலரது காலத்தில் கந்தபுராண கலாசாரம் என உயர்நிலை பெற்ற யாழ்ப்பாணத்துக் கலாசாரம் எத்தகைய இழிநிலை நோக்கிச் செல்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும். யாழ்ப்பாணச் சூழலில் பண்பாட்டு அடையாளங்களுடன் பசுவைத் தெய்வமாகப் போற்றி வணங்கியோர் இன்று தடம் மாறுகின்றார்கள். இத்தகைய பசுவதை என்னும் பாவச் செயல்கள் நிறுத்தப்படவேண்டும். இதற்காகப் பசுக்கள், இடபங்களைப் பேணும் இணையத்தினர் பசுக்கொலைக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். காரணம் பசுக்களானது தெய்வாம்சம் பொருந்தியவையாக விளங்குகின்றன. ஏன் பசுவதைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் சிந்திக்கும் போது பசுவின் சிறப்பானது நன்கு விளங்குகின்றது. பசுவின் சிறப்புப் பற்றியும் ஏன் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
பசுவின் சிறப்பு
தமிழர் வாழ்வின் உலகியல் செழிப்புக்கு உரமூட்டுவது பசுவாகும். தாயினுடைய, தெய்வத்தினுடைய பிரதி விம்பமாகக் கருதப்படுவது பசு. அதனாலேயே அது அழும் பொழுது அம்மா என்று அழுகின்றது. பசுவிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களும் சமய பூசை வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இதனால் பசுவைப் பூசித்து வழிபடுவதே மனித வாழ்வின் தர்மம் எனப்படுகின்றது.
சிவபெருமான் இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ளார். தருமமே இடபமாகி சிவபெருமானுக்கு வாகனமானது என்பார்கள். தர்மமே இடபதேவரானது என்றால் தர்மத்தின் பெருமைக்கும் இடபத்தின் பெருமைக்கும் இணையில்லை. மாடு என்றால் செல்வம். "விடை தேவர் குலமன்றோ இச்சுரபி குலம்" என்று சேக்கிழார் சுவாமிகள் போற்றுவர். பசுவினை கோமாதா என வழிபடும் மரபு நம்மிடையே பழங்காலந் தொட்டு நிலவி வந்துள்ளது.
சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும் அதன் பக்கத்திலே நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே கபிலநிறம், கரு நிறம், வெண்ணிறம், புகைநிறம், செந்நிறம் உடையனவாம். இவ்வைந்தும் சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து சிவபூசையின் பொருட்டும், யாகாதி கருமங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன. இப்பசுக்களின் ஒவ்வொரு உறுப்பிலும் தெய்வத்தன்மையைக் காணலாம். பசுவினது உடலில் தெய்வங்களும், தீர்த்தங்களும், உலகங்களும், முனிவர்களும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அவற்றினை நோக்கும் போது,

கொம்பின் அடியில் பிரம விஷ்ணுக்கள்

கொம்பின் நுனியில் கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும்

சிரத்தில் சிவன்

நடு நெற்றியில் உமாதேவி

மேல் நாசியில் முருகக் கடவுள்

உள் நாசியில் நாகேசர்

இரு காதுகளிலும் அச்சுவினி தேவர்

இரு கண்களிலும் சூரியசந்திரர்

பல்லில் வாயு

நாவில் வருணன்

ஊங்காரத்தில் சரஸ்வதி

இருதயத்தில் இயமன்

கெண்டைத்தலத்தில் இயக்கர்

உதட்டில் உதய அஸ்தமன சந்திகள்

கழுத்தில் இந்திரன்

திமிலில் அருக்கர்கள்

மார்பில் சாத்தியர்

நான்கு கால்களிலும் அனில வாயுக்கள்

முழந்தாள்களில் மருத்துவர்

குரத்தின் நுனியில் நாகலோகத்தார்

குரத்தின் நடுவில் கந்தருவர்

மேற்குரத்தில் தேவமாதர்கள்

முதுகில் உருத்திரன்

சந்திகளில் வசுக்கள்

அரைப்பலகையில் பிதிரர்கள்

பகத்தில் சத்தமாதர்கள்

அபானத்தில் இலக்குமி

அடிவாலில் நாகேசர்

வால்மயிரில் சூரியன் ஒளி

மூத்திரத்தில் கங்கை

சாணத்தில் யமுனை

உரோமத்தில் முனிவர்கள்

எனச் சொல்லப்படுகின்றன. இதனால் பசுவினது உடலானது தெய்வீகம் நிறைந்ததாக விளங்குகின்றது. பசுவினது சிறப்பானது வீட்டுக்கிரியையில் தொடங்கி ஆலயக்கிரியை வரை முக்கிய இடம்பெறுகின்றது. பஞ்ச கௌவியம் எனப்படும் கோசலம், கோமயம், பால், தயிர், நெய், என்பன அபிடேகத்திற்குரிய திரவியங்களாக விளங்குகின்றன.
சைவநெறியில் விதிக்கப்பெற்ற எண் வகையான ஸ்தானங்களுள் மருதஸ்நானம் என்பதும் ஒன்று. பசுவின் காலில் பட்டதூசியில் இலட்சுமி கடாட்சம் உண்டு. திருநீற்றை நிறையப்பூசுதல் ஆக்கிநேயஸ்தானம் எனப்படும். திருக்கோயிலில் கிடைக்கப்பெறும் பிரசாதமான திருநீறு பூசுதல் பார்த்திப ஸ்நானம் எனப்படும்.
மகா கும்பாபிஷேகம், வீடு குடிபுகுதல், திருமணக்கிரியைகள், கோபூசை பிதிர்யாகங்களில் கோதானம் என்பவற்றில் பசுவானது முக்கிய இடம்பெறுகின்றது. பசுவின் உயர்வு கருதி சைவசித்தாந்தம் ஆன்மாவை பசு என்றழைக்கின்றது. பசுக்களின் முதல்வன் என்பதால் சிவன் பசுபதி எனப்படுகின்றான்.
திருமுறைகளிலே பசுவின் சிறப்பானது உயர்வாகப் போற்றப்பட்டுள்ளது. "யாவர்க்குமாம் பசுவுக் கொரு வாயுறை" என்று திருமூலரும் "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்" என சம்பந்தரும் உயர்வாக போற்றுகின்றனர். இலக்கியங்களை நோக்கும் போது தமிழ் அரசர்கள் பசுவுக்குத் தீமை செய்யாது போர் செய்தனர் எனவும் பசுக்களைப் பாதுகாப்பதில் பகை அரசரும் உடன்பாட்டுடன் செயற்பட்டார்கள் என்பதை பின்வரும் புறநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது.

"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாதோரும்

எம் அம்பு கடிவிடுதலும் நும் அரன் சேர்மின்'

எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
வேதங்களில் முதல் வேதமாகிய இருக்கு வேதப்பாடல்கள் பசுவைப் போற்றுகின்றன. எவரும் தீங்கு செய்தல் கூடாது. உருத்திரனின் அன்னை, வசுக்களின் பிள்ளை, அமுதத்தின் மையம், ஆதித்தியனின் சகோதரி அனைவருக்கும் அதிதி, பாவம் அறியாத பிராணி எனக் குறிப்பிடப்படுகின்றது.
சாம வேதமானது போற்றுகின்ற போது "நீவிர் புண்ணிய மானவர்கள், நீங்கள் நன்றாக வாழுங்கள், நன்றாகப் பாலைக் குடியுங்கள், காலையும் மாலையும் பால் தரும் நீவிர் கன்றுகளுடன் காளைகளுடனும் இன்னும் பொலிவீராக இங்கேயுள்ள நீர்நிலைகள் உமக்கு வற்றாத ஊற்றாகுக. நீவிர் இங்கே மகிழ்ச்சியாய் வாழ்வீராக! வளம் பெருக்குவீராக" எனப் போற்றுகின்றது.
பசுவானது வீட்டிற்கு மகிழ்வளிப்பனவாகக் காணப்படுகின்றது. சாணம் மெழுகிய நிலம், சாணிநீர் தெளித்த முற்றம், சாணப்பரிமணமான வீபூதிப்புழக்கம், பால் கொதிக்கும் நறுமணம், தயிர் கடையும் மத்தோசை, தாக சாந்திக்கு மோர் இருத்தல் என்பன வீட்டிற்கு மகிழ்வு தரும் செயற்பாடுகளாகும்.
திருமூலர், சண்டேசுவரர், ஆனாயநாயனார், மனுநீதி கண்ட சோழன், ஞானப்பிரகா முனிவர் முதலானோர் பசு ஓம்புதல் மூலம் சிவகதி அடைந்தவர்கள்.
திருமூலர்
சுந்தர நாதர் என்பவர் வரும் வழியில் மூலன் என்னும் பசு மேய்க்கும் இடையன் இறந்து கிடப்ப அவனைச் சூழ்ந்து பசுக்கள் கண்ணீர் சொரிந்து அழுவதைக்கண்டு தன் யோக சித்தியினாலேயே தனது உடலை மரத்தின் மேல் கிடத்தி விட்டு மூலன் உடலிற் புகுந்து பசுக்களை மகிழ்வித்தவர். மீண்டும் வந்த போது தன் உடலைக் காணாமையினால் மூலனுடைய உடலுடன் வாழ்ந்து பசு காத்ததாலே திருமூலர் ஆனார்.
சண்டேஸ்வரர்
பசு மேய்ப்பவன் பசுவைக் கோலால் அடிப்பதைக் கண்டு மனம் பொறுக்காது மேய்ப்பவனை விலக்கி தானே அப்பசுக்களை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பசுவினை மேய்க்கும் காலத்தில் அப்பசுக்கள் தாமாகச் சொரிந்த பாலைக்கொண்டு சிவலிங்கப்பெருமானுக்கு அபிஷேகம் புரிந்து வழிபடலானார். இச் செயலைப் பாதகச் செயல் எனக் கருதிய தந்தையர் உண்மையை அறியாது அப்பாற்குடத்தைக் காலால் இடறினார். அவ் வேளை விசாரசருமர் தன் சிவபூசைக்கு இடையூறு செய்தவர் காலை சிறு தடியால் அடிக்க அது மழுவாகித் தந்தையின் காலைத்துண்டித்தது.
தந்தையாக இருந்தும் சிவபூசைக்கு இடையூறு செய்தவரைத் தண்டித்த உறுதி கண்ட சிவன் இருவருக்கும் அருள் புரிந்து விசாரசருமருக்கு சிவ வழிபாட்டின் பயன் நல்கும் சண்டேஸ்வரர் பதவியைக் கொடுத்தார். இன்று சிவாலயங்களில் சிவவழிபாட்டின் பயனைத் தரும் தெய்வமாகச் சண்டேஸ்வரர் விளங்குகின்ற சிறப்பு பசு ஓம்பலினாலே என்பது நினைவுக்குரிய விடயமாகும்.
ஆனாயநாயனார் தனது புல்லாஙகுழல் இசையால் பஞ்சாட்சர மந்திரத்தை இசைத்து பசுக்களை மேய்த்துச் சிவபுண்ணிய கைங்கரியத்தைச் செய்து சிவபதம் அடைந்தார்.
 மனுநீதி கண்ட சோழன் கன்றினை இழந்த தாய்ப்பசுவின் துயர் துடைக்கத் தாய்ப்பசு அடைந்த துன்பத்தை தானும் அடைவதே முறையென தன் ஒரே மகனை வீதியிற் கிடத்தி தானே அவன் மீது தேரை ஏற்றி கொன்றார். இச் செயலைக்கண்ட சிவன் அருளால் பசுக்கன்றும், அரசிளங் குமரனும் உயிர் பெற்று அனைவரும் சிவகதி பெற்றனர்.
ஞானப்பிரகாசர் என்பவர் இலங்கையில் அந்நியராட்சி புரிந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் கொலையும் புலாலும் மறுத்த சைவமக்கள் வாழ்ந்த காலத்தில் போர்த்துக்கேய பறங்கியர்க்கு உணவாக நாளுக்கொரு வீட்டார் பசுக்கொடுக்க வேண்டிய கொடிய சட்டம் நடைமுறைக்கு இருந்தது. தன் முறை வந்த போது பசுக்கொலையாகிய கொடிய பாவம் செய்வதிலும் பார்க்கப் பரதேசம் போவதே மேலெனக்கருதி இரவோடு இரவாக கடல்கடந்து இந்தியா சென்றார். மேற்கூறிய அருளாளர்கள் பசுவோம்பச் சிவகதி பெற்றவர்கள். இச்சிறப்புக்குரிய பசுவானது பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்.
பசுப்பாதுகாப்பு
பசுவின் குருதியானது ஒரு துளி நிலத்தில் வீழ்வதாயின் அதனின்று பலகோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம் செய்வார். நமது முன்னோர் பசுக்கள் கூடுகின்ற இடங்களில் அவை தாகம் தீர்ப்பதற்கு வசதியாக தண்ணீர் தொட்டி கட்டி எந்நேரமும் நீர் நிரப்பியிருக்கும். அவற்றின் பக்கத்தில் பசுக்கள் தமது உடலில் ஈக்கள் முதலியவற்றால் உண்டாகும் காயங்கள் தீர உடலை உரோஞ்சுவதற்கும் வசதியாக உருண்டையான உயரமான ஆவுரோஞ்சு கற்களை நட்டு வைத்தார்கள்.
பசுக்களுக்கான சாலையை விதிப்படி செய்து ஆற்றுமண், ஓடை மண், புற்று மண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் நிலப்படுத்தி முதிர்கன்று, இளங்கன்று, நோயுள்ள கன்றுகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க வேண்டும். நாள் தோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வேண்டும் என ஆறுமுகநாவலர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இத்தகு சிறப்பிற்குரிய பசுவை, வழிபாட்டில் முதன்மை பெறும் பசுவை திருமூலரால் சிவபூமி என அழைக்கப்படும் ஈழநாட்டில் இன்றைய சூழலில் இறைச்சிக்குப் பயன்படுத்துவது பெருவேதனை தரும் விடயமாகும். பசுவைக் கொல்லுதல் பெரும்பாவமாகும். திருஞான சம்பந்தர் பசுவாழ்க என்று பாடுகின்றார். பசு இல்லாத வீட்டில் அழகு, செல்வம், மங்களம், சுபீட்சம், கீர்த்தி கிடைக்காது; இலட்சுமி தரிக்க மாட்டாள். அவ்வீடு சுடுகாட்டிற்கு சமமாகும் என்பது சைவ ஆன்றோர் வாக்காகும்.
முடிவாக நோக்குகின்ற போது "அரிது அரிது மானிடராதல் அரிது" என ஒளவையார் சுட்டுகின்றார். ஆறறிவுடைய மனிதன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அரிய சிறப்புள்ள மனிதனிடம் சமுதாயம் உயரிய பண்புகளை எதிர்பார்க்கின்றது. மனிதன் தன்னைப் பெற்ற தாய்மீது கொண்டுள்ள பற்று தாயின் பணி தொடரும் பசுவிடத்திலும் தொடர்தல் உயர் தர்மமாகும்". பாலர் முதல் வயோதிபர் வரை உயிர்வாழ்வதற்கு உகந்த அமுதம் பசுவின் பாலாகும். தாய் பாலூட்டி உயிர் தந்தது போல இத்தரணியில் உயிர் காக்க உதவும் பசுவைத் தெய்வ நிலையில் ஆன்றோர் வைத்துப் போற்றினார்.
தற்காலத்தில் தடுமாறி பகுத்தறிவை இழந்து பசுக்களைப் பேணாதது மட்டுமன்றி உணவாக்கிப் பணம் பெருக்கும் இழி நிலையைச் செய்கிறார்கள். பசுவைக் கொன்று தின்னும் இழி பழக்கம் வெளிநாட்டு வாசிகளாலும் பறங்கியராலும் இங்கே வந்தது. அது சைவநெறிக்குப் புறம்பான செயலாகும். இப்பசுவை உண்பதன் ஊடாக இழி நிலைக்குச் செல்லுகின்றார்கள். புலால் உண்பவன் புலையன் என்பதை மறந்து யார் யாரையோ புலையன் எனப் போலித்தனம் காட்டுவது கொடுமையல்லவா? பசுவைக் கொன்றவனும் கொலைக்காகக் கொடுத்தவனும் தின்றவனும் கொடும்பாவியாக துயரில் அழுந்துவார்கள்.
'ஒரு மாடு குடும்பம் காக்கும் ஒன்பது மாடு குலம் காக்கும்' எனும் கோட்பாட்டுக்கு அமைய மாட்டைத்தின்று இழி நிலைக்கு செல்லும் நிலை மாறி பசுவைக்காத்து எமது சைவநெறி வந்த வழிவாழ்ந்து எமது பண்பாட்டு கலாசார அடியில் நாம் வாழ்வது எம் அனைவரினதும் கடமையல்லவா? இப்புண்ணிய கைங்கரியத்தில் அனைவரும் இணைந்து பசுவைப் பாதுகாத்துச் சிவபுண்ணியப் பேற்றை அடைய உறுதி கொள்வோம்.



No comments:

Post a Comment