Monday, June 16, 2014

விசாகன்' என்ற திருநாமத்திற்கு, "பறவை மீது சஞ்சரிப்பவன்' என்று பொருள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. திருவாதிரை சிவபெருமானுக்கும், திருவோணம் மகாவிஷ்ணுவிற்கும் உரியவை. முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரம் விசாகம்.
முருக அஷ்டோத்திரத்தில், "ஓம் விசாகாய நமஹ' என்று அவரது நட்சத்திரம் குறித்து வருகிறது. ஆதிரையான் என்று சிவபெருமானையும், ஓணத்தான் என்று மகாவிஷ்ணுவையும் குறிப்பிடுவதைப் போல, விசாகன் என்று முருகனை நட்சத்திரத்தின்
பெயரால் குறிப்பிடுகிறார்கள். "விசாகன்' என்ற திருநாமத்திற்கு, "பறவை மீது சஞ்சரிப்பவன்' என்று பொருள்.
"மயிலேறிய மாணிக்கமே!' என்ற அருணகிரிநாதரின் வாக்குப்படி, முருகப்பெருமான் மயில் மீது ஏறி சஞ்சரிப்பவர் என்பது தெரியும். ஆனால், மயில் வாகனத்திலேயே, பல மயில் வகை உண்டு. அவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மயில் வாகனங்களில் ஒன்று வைகாசி விசாகத்தோடு தொடர்புடையது. முருகப்பெருமான் திருஅவதாரம் செய்தவுடன், அனைவரும் குழந்தையைத் தரிசிக்க வந்தார்கள். அப்போது சூரியபகவானும், அக்னியும் தங்கள் திருமேனியில் இருந்து
மயிலையும், கோழிக்கொடியையும் உருவாக்கி முருகப்பெருமானுக்கு அளித்தார்கள். அன்று முதல் முருகனுக்கு மயில் வாகனம் <உருவானது. இதையடுத்து வேதமும் மயிலானது. "ஆன தனி மந்த்ர ரூபநிலை கொண்டதாடு மயிலென்பதறியேனே' என அருணகிரிநாதர் கூறுகிறார்.
இதே கருத்தை மயூராதிரூடம் என்ற சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரரும்(தேதியூர் உரை) துதிக்கிறார். இது இரண்டாவது மயில்.
அடுத்தது முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிடும் போது, தேவேந்திரன் மயிலாக இருக்க, அதன் மீது ஆரோகணித்து சூரபத்மனுடன் போரிட்டார். இது மூன்றாவது மயில்.
சூரசம்ஹாரம் முடிந்த பின், சூரன் மயிலாகவும் கோழிக்கொடியாகவும் ஆனான். இது நான்காவது மயில். கோயில்களில் நாம் தரிசிக்கும் மயில் எந்த மயில்?
முருகப்பெருமானுக்கு இடது கைப்புறமாக மயிலின் முகம் இருந்தால் அது இந்திர மயில்.
அவரது வலதுகைப் புறமாக மயிலின் முகம் இருந்தால் அது சூரபத்ம மயில். மயிலின் முகம் நேருக்கு நேராக நம்மைப் பார்ப்பது போலிருந்தால் அது வேதமயில்.
இந்த மூன்று மயில்களையும் கோயில்களில் நாம் தரிசிக்க முடியும். ஆனால், தரிசிக்க முடியாதது சூரியமயில். இதில் மயிலின் முகம் முருகனின் பின்புறம் பார்ப்பது போலிருக்கும்.
இந்த நான்கு மயில்களில் ஒன்றான வேதமயில் மீது ஆரோகணித்த(ஏறிக் கொண்டு) முருகப்பெருமான்., உலகை வலம் வந்த திருநாள் தான் வைகாசி விசாகம். அந்த உமா சுதன் (பார்வதி மைந்தன்) நம் உள்ளங்களிலும் எழுந்தருளி, வேதம் வகுத்த நெறியில் நம்மை வழிநடத்த வேண்டுமென விசாகத்திருநாளில் வணங்கி வருவோம்.

No comments:

Post a Comment