Thursday, October 31, 2013

உலகிலுள்ள நாடுகளிலெல்லாம்ஒரு நாடு சிறந்து விளங்குவது எதனால் ?

உலகிலுள்ள நாடுகளிலெல்லாம்ஒரு நாடு சிறந்து விளங்குவது எதனால் ? என்று கேட்டால், ஒரு சிலர் சொல்வார்கள் நீர் வளம், நில வளம், பொருள் வளம் ஆகிய வளங்கள் எந்த நாட்டில் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடே சிறந்த நாடு என்பார்கள். வேறு சிலர் சொல்வார்கள் பொருள் வளமும் மற்ற வளமும் இருந்து பிரயோஜனமில்லை, நல்ல ஆட்சி செய்கிற அரசு அமைந்தால் மட்டுமே ஒரு தேசம் சிறந்த நாடாகத் திகழும் என்பார்கள். ஆனால், இவையெல்லாம் ஒரு நாட்டுக்கு சிறப்பையும், பாதுகாப்பையும் தந்து விடுமா ? வானம் பொய்த்து விட்டால், நீர்வளம் குன்றி, நிலம் வறண்டு, பொருள் வளம் சிதைந்து போகும். நம்மை விட பலம் பொருந்தியவன் வந்தால் நம் படைகளைக் கூண்டோடு அழித்து நம் தேசத்தைபடிமைப்படுத்தி விடுவான்.
ஒரு தேசம் சிறப்புடன் திகழ்வதற்கு அரசு மட்டுமே காரணமாகாது. அஞ்சி, அஞ்சி வாழ்வது வாழ்வாகாது. அடக்கம், பணிவு, பெறுமை, அன்பு, அறிவு, ஊக்கம், உழைப்பு, ஒழுக்கம், நேர்மை ஆகிய அறப்பண்புகளைப் பெற்று, அவற்றைத் தாமாகவே வாழ்வில் கடைபிடித்து வாழ்கின்ற மக்கள் பரவலாக வாழ்கிற தேசமே சிறந்த தேசமாக விளங்கும். மற்றவர் அடக்க அடங்குவது சான்றாண்மை ஆகாது. தம்மைத் தாமே அடக்கிக் கொண்டு, கட்டுப்படுத்திக் கொண்டு நெறி தவறாமல் வாழ்வதே சான்றான்மையாகும். அறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி, உறுவது உலகு உவப்பச் செய்வதே சான்றோர்களின் சால்பு நெறி. அப்படிப்பட்ட நெறியோடு வாழும் சான்றோர்களைப் பெற்ற தேசமே சிறந்த தேசமாகும். மற்ற எந்த தேசத்திலும் இல்லாத ஒரு நம்பிக்கை நம் பாரத தேசத்தில் உண்டு. ஒரு மனிதனின் வாழ்வு என்பது இந்த உலக வாழவோடு முடிந்து விடுவதில்லை. அது மேலும் இரு வாழ்வுகளை உள்ளடக்கியதாகும் என்பதே அந்த நம்பிக்கை. உலக வாழ்வு, மேலுலக வாழ்வு, வீடு பேறு வாழ்வு என்று மூன்று நிலைகளாகச் சொல்லப்பட்டுள்ளது. சான்றாண்மை நெறிகளையும், ஆன்மிக நெறிகளையும் கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே மற்ற வாழ்க்கை நிலைகளை அடைய முடியும். அல்லாதவர் மீண்டும் மீண்டும் இந்த உலகில் பல பிறவிகள் எடுத்து துன்பமடைவார்கள்என்ற பயம் மக்களுக்கு உண்டு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
என்கிறார் வள்ளுவர். இந்த உலக வாழ்வு அல்லாது மற்ற இரண்டு வாழ்வுகளில் மேலுலக வாழ்வை ஒருவன் பெற விரும்பானால், அவன் சிறந்த ஒழுக்கத்தைக் கடை பிடித்து வாழ வேண்டும் என்கிறார்.
வானுக வாழ்வு எனும் வானவர் உலக வாழ்வையும் தாண்டியது வீடு பேறு உலகு எனும் முக்தி வாழ்வு. நான் எனும் செருக்கறுத்தவர்வானுலக வாழ்விற்கும் மேலான வீடுபேறு வாழ்வாகிய மோட்ச உலகை அடைவார்கள்.
யான்என தென்னும் செருக்கறுப்பான்வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
அப்படியானால் மோட்ச உலக வாழ்வு என்றால் என்ன ? சிந்தையாலும், மொழியாலும், விவரிக்க முடியாத ஆனந்த நிலை அது. சுய அனுபவத்தால் மட்டுமே ஒருவன் பெறக் கூடிய அரிய நிலை. அந்த நிலையை அடைந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. இத்தகைய வாழ்வைப் பெற முனைந்தவர்களையேமுனிவர்கள், துறவிகள், யோகிகள், ஞானிகள் என்றெல்லாம் அவர்கள் முயற்சியின் படித்தரங்களுக்கு ஏற்ப அழைக்கிறோம்.
ஞானிகள் எப்போதும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். பூமிக்குள் புதைந்து கொண்டு பெரிய மரத்தையே நிலை நிறுத்தும் ஆணிவேர்களாக விளங்குபவர்களே ஞானிகள். அது போலவே ஞானிகளும் தங்களை மறைத்துக் கொண்டு சொல்லாமல் சொல்லி மனித சமுதாயத்தை வழிநடத்துவார்கள். அத்தகைய ஞானிகள் எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் தோன்றுவதில்லை. சில தேசங்களுக்கே அந்த நற்பேறு வாய்த்திருக்கிறது. அத்தகைய நாட்டினையே புண்ணிய பூமி என்றும், ஞான பூமி என்றும் சொல்கிறோம்.
அத்தகைய ஞானிகளை அதிகம் பெற்றது நம் பாரதமே அன்றி வேறு தேசமில்லை. எனவேதான் சுவாமி விவேகானந்தர் ''நமது பாரத தேசம், சமய பூமி. ஆன்மிகத்தில் பெரியவர்கள் தோன்றிய பூமி. தத்துவ பூமி. துறவுக்கு பெரிதும் மதிப்பளிக்கும் பூமி. மிகப் புராதான காலம் முதல் இன்றளவும் மனித வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தை உபதேசித்து வரும் ஒரே பூமி நமது பாரத பூமி என்கிறார். அப்படிப்பட்ட ஞான பூமியில் பிறந்த நாம், நம் தேசம் மட்டுமல்ல இந்த உலகமே நன்மை அடையும் பொருட்டு நம் சான்றோர்களும், ஆன்றோர்களும் காட்டிய இலட்சியப்பாதையில் நம் வாழ்வை நெறி முறையோடு அமைத்துக் கொண்டு வாழ்ந்து மேன்மை அடைவோமாக

No comments:

Post a Comment