Tuesday, June 24, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 35

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 35

மனிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள்! அதாவது, ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான முகம் என்று சொல்ல வில்லை. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒவ்வொரு சூழலிலும் எத்தனைவிதமான முகங்களைக் கொண்டு செயல்படுகிறோம், பாருங்களேன்!
வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம், வீடு- அலுவலகம் இரண்டிலும் இல்லாமல் வெளியே பொது இடங்களில் இருக்கும்போது வேறொரு முகம் என்று எத்தனை முகங்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்?! ‘அவரு ஆபீஸ்லதாம்பா இப்படி. வீட்டுக்குப் போனா பெட்டிப் பாம்பா அடங்கிடுவாரு’ என்று, அலுவலகத்தில் புலியாக இருப்பவர் தனது வீட்டில் பூனையாக இருக்கிற விஷயத்தை எவ்வளவு கேலியும் கிண்டலும் பொங்கச் சொல்கிறோம்!

அதுமட்டுமா? நண்பரோ உறவினரோ… எதிரில் நின்று பேசுகிற வரைக்கும் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு பேசுவதும், அவர் அங்கிருந்து நகர்ந்ததும் சட்டென்று வேறொரு முகம், வேறொரு நாக்கு, வேறொரு பேச்சு என்று அவரை ஏளனமாக ஏசுவதும் மனித வழக்கத்தில் இருக்கிறது. இப்படிப் பொய்முகங்கள் கொண்டு வாழ்கிற மனிதர்கள் நிறையவே உண்டு!
அதுசரி… பகவானே அப்படித்தான் பல முகங்களைக் கொண்டிருக்கிறான் என்று எவரேனும் சொல்லலாம்.

உண்மைதான். பெருமாளுக்குத் திருமுகங்கள் பல உண்டு. ஒரு முகத்தைக் காட்டியருளும்போது, மற்ற எல்லா முகங்களையும் மறைத்துக் கொள்கிறார். உலக பயன்பாட்டுக்காகவும், அடியவர்களுக்கு அருள்வதற்காகவும் பல முகங்கள், பல அவதாரங்கள் எடுத்துள்ளார் பகவான். ஆனால், மனிதர்களைப்போல் பொய் முகம் காட்டுகிற குணம் பகவானிடம் இல்லவே இல்லை. அவர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர். இன்ப- துன்பங்கள் அவருக்கு இல்லை. நன்மை- தீமை என்று இரண்டு வேறுபட்ட உணர்வுகள் அவருக்குக் கிடையாது. ஏனென்றால்… உலகையே உய்விக்கும் நாயகன், இறைவன்.

தேவை என்பது நமக்குள் வேறுபட்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையானது எனக்குத் தேவையில்லாததாகவும், எனக்குத் தேவையில்லை என்று நான் நினைப்பது உங்களுக்கு மிக மிக அவசியமானதாகவும் இருக்கிறது. எது எப்படியாயினும், உலகின் அனைத்து மனிதர்களும், தேவை என்று ஒவ்வொரு விஷயத்தை நினைக்கின்றனர். அந்த விஷயம் குறித்துக் குழம்புகின்றனர். அதற்குத் தீர்வு எங்கே கிடைக்கும் என்று தேடுகின்றனர். அப்படி ஒரு விஷயத்தைத் தேடினால், அதற்கு உண்டான அர்த்தத்தை அறிய வேண்டும் என்று விரும்பினால், அவை அனைத்தும் எங்கே கிடைக்கும் தெரியுமா? மகாபாரதத்தில் நிச்சயமாகக் கிடைக்கும்.

நமக்கான மிகப் பெரிய வித்தும் சத்தும் அதில்தான் நிரம்பி இருக்கின்றன. மகாபாரதம், நம் தேசத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து. இறைவன் தானே விரும்பி நமக்குத் தந்திருக்கிற கொடை! மகாபாரதத்தில் ஒரு விஷயம் இல்லையெனில், அதனை வேறு எங்கே தேடினாலும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட மகாபாரதத்தைத் தந்தருளியதால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நாயகன் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.
ராமாயணம், சீதையின் வைபவத்தை அழகுற நமக்குத் தந்தருளியது என்றால், மகாபாரதம் ஸ்ரீகிருஷ்ண வைபவத்தை முழுவதுமாகப் பறைசாற்றுகிறது.

ஸ்ரீராமரைப் போல் நாமும் வாழவேண்டும் என்பதே ராமாயணத்தின் சாராம்சம். ஸ்ரீராமரை முன்மாதிரியாக, ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஸ்ரீராம சரிதையின் நோக்கம்!
‘அப்படியெனில், ஸ்ரீகிருஷ்ணரைப்போல் வாழவேண்டும் என்பதைச் சொல்கிறதா மகாபாரதம்?’ என்று எவரேனும் குதர்க்க மாக யோசிக்கலாம்; கேட்கலாம்.

ஸ்ரீகண்ணன் திருடினான், மண்ணைத் தின்றான், ஏகத்துக்கும் பொய்கள் சொன்னான், பதினாறாயிரம் ஸ்திரீகளைக் கொண்டிருந்தான். அதற்காக, ஸ்ரீகிருஷ்ணரை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் அப்படியிருக்கலாமே என்று நினைப்பது பெரும் தவறு. சிந்தனையில் பிழை இருப்பதாக அர்த்தம். ஒட்டுமொத்த வாழ்வியல் தத்துவங்களைச் சொல்கிற உபதேசம் அடங்கிய மகாபாரதத்தில், அர்ஜுனனுக்குச் சொல்வதுபோல அகில உலக மக்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசங்களை மனத்துள் இறக்கி, அதன்படி வாழவேண்டும் என்பதே மகாபாரதத்தின் நோக்கம். ஒவ்வொரு மனிதனும் அந்த உபதேசங்களைச் செயல்படுத்தி, செம்மையாக வாழவேண்டும் என நினைத்தாலே, நம் தேசம் இன்னும் வளமாகிவிடும்!

அப்பேர்ப்பட்ட வாழ்க்கைத் தத்துவங்களைத் தந்த கீதையை அருளிய ஸ்ரீகண்ண பரமாத்மாதான் உலகுக்கெல்லாம் நாயகன்! அதனால்தான் அவனுக்கு ‘நாயகன்’ என்று திருநாமம் அமைந்தது.
பரந்துபட்ட உலகை வழிநடத்துபவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவனே நாயகன். அப்படியெனில் நாயகி? பிராட்டி ஸ்ரீருக்மிணிதேவிதான்!

ஒருவீட்டுக்கு நாயகனாகவும் நாயகியாகவும் இருப்பது பெற்றோர். எனவே, அவர்களின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் சொல்கிற விஷயங்களின்படி நடப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ரோல்மாடலாக இருக்கிற பெற்றோர் சரியாக நடந்தால்தான், பொய்யும் புரட்டுமின்றி வாழ்ந்தால்தான், குழந்தைகளும் அவற்றைப் பார்த்து, அதன்படியே நடக்கும். அதனால்தான் தந்தையை குடும்பத்தலைவன் என்றும், தாயை குடும்பத்தலைவி என்றும் சொல்கிறோம். ஆனால், நமக்கெல்லாம் தலைவனும் தலைவியுமாக, நாயகனும் நாயகியுமாக இருப்பவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவும் ஸ்ரீருக்மிணி பிராட்டியாரும்.

ஸ்ரீகிருஷ்ணன் நாயகன் என்றால், யுத்தத்தில் முன் நின்று அல்லவா போர் செய்திருக்க வேண்டும் என்று கேட்கலாம். ஆமாம்… முன்னால்தான் நின்றுகொண்டிருந்தான் ஸ்ரீகிருஷ்ணன். ஒரு தேரைச் செலுத்துபவன் பின்னாடி இருந்துகொண்டு எப்படி ஓட்ட முடியும்? அர்ஜுனனை உட்காரச் சொல்லிவிட்டு, முன்னே ஏறிக்கொண்டுதானே தேரைச் செலுத்தினான்! என்னதான் அர்ஜுனன் வீரன், சூரன் என்றாலும்கூட, அம்பும் வில்லும் வைத்திருந்தாலும், தேர் எப்படிச் செல்லவேண்டும், எங்கே பள்ளம் இருக்கிறது, எந்தத் தருணத்தில் குதிரை திமிரும் என்பதை அறிந்து, அந்தத் தேரைச் செலுத்துவதற்கான கடிவாளம் பகவானிடம்தானே இருந்தது!

இந்திரியம் எனும் குதிரையை நம்மால் அடக்கமுடியாது. அதை அடக்கியாள்வதற்கு மனம் என்கிற கடிவாளம் தேவையாக இருக்கிறது. அந்த மனத்தில் இறைவனை நினைத்து அமர்த்திக்கொண்டுவிட்டால், மனத்தை அப்படியே இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால், கடிவாளம் போட்டு இந்திரியங்களை அடக்கி, நம்மை நிம்மதியுடனும் அமைதியுடனும் இனிதே வாழச் செய்வான் நாயகன் ஸ்ரீகிருஷ்ணன்.

மனத்தைக் கடவுள் பக்கம் திருப்புங்கள். மொத்த மனத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்குப் பெயர்தான் சரணாகதி!

கடவுளிடம் சரணடைதல் என்பது உயர்வான விஷயம். உத்தமமான காரியம். அப்படி ஒப்புக்கொடுக்கிறவர்களே, சரணடைபவர்களே பாக்கியவான்கள்!

No comments:

Post a Comment