Monday, June 16, 2014

கலைந்தது வேஷம்! ஏமாற்ற முற்பட்டால் அதற்கு தண்டனை நிச்சயம்.

திருமணம் நடைபெற்ற பிறகு இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர், ஒரு வேலைக்காரனுடன், கல்யாண மாப்பிள்ளை மட்டும், தனது மாமனார் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது ஒரு கிராமத்தில் வழக்கமாக இருந்தது.
அந்த கிராமத்தில் வசித்த புதுமாப்பிள்ளை முத்தையா, தன் வேலைக்காரனுடன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான். அதிசயமாக, இருவருக்கும் ஒரே உருவம். தனக்கும், கல்யாண மாப்பிள்ளை போல, உடையலங்காரம் செய்தால் மட்டுமே வருவேன் என சொல்லி விட்டான்.
முத்தையாவும் அவனுக்கு உடை வாங்கிக் கொடுத்தான்.
இருவரும் மாமனார் வீட்டை நெருங்கியதும், வேலைக்காரன், முத்தையாவைச் சிறிதுநேரம் தாமதித்து வருமாறு கூறிவிட்டு, தான் முன்னே சென்று மாப்பிள்ளையின் வரவைத் தெரிவிப்பதாக கூறிச்சென்றான். களங்கமற்ற முத்தையாவும் இதை நம்பினான்.
ஆனால், அங்கு சென்றதும், "நான் தான் உங்கள் மாப்பிள்ளை' என சொல்லிவிட்டான். உருவ ஒற்றுமையால், மாமனார், மாமியாரும் வேலைக்காரனையே தங்கள் மாப்பிள்ளை என நம்பி விட்டனர்.
பின்னர் நிஜமாப்பிள்ளை அங்கு வர, அவனை வேலைக்காரனாக கருதி நடத்த துவங்கிவிட்டனர். முத்தையாவுக்கு அதிர்ச்சியாகி விட்டது.
ஒருநாள் வீட்டில் விறகில்லாமல் இருந்தது. முத்தையாவை காட்டுக்கு அனுப்பி விறகு கொண்டு வரச் சொல்லி விட்டான் வேலைக்காரன்.
முத்தையா காட்டுக்குச் சென்று விறகு சேகரித்தான். அவற்றைக் கட்டி எடுத்துச்செல்ல கயிறு கொண்டு வர மறந்துவிட்டான். கஷ்டம் தாங்காமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓவென்று அவன் அழத்தொடங்கினான். இதுகேட்டு, சிவனும் பார்வதியும் அங்கு வந்தனர்.
முத்தையாவிடம் காரணம் கேட்டனர். அவன் நடந்ததை சொல்லவே, பரமசிவன் அவனை சமாதானப்படுத்தி, ஒரு மந்திரத்தைச் சொன்னார். ""இதை நீ சொன்னால், இந்த விறகுகள் மட்டுமல்ல, எது வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளும்' என்று கூறி ஆசிர்வதித்தார்.
அதை முத்தையா சொல்லவே, விறகுகள் ஒட்டிக் கொண்டன!
விறகுக் கட்டுடன் முத்தையா மாமனார் வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டுக்கு வந்ததும் தன் வேலைக்காரன் பால் குடிப்பதை முத்தையா கண்டான்.
அவனைப் பார்த்து மந்திரத்தை முணுமுணுத்தான்! அவ்வளவுதான்! பால் கிண்ணம் வேலைக்காரனின் உதட்டோடு ஒட்டிக் கொண்டது. கிண்ணத்தை வாயிலிருந்து எடுக்க முடியாமல் அவன் திண்டாடினான்.
அவனது பரிதாப நிலையைக் கண்ட மாமியார் பாத்திரத்தை, அவன் வாயிலிருந்து எடுப்பதற்காக வந்தாள்; அவள் தன் கையை அந்தக் கப்பின் மீது வைத்த உடனேயே, முத்தையா மந்திரம் சொல்ல, அவளாலும் கையை எடுக்க முடியவில்லை.
ஒருவர் பின் ஒருவராகக் குடும்பத்திலுள்ள அத்தனை பேரும், மந்திரத்தின் சக்தியால் சங்கிலித் தொடர் போன்று பரிதாப நிலையில் நின்று கொண்டிருந்தார்கள்.
அருகில் வசிக்கும் ஒரு மந்திரவாதியை அழைத்து வரச் செய்தார்கள். அவன் தன் குதிரையை விட்டுக் கீழே இறங்கி, குதிரையைத் தட்டிக்கொடுத்தான்.. உடனே முத்தையா அந்த மந்திரத்தை உச்சரிக்க, அவனது கையும் குதிரையுடன் ஒட்டிக்கொண்டது. முத்தையாவை தவிர, எல்லாரது கையும் ஒட்டிக்கொண்டிருக்கவே, அவனை அழைத்து நடந்த விபரத்தைத் தெரிந்து கொண்டான் மந்திரவாதி.
பின்னர், முத்தையா மீண்டும் பரமசிவனை வேண்ட, எல்லார் கையும் விடுபட்டது. பிறகு, வேலைக்காரனை கடுமையாக அடித்து, வீட்டை விட்டுத் துரத்தினர். ஏமாற்ற முற்பட்டால் அதற்கு தண்டனை நிச்சயம்.

No comments:

Post a Comment