Monday, June 20, 2011

அட்சய திருதியை தினத்தன்று பரசுராமர் வணங்கினால் அன்பு வளரும்

அட்சய திருதியை தினத்தன்று தான் பரசுராமர் பிறந்தார். பரசுராமர் பெற்றோர் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். அதை உணர்த்தும் ஒரு புராண சம்பவம். நான்கு வேதங்களையும் கற்றவர் ஜமத்க்னி முனிவர். அவரது மனைவி ரேணுகா. கற்புக்கரசி. இவள் தினமும் அதிகாலை எழுந்து கங்கையில் நீராடி மண் எடுத்து பானை செய்வாள்.

 அவள் கைபட்டதும் பானை உருவாகி விடும். அதில் தண்ணீர் எடுத்து வந்து சமைப்பாள். ஒரு நாள் அதிகாலை எழுந்த அவள் நேரமாகி விட்டதே என்று வானத்தைப் பார்த்தாள். அப்போது வானில் சென்று கொண்டிருந்த சித்தரதன் என்ற கந்தர்வனை பார்த்து அவன் அழகில் சற்று தடுமாறி போனாள். பதறிய படியே கங்கைக்கு சென்று குளித்து மண் எடுத்தாள்.

ஆனால் பானை உருவாகவில்லை. அதே நேரம் கண் விழித்த ஜமதக்னி முனிவர் நடந்ததை எல்லாம் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். மனம் குமுறிய அவர் தன் 5 மகன்களையும் அழைத்து தாய் தலையை வெட்டி வருமாறு உத்தரவிட்டார். முதல் 4 மகன்களும் மறுத்து விட கடைசி மகன் பரசுராமர் கோடாரியுடன் சென்றார்.

 தாய் தலையை வெட்டி எறிந்தார். இதை பார்த்த ஜமதக்னி முனிவர் மகிழ்ச்சி அடைந்து, "பரசுராமா, உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன்'' என்றார். உடனே பரசு ராமர் "என் தாயை மீண்டும் உயிர்ப் பித்து தாருங்கள், இன்று நடந்த எதுவும் அவர் மனதில் வரக் கூடாது'' என்றார்.

பரசுராமரின் தாய் அன்பு கண்டு மெய்சிலிர்த்த ஜமதக்னி முனிவர் அப்படியே வரம் வழங்கி ரேணுகாவுக்கு உயிர் கொடுத்தார். இப்படி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தாய்ப் பாசத்துடன் வாழ்ந்த பரசுராமர் அட்சய திருதியை அன்று பிறந்தவர் என்பதால் அன்று அவரை வணங்கினால் நிச்சயம் அன்பு பெருகும்.

No comments:

Post a Comment