Friday, June 20, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 31

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 31

ஊர்ப்பாசம் யாருக்குத்தான் இல்லை? பிறந்த ஊரின் பெயரைச் சொன்னாலே மகிழ்ந்து போகிறவர்கள்தானே நாம்? வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ பிறந்த ஊர் மண்ணில் கால் வைத்ததும், ஒரு கணம் நம் உடம்பு சிலிர்ப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம் தானே!

'எங்க ஊரு மாதிரி வருமா? எங்க ஊரு தண்ணியோட சுவையும், நதியோட அழகும் காணக் கிடைக்காதது’ என்று ஊர்ப் பெருமை பேசுகிறவர்கள் அதிகம் உலவுகிற பூமி இது!

ஊர்க்காரர்கள் எவரையேனும் எங்கேனும் பார்த்தால், 'ஏங்க... நம்மூர்ல மழை உண்டுங்களா?' என்று விசாரிப்போம். 'காடு கண்மாயெல்லாம் நிறைஞ்சிருக்கா?' என்று அக்கறையுடன் கேள்வி கேட்போம். அப்படிக் கேட்கிறபோதே நம் முகமும் மனமும் பிரகாசமாகிவிடும்!

ஊர்ப்பாசம் என்பது நமக்கு மட்டும்தானா? கண்ணனுக்கும் உண்டு. பிறந்தவுடனேயே கோகுலத்துக்குச் சென்றுவிட்ட கண்ண பரமாத்மா, தன் பத்தாவது வயதில் மீண்டும் மதுராவுக்கு வந்தார். அக்ரூரர்தான் ஸ்ரீகண்ணனை தேரில் அழைத்து வந்தார். மதுராவை நெருங்கியதும் தேரை நிறுத்திய அக்ரூரர், ''கண்ணா... உன் ஊர் வந்துவிட்டது. நீ பிறந்த பூமியின் மீது உன் திருவடிகள் படட்டும். நடந்து வாயேன், கண்ணா!'' என்றார். மதுரா நகரில் காலடி எடுத்து வைத்தார் கண்ண பரமாத்மா. ஒவ்வொரு அடியையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எடுத்து வைத்தார். அந்த ஊரின் பெரிய தெருக்களில் நடந்தார். சிறிய சந்துகள் போன்ற குறுகலான தெருக்களுக்கும் சென்றார். ஒவ்வொரு தெருவையும், அதில் உள்ள வீடுகளையும் பார்த்துக்கொண்டே வந்தவர், 'அடடா... அலங்கரித்துக் கொள்ளாமலே வந்துவிட்டோமே!' என்று ஒரு கணம் யோசித்தார். உடனே, அந்தக் குறுகிய தெருவில் இருந்த துணி துவைப்பவரின் வீட்டுக்குச் சென்றார். அவரிடம் துவைக்கப்பட்ட ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு, மீண்டும் தெருக்களில் இறங்கி நடந்தார். அவர் நடையில் பெருமிதம் தெரிந்தது. கண்களில் பரவசம் மின்னியது. ஒரு சிறிய குடிசை வீட்டினுள் நுழைந்தார் கிருஷ்ணன்.

அது மாலாகாரகரின் வீடு. பூக்களையெல்லாம் பறித்து, மாலையாகத் தொடுப்பவரின் இல்லம். 'நான் கிருஷ்ணன் வந்திருக்கேன். எனக்கு ஒரு பூமாலை தருவீர்களா?' என்று ஸ்ரீகிருஷ்ணன் கேட்க... அந்த மனிதர் நெக்குருகிப் போனார். 'கண்ணா... கண்ணா..!' என்று அவரைச் சுற்றி வந்து நமஸ்கரித்தார். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கைகூப்பி வணங்கி, பின்பு கண்மூடியபடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். 'இந்த ஊரில் எத்தனையோ பெரிய தெருக்கள் இருக்கின்றன. அந்தத் தெருக்களில் எத்தனையே பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் தங்க ஆபரணங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களது இல்லங்களுக்குச் செல்லாமல், இந்தச் சிறியவனின் எளிய குடிசைக்கு வந்து, உரிமையாக பூமாலை கேட்கிறாயே... இதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேனோ..!' என்று நெகிழ்ந்து, நெக்குருகி கண்ணபிரானையே பார்த்தார்.

கூடைகூடையாகப் பூக்களை எடுத்து வந்து, ஸ்ரீகிருஷ்ணரின் சிரசில் அப்படியே சொரிந்தார். இரண்டு கைகளாலும் பூக்களை எடுத்து, ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்களில் வைத்து, பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். கண்களில் நீர் வழிய, கிருஷ்ணருக்கு அழகியதொரு பூமாலை சூட்டி மகிழ்ந்தார். ஸ்ரீகிருஷ்ணரும் இதில் மிக மகிழ்ந்து போனார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள இந்த அற்புதமான விஷயத்தை அடுத்தடுத்த யுகங்களிலும் எல்லோரும் சொல்லிப் பூரித்துப் போனார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தாம் நிகழ்த்திய ஓர் உபந்யாசத்தில் இந்த விஷயங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அந்த உபந்யாசகர் விவரிக்க... அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 'இது எனக்கும் நடக்குமா? என் கைகளால் நான் கட்டிய மாலைகளை ஸ்ரீகிருஷ்ணர் ஏற்றுக்கொள்வாரா? என் வீட்டுக்கும் அவர் வருவாரா?' என்று ஏங்கித் தவித்தனர்.

வேறு எவருக்கும் கிடைக்காத பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய நந்தவனத்தில் இருந்த பூக்கள் யாவும் திருமாலுக்கு மாலை ஆகின. அவர்... பெரியாழ்வார். துளசிச் செடிகளுக்கு மத்தியிலே அவதரித்தவள் கோதை எனும் ஆண்டாள். ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்குக் கிடைத்த பாக்கியம்... அந்தப் பரம்பொருளுக்கே மாமனார் ஆனது!

இறைவன் இந்த உலகுக்கு ராமபிரானாக அவதரித்து வந்ததற்குக் காரணம் ராவணனை அழிப்பது என்றும், கிருஷ்ண பரமாத்மாவாக வந்தது கம்சனை அழிப்பதற்கு என்றும் பலரும் சொல்வார்கள். உண்மையில், இந்த அகண்ட உலகில் ராவணனும் கம்சனும் மிகச் சிறிய துகள்; சின்னஞ் சிறிய கொசுக்கள்! இவர்களை இருந்த இடத்தில் இருந்தபடியே பகவானால் அழித்திருக்கமுடியும். ஆனால், உலகத்தில் உள்ள அடியவர்களை, சாதுக்களை ரட்சிப்பதற்காகவே, அவர்களுக்கு சேவை சாதிப்பதற்காகவே இங்கே இறைவன் அவதரித்தார். தன் தேஜஸ் மூலம் அனைவருக்கும் அருள் வழங்குவதே அவர் நோக்கம்!

இதனால் அவருக்கு தேஜோப்ருஷ: எனும் திருநாமம் அமைந்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தேஜஸால் அவரின் அடியவர்கள் அனைவரும் அருளைப் பெற்றனர் என்பதுதான் நாம் அறிந்ததாயிற்றே! ஒவ்வொரு தருணத்திலும் அந்தக் கண்ணபிரான் நமக்காக, நம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தன் தேஜஸ் முழுவதையும் கொண்டு நமக்குச் சேவை சாதிக்கிறார்.

வானில் உள்ள நட்சத்திரங்களையும், கடலின் அலைகளையும் எப்படி எண்ண முடியாதோ, அதுபோல் கண்ணபிரானைச் சுற்றிலும் உள்ள ஆநிரைகளின் எண்ணிக்கையையும் எண்ணமுடியாதாம். பசுவும் கன்றுமாக ஆயிரக்கணக்கில் சூழ்ந்திருக்க, அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வான் ஸ்ரீகிருஷ்ணன். அவனுடன் ஆயிரக்கணக்கான பசுக்கள் மட்டுமா வரும்? நண்டும்சிண்டுமாகக் குழந்தைகளும் குதூகலமாக வருவார்கள்.

ஒருநாள்... வழியில் அகாசுரன் என்பவன் படுத்துக் கிடந்தான். கம்சன் ஏவிவிட்ட ஆள் இவன். மலைப்பாம்பு போல் மிகப் பிரமாண்டமாக வாயைத் திறந்தபடி படுத்துக் கிடந்தவனைப் பார்த்துக் குழந்தைகள் அதிர்ந்து போகவில்லை. இன்றைக்குப் பொருட்காட்சிகள், ஷாப்பிங் மால்கள் என ஏகமாக வந்துவிட்டன. அங்கெல்லாம் ஒரு பிரமாண்ட உருவத்தில் டைனோசர் அல்லது ராட்சச பொம்மை ஒன்று வாய் பிளந்து நிற்கும். அதன் வாயில் நுழைந்து வாலின் வழியே வெளியே வரலாம். குழந்தைகள் அதைப் பார்த்துக் குதூகலிப்பார்களே தவிர, பயப்பட மாட்டார்கள்.

ஆனால், அன்றைக்கு இப்படியெல்லாம் இல்லை என்றாலும், அந்தக் குழந்தைகள் அந்த அசுரனைப் பார்த்துப் பயப்பட வில்லை. ஏனென்றால், அருகில் எது வந்தாலும் காத்தருளுவதற்குத்தான் கண்ணபிரான் இருக்கிறானே!

ஆமாம்... கண்ணன் இருக்க, கவலையும் பயமும் எதற்கு?

No comments:

Post a Comment