Thursday, October 31, 2013

குறையில்லாத மனிதன் உலகிலேயே கிடையாதப்பா

ஒரு மாற்றுத் திறனாளி; காது கேளாதவர், கடவுளின் மேல் கோபம் கொண்டார்.
திருக்கோயிலுக்குச் சென்று முறையிட்டார்.
அங்கிருந்து வெளியே வரும்போது, ஒரு கை இழந்த மனிதன், தன்னாலான பூக்களை நந்தவன மரத்தில் இருந்து பறிக்க முயல்வதைக் கண்டார்; கேட்டார்.
""எனக்கு காது கேட்கவில்லை; உங்களுக்கு ஒரு கை இல்லை. இப்படி குறைபாட்டைக் கொடுத்த ஆண்டவனுக்கேன் வஞ்சம்...?''
ஒரு கை மனிதர் சொன்னார்.
""உங்களால் எழுத முடியும்; பூ பறிக்கலாம். என்னால் உங்கள் குரலைக் கேட்க முடியும். அதோ.. அந்த மனிதருக்கு பார்வையே இல்லை. மற்றொருவருக்கு ஒரு கால் இல்லை. ஆக, நமக்கும் கீழே பார்க்கையில் நாம் பரவாயில்லை அல்லவா...? ஆக, கடவுளுக்கு நாம் நன்றியே சொல்ல வேண்டும்..''
ஓசையற்றவர் கேட்டார்.
""நன்றாய் இருப்பவர் கோடி பேர் இருக்க, நன்றாக இல்லாதவர்களை ஏன் ஒப்பிட வேண்டும். நாமும் நல்லபடி இருந்திருக்கலாமே...?''
ஒரு கை மனிதர் சிரித்தார்.
""இக்கோயில் மடப்பள்ளியின் சர்க்கரைப் பொங்கல் வெகு பிரசித்தம். அதை தயாரிப்பவர்... எக்குறையுமற்றவர். ஆனால், அவருக்கு சர்க்கரைநோய்; ஒரு துளி இனிப்பு கூட உண்ண முடியாது. நாமோ எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.
உடல்குறை இல்லார்க்கு மனக்குறையிருக்கும். ஆரோக்கியக் குறையிருக்கும். ஆக, குறையில்லாத மனிதன் உலகிலேயே கிடையாதப்பா....'' ஓசையற்றவருக்கு தெளிந்தது

No comments:

Post a Comment