Saturday, January 29, 2011

இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா?

இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா? - 1

வாழும் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதில்லை. பிறப்பும் இறப்பும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒன்றாகவே விதிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையால் உண்டான படைப்பில் எதுவும் உயர்ந்ததும் இல்லை எதுவும் தாழ்ந்ததும் இல்லை. இவற்றில் உயர்வு தாழ்வு, விருப்பம், வெறுப்பு என்று தோன்றுவது அவரவர் மனக்கண் மாயையே அன்றி வேறில்லை.
ஆனால் பொதுவாக இந்து மத எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் நாத்திகர்களும் மத மாற்றுப் பேர்வழிகளும் ஒரு விஷயத்தில் ஒன்றாக ஒத்து ஊதுவார்கள். அதாவது இந்து மதத்தில் தான் ஜாதிகள் உள்ளது என்றும் இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கி கீழ் ஜாதி மேல் ஜாதி என்ற ஏற்றத்தாழ்வை உருவாக்கியது என்றும் கூறுவர். இதற்கு இவர்கள் உதாரணமாக கூறும் விஷயம் இந்து தர்மத்தில் கூறப்பட்டிருக்கும் ப்ராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற வர்ணங்களின் வகைகளைப் பற்றி. இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் வர்ணங்கள், ஜாதிகள் என்ற இரண்டிற்கும் வித்தியாசம் என்ன என்பது பற்றி இவர்கள் புரிந்து கொள்வதும் இல்லை. அது பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இந்துக்களை பிரித்தாள்வதற்கும் பிரிவினையை தூண்டி இந்தக்களிடம் உள்ள ஒற்றுமையை நிரந்தரமாக குலைப்பதற்கும் அரைகுறையாக எவற்றையெல்லாம் கூறி குழப்ப முடியுமோ அவற்றைக் கூறி இந்துக்களுக்குள்ளே பகைமையை மட்டுமே வளப்பார்கள்.இப்படிப்பட்டவர்களை நாம் புரிந்து கொள்ள, வர்ணங்கள் என்றால் என்ன? ஜாதிகள் உண்டானது எப்படி என்பதை பற்றிய ஒரு அலசலைப் பார்ப்போம்.வர்ணங்களும் ஜாதிகளும் ஒன்றா?
வர்ணங்கள் என்றால் பிரிவுகள் என்று பொருளுண்டு. வகைகள் என்றும் பொருள் கொள்ளலாம். கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்.
சாதுர்-வர்ண்யம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச:
"நான்கு வர்ணங்களான (பிரிவுகளான) ஸ்ருஷ்டியை நானே படைத்தேன். குணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே"
தஸ்ய-கர்தராமபி மாம் வித்த்யகர்தார-மவ்யயம்
"அவைகளை படைத்தவன் நானே எனினும் நான் அழிவற்றவன், செய்கையற்றவன் என்பதை அறிவாயாக."
என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர். இந்து தர்மத்தில் கடவுளே தான் ஜாதிகளைப் படைத்தான் என்று மக்களை ஏமாற்றி மூளைச் சலவை செய்து வருபவர்கள் பிடித்துக்கொள்ளும் கீதையின் வரிகளும் இவைகளே! அவ்வாறு அவதூறு கூறுபவர்கள் இந்தச் ஸ்லோகத்தின் முதல் வரியின் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைச் சொல்லாமல் விட்டு விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"நான்கு வகைகளை நான் தான் உண்டாக்கினேன் என்று கூறும் பகவான், அதைத் தொடர்ந்து "குணம் மற்றும் செயல்களின் அடிப்படையில்" என்று கூறுகிறாரே ஒழிய 'பிறப்பின் அடிப்படையில் இந்த வகைகளை உண்டாக்கினேன்' என்று கூறவில்லை. மேலும் இவற்றில் உயர்ந்த வர்ணம் எது தாழ்ந்த வர்ணம் எது என்றும் கூறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இங்கே வர்ணங்கள் என்று அழைக்கப்படுவதை க்ளாஸிஃபிகேஷன் (Classification) என்று கருத்தில் கொள்க. அதாவது various types of human society என்றே அர்தம் கொள்ள வேண்டும். இவ்வாறான வகைகள் குணங்களால் அறியப்பட்டு அது இந்த வகையைச் சேர்ந்தது என்று கருதிக் கொள்ளப்படுமே அன்றி பிறப்பால் பிரிக்கப்படுவதில்லை என்பது தெளிவு.
மனிதர்கள் தங்கள் குணம் மற்றும் செயல்களின் காரணமாக வகைப்படுத்தப் படுகிறான். இவ்வாறான வகையை தாமே உண்டாக்கியதாக ஸ்ரீ க்ருஷ்ணர் கூறினாலும் கூட இவை எந்த ஒரு சமூகத்திலும் காலத்தின் போக்கினாலும் சமூக்கக் கூட்டங்களுக்கிடையே ஏற்படும் சார்பு நிலையை சமப்படுத்திக் கொள்ளவும் தாமாகவே உண்டாக்கப்படுபவையே.
உதாரணமாக ஒரு தொழில் நிறுவனத்தில் சீராக தொழில் இயங்க வேண்டுமென்றால் அதில் பல அடுக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொது மேலாளர், மேற்பார்வையாளர், தொழிலாளர், கணக்கர் என்று பல்வேறு பிரிவுகள் உண்டாக்கப் படுகிறது. எல்லோருமே தொழிலாளியாக இருந்தால் கணக்கெழுதுவது யார்? எல்லோருமே கணக்கராக விரும்பினால் தொழிலுக்குப் பணம் போடுவது யார்? எல்லோருமே பணம் போட்டு உட்டார்ந்து விட்டால் மற்ற பணிகளை செய்வது யார்? ஆனால் இவை அனைத்துமே ஒரு அடுக்கு முறை உருவாக்கத்தினால் சீராக நடைபெறுகிறது. இது தவிர்க்க முடியாதது.
இந்த அடுக்கு முறைகளை வர்ணங்கள் என்று ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். கார் உதிரிபாகம் தயாரிக்கும் ஒரு தொழிளாலி சார்டர்ட் அக்கவுண்டட் படிப்பை படித்துத் தேரிவிட்டார் என்று கொள்வோம். அதே கம்பெனியில் அவருடைய திறமையின் அடிப்படையில் கணக்கர் பணி தரப்படலாம். ஒரு கணக்கர் மேலாளராகவும் திறமையை வெளிப்படுத்தினால் அவரே தனது திறமையால் பொது மேலாளராக உயரவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு பொது மேலாளர் செல்வந்தராக இருந்து நிறுவனத்திற்கு பணம் கொடுத்தால் அவர் பங்குதாரராக அதாவது முதலாளியாகவும் முடியும். ஒரு தொழிலாளி படித்தாலும் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் எந்த நிறுவனத்திலும் இல்லை. அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டால் அந்த நிறுவனத்திலிருக்கும் மனிதர்களின் கோளாறே அன்றி அது நிறுவனத்தின் கோளாறாக அறிய முடியாது. நிறுவனத்தின் கொள்கையிலும் தொழிலாளி கணக்கராகக் கூடாது என்று எழுதப்பட்டிருக்காது. ஆக எப்படி ஒரு தொழிலாளி தனது திறமையால் கணக்கராக அங்கீகரிக்கப்படுவாரோ அதுபோலவே ஒருவர் தாம் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையால் அந்தந்த வர்ணங்களாக வாழும் வகையினராக அறியப்படுகிறார் அன்றி பிறப்பால் இல்லை.
ஆக இந்து தர்மத்தின் ஜாதி ஏற்றத்தாழ்வு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே என்று நிரூபிக்க நினைப்பவர்கள் பகவத் கீதையையே ஆதாரமாகக் கொண்டாலும் பிறப்பால் இவன் இன்ன வகையைச் சேர்ந்தவன் என்று எங்குமே கூறப்படவில்லை. அதாவது பிறப்பின் அடிப்படையில் மனிதன் பிரிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
சரி அப்படியெனில் ப்ராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன், என்ற பிரிவுகள் எதைக் குறிக்கின்றன?
ப்ரம்மத்தை அறிந்தவன் அல்லது அறியும் முயற்சியில் அதற்கான சாதகங்களைச் செய்து வாழ்க்கை நடத்துபவன் ப்ராமணன் என்ற பிரிவாக அழைக்கப்பட்டனர். தர்மங்களை அனுசரித்து மக்களை காக்கும் பொறுப்பை ஏற்று சமூகத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்பவர்கள் க்ஷத்ரியன் என்ற பிரிவாக அழைக்கப்பட்டனர். சமூகத்திற்கு பயன்படும் விதமாக ஏதாவது தொழிலைச் செய்து அதன் மூலம் தானும் பலன் பெற்று சமூகத்திற்கும் நன்மை அளிக்கும் விதமாக வாழ்க்கை நடத்துபவர்கள் வைசியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மூன்று பிரிவினருக்கும் உதவும் வகையிலான பணிகளை செய்து அதனால் தானும் பலன் பெற்று சமூகத்திற்கும் பயனாக வாழும் வகையினர் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு மனிதர்கள் தங்கள் குணத்தின் அடிப்படையில் எந்த மாதிரியான வாழ்வின் மீது உணர்வுப்பூர்வமாக லயிக்கிறார்களோ அத்தகைய வாழ்வை மேற்கொள்ளவார்கள். அவ்வாறு மேற்கொள்ளும் வாழ்வின் அடிப்படையிலேயே அவர்கள் எத்தகைய வகையின் மனிதர்கள் என்று பிரிக்கப்பட்டார்கள். பிறப்பால் அல்ல.
உதாரணமாக இறைசிந்தனையிலும் ப்ரம்மத்தை அறிவதற்கான வாழ்வை மேற்கொள்ளும் ப்ராமண வகையைச் சேர்ந்த தம்பதியருக்குப் பிறந்த ஒரு ஆண் மிகுந்த போர்குணம் கொண்டவனாகவும் மக்களை வழிநடத்தும் தலைமை குணம் கொண்டவனாகவும் தர்மத்தை காக்கும் பொருட்டு போரிடத் துணிந்தவனாகவும் இருப்பானேயானால் அவன் க்ஷத்ரியனாக கருதப்படுவான். அவன் ப்ராமண வகையிலான வாழ்வைத் துறந்து க்ஷத்ரியர்களின் தர்மத்தை கடைபிடித்து அவர்களின் வாழும் வழியைப் பின்பற்றலாம். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை. ப்ராமண தந்தைக்குப் பிறந்ததாலேயே ராவணன் ப்ராமண வாழ்க்கையை மேற்கொள்ள வில்லை. மக்களை தலைமை தாங்கி நடத்திச் செல்லும், நாடாளும், போர்புரியும் க்ஷத்ரியனாக வாழ்ந்தான். பழிவாங்கும் குணத்தாலும் கண்ணை மறைத்த கோபத்தாலும் சீதையை கடத்திச் சென்றதைத் தவிர்த்துப் பார்த்தால் ராவணன் தனது குடிமக்களை துன்புறுத்தாத தர்மங்களை அனுசரித்து ஆட்சி புரிந்த க்ஷத்ரியனாக அறியப்படுகிறான்.ஒரு ப்ராமணருக்குப் பிறந்த ஆண்மகனுக்கு தங்கத்தை உருக்கி நகை செய்யும் கலையில் அதீத விருப்பம் கொண்டு அவன் நகை வியாபாரி ஆக நினைத்தால் வியாபார குணம் கொண்ட அவன் வைசியன் என்று அழைக்கப்படுவான். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை.
ஒரு ப்ராமணருக்கு பிறந்த ஆண்மகனுக்கு வேதங்களைக் கற்கவும் புரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. ஆனால் சமையல் கலையில் ஆர்வம் மிகுந்து அதையே தொழிலாகக் கொண்டால் அவன் சூத்திரன் என்று கருதப்படுவான். சமையலும் தொழில் தானே, அவன் வைசியன் என்றழைக்கப் படலாமே என்று தோன்றலாம். நாம் ப்ரொடக்ஷன் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ் என்று பிரித்துக் கொள்கிறோம் அல்லவா. ப்ரொடக்ஷன் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்தவர்கள் வைசியர்கள் என்றும் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்தவர்கள் சூத்திரர்கள் என்றழைப்பட்டார்கள் என்று கொள்ளலாம். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை.
இவ்வாறு குணத்தால் வகைப்படுத்தப்பட்டவர்களைப் பற்றிய பல உதாரணங்கள் புராணக் கதைகளில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
விஸ்வாமித்திரர் கேள்விப்பட்டிருப்போம். அவர் பிறப்பால் க்ஷத்ரியன். நாடாண்ட அரசன். வஷிஷ்டரிடம் இருந்த காமதேனு பசுவை தன் நாட்டு மக்களுக்காக யாசகம்கேட்டு அதை அவர் தர மறுத்தார் என்ற காரணத்தால் தானும் அந்தணர்களைப் போல தவம் இருந்து அந்தத் தவ வலிமையால் வஷிஷ்டரை வெல்வேன், காமதேனு பசுவொன்றை பெறுவேன் என்று சபதம் மேற்கொண்டு நாடு துறந்து தவமிருந்து முனிவரானார். ப்ராமணர்களுக்கு உபணயனத்தின் போது ப்ரம்மோபதேசம் என்று போதிக்கப்படும் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு உபதேசித்தார். தவ வலிமையால் இறைவனது அருளைப் பெற்று வஷிஷ்டர் வாயாலேயே ப்ரம்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றார் என்பது நாம் அறிந்ததே. பிறப்பால் க்ஷத்ரியர் ஆனாலும் தான் மேற்கொண்ட தவ வாழ்க்கையால் ப்ராமணராகவே ரிஷிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஆக பிறப்பால் இவரது வாழ்க்கை இத்தகையதாகத்தான் இருக்கவேண்டும் என்பது நிர்பந்திக்கப் படவில்லை.
மற்றொரு புராணக் கதை, ஒரு பெரிய மகரிஷி இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். ஒரு நாள் ஒரு சிறுவன் அவரிடம் வந்து தன்னையும் மாணவனாக மகரிஷி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். புதிதாக வந்த சிறுவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனுடைய தந்தையின் பெயர் என்னவென்று விசாரித்தார் மகரிஷி. பையனோ 'தெரியாது' என்றான்.
சரி தாயார் பெயர் என்ன என்று வினவினார் மகரிஷி. "ஜாபாலிகை" என்றான். உன் தாயாரிடம் சென்று உன் தந்தையின் பெயரைக் கேட்டு அறிந்து வா என்றார் மகரிஷி.
அச்சிறுவனும் அதே போல தன் தாயாரான ஜாபாலிகையிடம் சென்று தனது 'தந்தை யார்?' என்ன குலம்? என்று விசாரித்தான். ஜாபாலிகை திகைப்படைந்தாள். பிறகு அவள் கூறினாள் 'நான் ஓரிடத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எனக்குப் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் நீ யாருடைய மகனாக இருக்ககூடும் என்பது எனக்குத் தெரியாது' என்றாள். சற்று வினோதமாக தோன்றினாலும் சிறுவன் இதை கேட்டுக்கொண்டான்.
ரிஷியிடம் சென்ற சிறுவன் ஜாபாலிகை கூறியவற்றை அப்படியே தெரிவித்தான். 'பல ஆண்களில் நான் யாருக்குப் பிறந்தவன் என்பது என் தாயாருக்கே தெரியாது' என்று சிறுவன் கூறியதைக் கேட்டு மாணவர்கள் சிரித்தனர். ஆனால் அந்த ரிஷி "எவ்வளவு பயங்கரமான உண்மையை சிறிதும் அச்சமில்லாமல் பேசியிருக்கிறாய்? உண்மையைப் பேசுவது; உண்மையைத் தவிர வேறு எதையுமே பேசாமல் இருப்பது இவை ஒரு ப்ராமணனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள். இவைகள் உன்னிடம் இயல்பாகவே குடி கொண்டிருக்கின்றன. ஆகையால் நீ ஒரு உண்மையான ப்ராமணன். உன்னை என் சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறி ஏற்றுக்கொண்டார். ஆக "சத்தியத்தைத் தயங்காமல் பேசிய அந்தச் சிறுவன் சத்தியகாம ஜாபாலி என்ற பெயருடன் பிற்காலத்தில் மிகச்சிறந்த அந்தணனாக அங்கீகரிக்கப்பட்டார்.
இவ்வாறு புராணத்திலும், வேதங்களிலும், கீதையிலும் பிறப்பு எதுவாகிலும் ஒருவரது குணமும் செயல்களும் அவர்களது வகையை நிர்ணயிக்கிறது என்பது தெளிவாகிறது.

இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா? - 2
முதல்பகுதி:
சாதுர்-வர்ண்யம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச:
"நான்கு வர்ணங்களான (பிரிவுகளான) ஸ்ருஷ்டியை நானே படைத்தேன். குணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே"
தஸ்ய-கர்தராமபி மாம் வித்த்யகர்தார-மவ்யயம்
"அவைகளை படைத்தவன் நானே எனினும் நான் அழிவற்றவன், செய்கையற்றவன் என்பதை அறிவாயாக."
- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
புராணத்திலும், வேதங்களிலும், கீதையிலும் பிறப்பு எதுவாகிலும் ஒருவரது குணமும் செயல்களுமே அவர்களது வகையை
நிர்ணயிக்கிறது என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
சரி இங்கே ஜாதி எங்கிருந்து வந்தது?
பொதுவாக மனிதர்கள் எதையுமே தனதாக்கிக் கொள்ளும் குணம் கொண்டவன். மனிதன் மட்டுமல்ல ஏறக்குறைய அனைத்து விலங்குகளுமே தனது குட்டி, தனது இருப்பிடம், தனது வாழ்வெல்லை என தனக்கு என்று எதையும் பகுத்து வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவை. இதனால் பொதுவுடைமையாக எந்த ஒரு கருத்தையும் நீண்ட நாளைக்கு வைத்துக் கொள்ள முடியாது.எல்லோருக்கும் பொது என்ற கம்யூனிஸமும் உடைந்து தூளாகிப்போவதும் மனிதர்களின் இந்தப்போக்கினால் தான் என்பது உடைந்து போன கம்யூனிச நாடுகளே சாட்சி!உதாரணமாக அரசு ஆட்சி என்பது அதிகாரக்கையிருப்பிற்கும், சுக போகத்தை அனுபவிப்பதற்கும் அல்ல. சுயநலமில்லாத சேவையாக மக்களுக்கான தொண்டாகவே ஆட்சியை நடத்த வேண்டும். ஆனால் இந்த பரந்த பொதுவுடைமை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆட்சி அமைப்பு அதை அனுபவித்தவர்களால் தமதாக்கப்பட்டு அதிகாரமும் அரசின் கஜானாவும் ஆள்பவனுக்குச் சொந்தம் என்று மாறிவிடுகிறது. ஆள்பவன் தன்னை ஆண்டவன் என்றே அழைத்துக் கொள்ளத் துவங்குகிறான். அவனது சந்ததிகளுக்கும் அத்தகைய சுகபோகங்களை கொடுக்கவும் அவர்கள் அதை விட்டுவிடக்கூடாது எனவும் விரும்புகிறான். இவ்வாறு மனிதர்கள் எதையும் தமதாக்கிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் பொதுவான எதையும் தனதாக்கிக் கொண்டு காலப்போக்கில் அதையே தனது அடையாளமாகக் கொண்டு விடுகிறான். அடுத்த சந்ததியினருக்கும் அதையே உரிமையாக்குகிறான்.கீதையில் பிறப்பு எதுவாகிலும் ஒருவணது குணத்தையும் செயல்களையும் கொண்டே மனிதர்கள் இன்ன வகையினர் என பிரிக்கப்படுகிறான். ஆனால் நாளடைவில் ஒருவன் தான் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்பதே தனது அடையாளமாகக் கொள்கிறான் என வைத்துக்கொள்வோம், அவனுக்கு குழு மனப்பான்மை உருவாகிறது. ஒரே வகையினர் ஒரு குழுவாக புழங்கத் துவங்குகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு வர்ணத்தவர்களும் குழுவினர்கள் ஆயினர். பின்னர் குழுவினர்களுக்குள் பிரிவுகள் அவர்களுக்குள் உட்பிரிவுகள் என்று உருவாகிறது. அவைகளே இன்றைக்கு ஜாதிகள் என அடையாளம் காணப்படுகின்றது. குணங்களாக வகைப்படுத்தப்பட்டவை காலப்போக்கில் ஜாதிகள் என்ற பெயருடன் குழுக்களானது பிரபஞ்ச இயக்கவிய லின் ஒரு பன்பேயன்றி அது தனிப்பட்ட கடவுளால் அல்லது மதத்தினரால் பிரிக்கப்படுவதில்லை. அவைகள் தானே உருவாகின்றனவே அன்றி உருவாக்கப்படுபவை அல்ல.
உதாரணமாக நிறமற்ற கடல் நீர் பரவி ஓடி பல இடங்களில் சேரும் போது அவை நிறைந்திருக்கும் மண்ணுக்கேற்ற நிறத்தை பெறுகிறது. நீல நிறமாக, செந்நிறமாக, பச்சை நிறமாக கடல் தோற்றமளிக்கும். தாம் கொண்ட மண்ணின் நிறத்தை தாங்கி நிற்கும் நீரை நீல ஜாதி நீர், சிவப்பு ஜாதி, நீர், பச்சை ஜாதி நீர் என்று அழைத்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் மனிதர்கள் வகைகளாகி வகைகள் குழுக்களாகி, குழுக்கள் ஜாதிகளாகி இருக்கின்றன. எப்படி பரந்து விரியும் கடல் நீர் வெவ்வேறு நிறத்தை பெறுவதை யாராலும் தடுக்க முடியாதோ அதேபோலவே மனிதர்களுக்குள் குழு உருவாவதையும் தவிர்க்க முடியாது. அவைகள் ஜாதிகளாவதும் காலத்தால் நிகழ்வதே அன்றி தனி மனிதர்களாலோ அல்லது குழுக்களாலோ அல்ல! சரி அவை நிகழ்வதெப்படி?
உதாரணமாக குணத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை நல்லவன் , கெட்டவன் என்று பிரித்துக் கூறுகிறோம். இவையெல்லாம் நல்ல குணங்கள்,இவையெல்லாம் கெட்ட குணங்கள் என்று பிரித்து நல்ல குணம் கொண்டவர்களை நல்லவர்கள் என்றும் கெட்ட குணம் கொண்டவர்களை கெட்டவர்கள் என்றும் கூறுவதில்லையா! அப்படி ஒரு வகைப்படுத்தல் தான் வர்ணங்கள். பின்னாளில் குணங்களின் அடிப்படையில் நல்லவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அதையே தங்கள் குழு அடையாளமாகக் கொள்கிறார்கள். தங்களை
நல்லவன் ஜாதி என்றும் கெட்டவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தங்களை கெட்டவன் ஜாதி என்றும் அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிறந்தவர்கள் அந்த ஜாதிக்காரர்கள் என்றும் அழைத்து அதையே வழக்கமாக்கிக் கொண்டால் அது ஜாதியாகி விடுகிறது. பிறகு அதற்குள்ளேயே பிரிவுகளும் வந்து ஏற்றத்தாழ்வுகளும் வந்துவிடுகிறது.
நல்லவன் ஜாதிக்காரன் அதே ஜாதியில் திருமணம் செய்வார்கள். கெட்டவன் ஜாதிக்காரனும் அவ்வாறே!
உதாரனமாக டாக்டர் கம்யூனிட்டி, வக்கீல் கம்யூனிட்டி, சார்டர்ட் அக்கவுன்டன்ட் கம்யூனிட்டி, தொழிலாளர் கம்யூனிட்டி
என்று குழுக்கள் உருவாகிறது. டாக்டர் குழுவைச் சேர்ந்தவர்கள் டாக்டரையே மனமுடிக்க விரும்புவார்கள், வக்கீல் வக்கீலையும்
சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் அதே குழுவிலும் தேடுவார்களே அதுபோல.
இவைகளில் ஏற்றத்தாவு எப்படி உண்டாகிறது. வக்கீல் குழுவிற்கும், போலீஸ் குழுவிற்கும் ஏன் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இவர்களிடம் இந்த ஏற்றத்தாழ்வு இருந்ததில்லையே? காலப்போக்கில் குழுக்களுக்கிடையே
உண்டாகும் முரண்பாடுகள் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகின்றனவே அன்றி இவற்றிர்கு தனிப்பட்டவர்கள் பொறுப்பாக முடியாது.
முரன்பட்ட எந்தக் குழுவிற்கும் ஏதாவது அடிப்படை ஞாயம் இருக்கலாம். ஆனால் அவைகள் உருவாவதும் களையப்படுவதும்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
அப்படித்தான் மக்களிடம் ஜாதிகள் உருவாகின. நல்லவன் ஜாதியில் பிறந்தவன் கெட்ட குணங்களோடும், கெட்டவன் ஜாதியில் பிறந்தவன்
நல்ல குணங்களோடும் இருக்க முடியும்! ஏனெனில் குணங்களின் வகைப் பெயர் தங்கி விட்டதே தவிறகுணத்தால்மனிதன்வகைப்படுத்தப்படவில்லை. அவ்வாறே அடிப்படையில் ஜாதிகள் கிடையாது. பின்னால் குழுமயமாக்கப்பட்டது.
ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் வேதத்தில் ஜாதி சொல்லியிருக்கிறது என்று இந்து தர்மத்தையே பழிக்கிறார்கள். ஞான சூனியத்தின் அடையாளம்.
சரி, இவை எல்லாவற்றிர்கும் மேலாக ஜாதிகளை உண்டாக்கியதே பிராமணன் தான். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சட்டத்தை வகுத்தவனும் பிராமணனே என்றும் எந்த ஆதாரமும் இல்லாமல் வாழும் மக்களுக்கிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அதை எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் குறைந்த பட்சம் இந்து தர்மத்தை விளங்கிக்கொள்ளும் புத்தகங்களைக் கூட புரட்டிப் பார்க்காமல் அவற்றை அப்படியே நம்பிவிடும் ஆட்டு மந்தைக்கூட்டங்களும் இருக்கின்றன.
தர்மத்தின் படி பார்த்தாலுமே ப்ராமணனுக்கு அரசாளும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
அரசை ஆள்பவனே சட்டத்தை இயற்றும் அதிகாரம் கொண்டவனாகிறான். அதிகாரம் கையில் இல்லாத ஒருவன் சட்டத்தை இயற்றுவது சாத்தியமில்லாத போது பிராமணன் ஏற்றத்தாழ்வுக்கான சட்டத்தை எப்படி இயற்றி இருக்க முடியும்?
ஒரே குற்றத்தைப் புரிந்த நால்வரில் ப்ராமணனே கடும் தண்டனையைப் பெற்றான் என்ற இதிகாச நிகழ்வைப் பார்ப்போம்!
மகாபாரதத்தில் அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பாண்டவர்களை திருதிராஷ்டிரன் வேண்டா வெறுப்பாக நாட்டிற்குள் மீண்டும் அழைத்து வருகிறான். நாட்டின் இளவரசர் பட்டத்தை துரியோதனனுக்குக் கொடுப்பதா இல்லை யுதிஷ்டிரனுக்குக் கொடுப்பதா?
யாருக்குக் கொடுத்தாலும் எனக்குத் தானே தலைவலி என்று தலையில் கைவைத்து கருணாநிதி போல அமர்ந்திருக்கிறான்.
அந்த நேரம் அரசவையில் ஒரு வழக்கு வருகிறது.
ஒரு பிராமனன், ஒரு சத்ரியன், ஒரு வைசியன், ஒரு சூத்திரன் ஆகியோர் சேர்ந்து ஒருவனை கொன்று விடுகிறார்கள். மன்னர் இவ்வழக்கை விசார்க்கிறார். இந்த வழக்கிற்கான தீர்ப்பை
தனது மகன் துரியோதனன் கூறுவான் என்று கூறிவிடுகிறார். காரணம் துரியோதனன் சிறந்த நீதிமான் எனவே அவனுக்கு இளவரசர் பட்டத்தை வழங்கலாம் என்று திட்டமிட்டார்.
துரியோதனன் எழுந்து "ஒருவனைக் கருணை இல்லாமல் கொலை செய்த இவர்கள் நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்" என்றான்.ஆனால் குலகுருவாக இருந்த கிருபாச்சாரியார், யிதிஷ்டிரனுக்கும் வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம் என எடுத்துக்கூற திருதிராஷ்டிரன் யுதிஷ்டிரனை இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க அழைக்கிறார்.யுதிஷ்டிரன் அதற்கு வழங்கும் தீர்ப்பு என்ன தெரியுமா? சூத்திரனுக்கு நான்கு வருடம் கடுங்காவல் தண்டனையும், வைசியனுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனையும், சத்ரியனுக்கு பதினாறு
வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறான். அதேநேரம் பிராமனருக்கு மரண தண்டனை
விதிக்கிறான். காரணம் சூத்திரன் ஞாய தர்மங்களை அறியமாட்டான், அதனால் அவனுக்கு குறைந்த தண்டனையும், வைசியன் கொஞ்சம் விஷயஞானம் உள்ளவன் அதனால்
அவனுக்கு 8 வருடமும், நாட்டை காக்க வேண்டிய பொறுப்புள்ள க்ஷத்ரியன் அதற்கு எதிர்மாறாக நடந்து கொண்டதால் அவன் செய்த தவறுக்கு இரு மடங்கு தண்டனையும்,
பிராமனன் ஞாய , தர்மம் தெரிந்தும், பாவ, புண்ணியங்கள் குறித்து உணர்ந்திருந்தும் குற்றம் புரிந்ததால்
அவனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறேன்" என்றான்.
'யுதிஷ்டிரனின் தீர்ப்பு தர்மத்தின் வழியினதே' என்றுகுல குரு கிருபாச்சாரியார் ஆமோதிக்கிறார். சிறந்த நீதிமானாக அவையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுதிஷ்டிரனே
அந்நாட்டின் இளவரசராக அறிவிக்கப்படுகிறான்.
இங்கே நாம் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கொடுக்கப்பட்ட தீர்ப்பு கூட ஜாதியின் அடிப்படையில் இல்லை. ஒருவனது வாழும் வகைக்கு எவ்வளவு விரோதமாக இருந்திருக்கிறான்
என்பதை மனதில் வைத்தே அவனுக்கு தண்டனையின் அளவு நிர்ணயிக்கப் படுகிறது. பிராமணன் என்பதால் பச்சாதாபம் காட்டப்படவில்லை. ப்ராமணன் என்பதால் தேவையற்ற மரியாதை கொடுக்கப்படவில்லை.
ஒரு வேளை பிராமணன் தண்டனைச் சட்டத்தை நிர்ணயித்திருந்தால் ஞாய, தர்ம, பாவ, புண்ணியங்கள் அனைத்தும் அறிந்தவன் நான் என்பதால் நான் செய்வது எதுவும் குற்றமாகாது என்று
சட்டம் இயற்றி இருக்கலாமே! ஆனால் கடுமையான தண்டனையை அவன் பெறுகிறான். க்ஷத்ரியனால் விதிக்கப்பட்ட சட்டத்திற்கு கட்டுப்பட்டு தண்டனையும் ஏற்கிறான்.
எனவே ஜாதீய ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும், வாழும் வகைக்கான சட்டங்களையும் இயற்றியவன் ப்ராமணன் இல்லை என்பது இதிகாச ஆதாரங்களில் இருந்தே புலனாகிறது.
எனவே சமூகத்தின் ஜாதிகள் என்ற குழு மனப்பான்மை வாழும் மக்களுக்குள் காலப்போக்கில் தானாகவே உருவானதாகவே இருக்குமேயன்றி தனி ஒரு மனிதர்களால் ஒரே கடவுளால் உருவாக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்!
உலக நாடுகள் முழுவதிலும் ஒரே மதம் ஒரே கடவுள் என்றிருக்கும் மதத்தினருக்குள்ளும் ஜாதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதே இதற்கு கண்கூடான சாட்சி!
ஆக இந்து தர்மத்தில் ஜாதிகள் போதிக்கப்படுவதில்லை, இந்துக்கடவுளரும் ஜாதிகளை உருவாக்கவில்லை என்பதே "நிஜம்"!
உண்மையான பகுத்தறிவு கொண்டவர்கள் இவற்றைத் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்பதே "நிஜம்"!
நீங்கள் உண்மையான பகுத்தறிவு கொண்டவரா? அப்படியெனில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் .....
"இந்து தர்மம் என்பது மனோவியலும், அறிவியலும், பகுத்தறிவும் ஆகும்"







No comments:

Post a Comment